ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 1:
மொழிநடையில் சுலபமாக, பக்தர்கள் உருகிப் பாட ஏதுவாக விளங்கும் அம்பிகையின் துதிகளில் முக்கியமானது ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம். அந்த காமாக்ஷியம்மை விருத்தத்தில் விளங்கும் சாக்த தாத்பர்யங்களையும், அம்பாளின் பரம வைபவத்தையும், தேவி பராக்ரமத்தையும், காமாக்ஷி அம்பாளின் காருண்யத்தையும் முடிந்த மட்டுக்கும் எடுத்துக்கூறும்படியான ஒரு தொடர் ப்ரவசனமே இது. ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தத்தின் வைபவத்தை சிந்திப்போம் தொடர்ந்து.
சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே எனும் முதல் பாடலின் முதல் வரியின் ப்ரவசனம்.
சுந்தரி — ஶ்ரீவித்யா ஸ்வரூபிணியான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி. ஸுந்தரி வித்யை வடிவானவள். ஶ்ரீவித்யை காட்டும் நிர்குண வடிவ பிலாகாச ரூபிணி.
சவுந்தரி — ஸகுண வடிவாய் உலகிற்கருள் புரிய சதுர்புஜையாய் பதுமாசனியாய், பாசாங்குசம் கரும்புவில் புஷ்பபாணத்துடன் தோன்றிய பரை.
நிரந்தரி — என்றுமே நித்யமாய் விளங்கும் பரப்ரஹ்ம ஸ்வரூபிணி.
துரந்தரி — ச்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், த்ரோபாவம், அனுக்ரஹம் எனும் பஞ்ச கார்யங்களையும் ஏற்கும் துரந்தரி
ஜோதியாய் நின்ற உமை — தேவ காரியத்திற்காக, ஆகாச ரூபத்தை துறந்து, ப்ரளயாக்னி வடிவில் தோன்றி ப்ரஹ்மாண்டங்களை அழித்த பரம் பொருள். பின்னர் ஶ்ரீமாதாவாக தோன்றிய விஷயத்தை அடுத்த வரி விவரிக்கிறது.
தொடர்ந்து ஶ்ரீகாமாக்ஷி பரதேவதையின் விருத்தத்தின் மஹிமையை சிந்திப்போம்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
💐🙏💐🙏💐🙏