Happy Hanuman Jayanthi to all!
Here are the quotes from Swami Vivekananda followed by Mahaperiyava’s upanyasam on Anjaneyar from Deivathin Kural Vol1.
We have to make the character of Hanuman our ideal. See how at the command of Ramachandra he crossed the ocean. He had no care for life or death! He was a perfect master of his senses and wonderfully sagacious. You have now to build your life on this great ideal of personal service. Through that, all other ideals will gradually manifest in life. Obedience to the Guru without questioning, and strict observance of Brahmacharya — this is the secret of success. As on the one hand Hanuman represent the ideal of service, so on the other hand he represents leonine courage, striking the whole world with awe. He has not the least hesitation in sacrificing his life for the good of Rama. A supreme indifference to everything except the service of Rama, even to the attainment of the status of Brahma and Shiva, the great World – gods! Only the carrying out of Shri Rama’s best is the one vow of this life! Such whole – hearted devotion is wanted. – Swami Vivekananda
________________________________________________________________________
ஆஞ்சநேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அநுக்கிரஹம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும்.
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமத்ஸ்மரணாத் பவேத் ||
ஆஞ்சநேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அநுக்கிரஹிக்கிறார் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம் விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருகிறார் அவர்.
சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார், ஆஞ்சநேயர்.
இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைகூட, அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு விநயம் இருக்காது. பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்ஜநேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப் போலவே விநயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார். மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாஸனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார். பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தில் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டுபக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டைகூடப் போட்டுக் கொள்வார்கள். ஆஞ்சநேயரோ ராமச்சந்திர மூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரமஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸநகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீ ராமன் ஆஞ்சநேய ஸ்வாமியை முன்னால் வைத்துக் கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று ‘வைதேஹீ ஸஹிதம்’ சுலோகம் சொல்கிறது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர். பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்சநேயர் செய்தது என்றும் சொல்வார்கள். ஒன்பது வியாகரணமும் தெரிந்த ‘நவ வ்யாகரண வேத்தா’ என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அநுபவிக்கிறார்.
பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம் (ideal).
ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்சநேய ஸ்வாமிதான்.
இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காமனையும் இல்லாமல் ராமனுக்கு சேவை செய்தே நிறைந்துவிட்டார்.
அவரை நம் சீமையில் பொதுவாக ‘ஹநுமார்’ என்போம். கன்னடச் சீமையில் அவரே ‘ஹநுமந்தையா’. சித்தூருக்கு வடக்கே போய்விட்டால் ஆந்திரா முழுவதும் ‘ஆஞ்சநேயலு’ என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க ‘மாருதி, மாருதி’ என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் ‘மஹாவீர்’ என்றே சொல்வார்கள்.
ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசிந்துவிடும். பரம விநயத்தோடு பகவத் கைங்கரியம் செய்துகொண்டு எல்லோருக்கும் நல்லது செய்வோம்.
‘ராம், ராம்’ என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார்.
இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அநுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது, நாம் உயர உயரத் துள்ளிக்கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக் கொள்கிறோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈசுவரப் பிரஸாதம் கிடைக்கும். அதுதான் நிறைந்த நிறைவு. நமக்கு ஆஞ்சநேயர் அநுக்கிரகம் பண்ண வேணும்.
அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்மராஜ்யம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசிந்தபோது ஆஞ்சநேய அவதாரமாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸம்ஸ்தாபனம் செய்தார். இன்னும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அநுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அநுக்கிரஹத்தைச் செய்வார்.
ஆஞ்ஜநேய ஸ்வாமின: ஜெய் ||
![]()

3 Responses
Hara Hara Sankara Jaya Jaya Sankara Kanchi Sankara Kamakoti Sankara
Jai Veera Hanuman
Jai Sri Ram
🙏💐🙏💐🙏💐