Vinayagar Agaval-Part 20

Vinayaka Chaturthi

விநாயகர் அகவல் – பாகம் 20
 

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.
 
35. ஆறாதாரத்து அங்குச நிலையும்
36.  பேறா நிருத்திப் பேச்சுரை அறுத்தே
 
பதவுரை:

ஆறு ஆதாரத்து – ஆறு ஆதாரங்களில்

அங்குச நிலையும் – அங்குசம் போன்ற நிலையும்
பேறா நிறுத்தி – நிலை பெயரால் ஸ்திரமாக நிற்கச் செய்து
பேச்சு உரை அறுத்து – பேசும் பேச்சை விடச் செய்து (என்னை மௌனியாக்கி)
 
விளக்கவுரை:

யோகத்தில் இரண்டு வகை உண்டு. அவை ஆதாரம், நிராதாரம் என்பவை.  இந்த இரண்டு நிலையும் ஆன்மாவை இறைவனிடம் சேர்க்கும் வழி.  மனித சரீரத்துக்குள் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விஷுத்தி, ஆக்ஞா – என்ற ஆறு சக்கரங்கள் இருந்து வருகின்றன.

குதம், குறிகளின்  இடையில் மூலாதாரம் உள்ளது.  இங்கு பிருத்வி தத்துவம் விளங்கி வருகிறது.  மற்ற எல்லாவற்றிற்கும் ஆதாரமாகத் திகழ்வதால், இதற்கு மூலாதாரம் என்று பெயர்.  மூலாதாரம் நலிவடைந்தால், உடல் சாய்ந்துவிடும், அல்லது ஆகாயத்தில் பறந்துவிடும்.  இந்த மூலாதாரத்தில் இருப்பவர் மஹாகணபதி.
 
குறிமூலத்தில் ஸ்வாதிஷ்டானம்.  இங்கு இருப்பவர் பிரம்ம தேவர்.
நாபியில் மணிப்பூரகம்  உள்ளது. இதற்கு தெய்வம் திருமால் (விஷ்ணு)
ஹ்ருதயத்தில் அனாஹதம்.  இங்கு இருக்கும்  தெய்வம் ருத்ரன்.
கண்டத்தில் (கழுத்து பகுதி) இருப்பது விஷுத்தி சக்ரம். இங்கு விளங்கும் தெய்வம் மகேஸ்வரன்.
புருவமத்தியில் இருப்பது ஆக்ஞா சக்ரம். சதாசிவன் இதற்கு தெய்வம்.
 
இந்த ஆறு ஆதாரங்களும் வீணாத்தண்டின் அடியிலிருந்து செங்குத்தாக நட்டுவைத்த அங்குசம் போல், புருவ நடு வரை அங்கங்கே இருக்கின்றன.  இந்த ஆறு ஆதாரங்களையும் இணைத்துக்கொண்டிருப்பது சுஷூம்னா நாடி.
 
அந்த அந்த ஆதாரங்களில் உள்ள தெய்வ வடிவங்களை நியதிப்படி ஆழ்ந்து நினைக்க நினைக்க அந்த தெய்வங்களின் தரிசனம், சாதகனுக்கு சூக்ஷ்மமாக கிடைக்கும். அந்த தெய்வீக அனுபவத்தில் ஆன்ம உணர்வு கலந்து நிற்கும்.  அந்த நிலையில் தியானம் செய்கிறவன், தியானம் செய்யப்படும் பொருள், தியானம் – ஆகியவை நீங்கிவிடும்.  இது ஒரு அற்புத யோக சாதனை. இது ஆதார யோகம்.
 
மேல் சொன்ன நிலை நன்றாக சாதகனுக்கு கைவந்தபின், அவன் கற்பனை கடந்து,ஆனால் எந்த வஸ்துவிலும் கலவாமல், அந்த அகண்டப் பேரொளியை உள்ளக்கண்ணால் உணரமுடியும்.  அவன் வேறு நான் வேறு என்ற நினைவு நீங்கும்.  இந்த அத்வைத நிலையில் சாதகன் நிலைபெற்றிருக்கும் போது, தன்னுடைய சுய ஸ்வரூபமாகிய ஆனந்தப் பெரு நிலையில் ஆன்மா  இறைநிலையில் கலந்து நிற்கும்.  இது நிராதார யோகம்.
 
பெருந்தவ யோகிகள் எல்லாம் யானைப் பாகன் அங்குசத்தால் யானையை அடக்குவதுபோல், பிராணனை, இடை, பிங்கலை வழியே விரயம் செய்யாமல் ஆறு ஆதாரங்கள் வழியே செல்லுமாறு அடக்கி அப்யாசிக்கின்றனர். இந்த அருமை தத்துவத்தை, யோக சூக்ஷ்மத்தை, கணபதி ஒளவ்வைக்கு உபதேசம் செய்கிறார்.  அதை அப்படியே உணர்ந்த உள்ளனுபவ உண்மையை ஒளவ்வையும் அப்படியே இந்த வரிகளில் பிரதிபலிக்கிறார்.  இதுவே “ஆறு  ஆதாரத்து அங்குச நிலை”.  இதுவே கணபதி கையில் தரித்திருக்கும் அங்குசத்தின் சூக்ஷ்மம்.  மோனம் என்பது ஞானத்தின் வரம்பு அன்றோ?இந்த நிலையை எய்தினால், பேச்சுக்கு என்ன வேலைஅதனால்  “பேச்சு உரை அறுத்தே” என்றார் !!

மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.

Loading

One Response

  1. superb.
    when this is complete, can you make it available as one compilation? Will be nice to have it for reference.

    Sri Gurubyo Namaha

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading