விநாயகர் அகவல் – பாகம் 2

mukkuruni-vinayagar

ஸ்ரீ மகாபெரியவா சரணம்

ஸ்ரீ கணேச சரணம்

விநாயகர் அகவல் என்ற தலைப்பின் பெருமையை பார்த்த பின், ஸ்ரீ மஹா பெரியவாளையும், விநாயகரையும் வேண்டிக்கொண்டு, பாடல் வரிகளில் நுழைவோம்.

  1. சீதக் களபச் செந்தா மரைப்பூம்
  2. பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பதவுரை:

சீதம் – தாபத்தை தணிக்கக் கூடிய, குளிர்ச்சியான

களபம் – களப மணம் கமழ்கின்ற

செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு – சிவந்த தாமரை போன்ற திருவடிகளில் அணியப் பட்டுள்ள  சிலம்பு

பல இசை பாட – பலவிதமான நாதங்களை (ஒலிகளை) எழுப்ப

பாடலைப் பாட எடுத்த எடுப்பிலேயே ஔவையாருக்கு கணபதியின் திருவடி தான் நினைவுக்கு வருகிறது.  அது எத்தகைய திருவடி? நமது தாபத்தை தணிக்கக்கூடிய குளிர்ச்சியான சிவந்த தாமரை போன்ற திருவடிகள்.  அந்த திருவடியில் உள்ள சிலம்பிலிருந்து பலவிதமான  நாதங்கள் எழுகின்றன.

நமது உடலில் ஆறு சக்கரங்கள் இருக்கின்றன. அவை: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விஷுத்தி, ஆக்ஞா என்பவை.  இதில் மூலாதாரம் மிகவும் முக்கியமானது.  இந்த க்ஷேத்ரத்தில்தான் கணபதி இருக்கிறார். அங்கு (மூலாதார சக்கரத்தில்) மூலக்கனல் எப்பொழுதும் ஜ்வாலையாக கனன்று கொண்டு இருக்கிறது. உடலில் உள்ள மற்ற பொறி புலன்கள் எல்லாம், இந்த ஜ்வாலையிலிருந்தே உயிர் பெறுகின்றன. இந்த அற்புதக் கனலே நம் ஆன்ம வாழ்விற்கு ஆதாரம்,  ஆரம்பம்.  அது அணைந்துவிடாதபடி நம்மை காப்பாற்றுகிறார் கணபதி.  ஞானக் கொழுந்தாகிய விநாயகரின் திருவடிகள் அம்மூலகனலின் முன்பு இருக்கின்றன.  வெப்பத்தைக்  காட்டாமல், குளிர்ச்சியாய் உள்ள அவர் திருவடிச் சிலம்பிலிருந்து சப்த பிரஹ்மம் / (வாக் பிரபஞ்சம்,  ஒலி உலகம்) எழுகிறது.  இந்த வாக் பிரபஞ்சமே பரா, பச்யந்தி, மத்யமா, வைகரி – என்று விரிவடைந்து, சப்தகோடி  (ஏழு கோடி ) மந்திரங்களாகவும், வேதமாகவும் வெளிப்படுகிறது.

த்வம் சத்வாரி வாக் பதானி – என்று கணபதி அதர்வஷீர்ஷமும்,

சத்வாரி வாக் பரிமிதா பதானி – என்று வாக் சூக்தமும் சொல்லுவதை அவ்வையார் ‘பல இசை பாட’ என்கிறார்.

இந்த நாதத்திலிருந்தே  சுத்த மாயா (தூய்மையானது), பிரக்ருதி மாயா (தூய்மை அற்றது), மிஸ்ர மாயா (இரண்டும் கலந்தது) – என்ற மூன்று மாயைகளும், அவற்றின் செயலால் உருவாகும் உலகங்களும் எங்கும் விரிந்து வ்யாபிகின்றன.

மூலாதாரத்திலிருந்து நாத நயம் தோன்றி உலகம் உருவாகிறது. இன்ப நடனம் செய்கிறான் எம்மான்.  [மூலாதார சக்கரத்தில் ஆனந்த பைரவரும் ஆனந்த பைரவியும் செய்யும் நடனத்தை ஸ்ரீ ஆதி சங்கரர் சௌந்தர்யலஹரியில் 41 -ம் ஸ்லோகத்தில் ‘தவாதாரே மூலே ” என்ற ஸ்லோகத்தில்  – அமைத்துள்ளார்.]

இவ்வாறு விநாயகர் அகவல் ஆரம்பத்திலேயே திருவடி தரிசனம் ஆகிறது.  திருவடிகளின் பெருமையை 22-ம் அடியும் விளக்குகிறது.  பாடலின் கடைசி அடியும் “வித்தக விநாயக விரைகழல் சரணே” என்று திருவடிகளிலேயே சரணடைகிறது.

அடுத்ததாக திரு இடை தரிசனம்

  1. பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
  2. வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்ப

பதவுரை:

பொன் அரைஞாணும் – தங்கத்தால் ஆகிய அரை ஞாண்  கயிறும்
பூந்துகில் ஆடையும் – மென்மையான வெண்பட்டு ஆடையும்
வன்ன மருங்கில் – அழகிய திரு இடையில்
வளர்ந்து அழகு எறிப்ப –  மென்மேலும் அழகு மிகுந்து ஒளிபரப்ப

அவ்வைக்கு பாத தரிசனம் காட்டிய விநாயகன், தன் அழகிய இடையையும் காட்டுகிறான்..

விநாயகருக்கு வெண்பட்டு ஆடை:  பூந்துகில் ஆடை- இதில் வரும் துகில் உடையை  உணர்த்தாமல், வெண்மை நிறத்தையே உணர்த்தும்.  ‘சுக்லாம் பரதரம்’ என்னும் பிரசித்தமான ஸ்லோகமும் விநாயகரை சுக்ல – அம்பரதரராக (வெண்மை நிற ஆடை அணிந்தவராக) காட்டுகிறது.

இதுவரை பார்த்த அகவல் வரிகள்:

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப

இதை நாம் நெற்று பண்ணுவோமா?

அடுத்ததாக வருவது திரு வயிறு, வதன தந்தம் போன்றவை:  அடுத்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ரீ மகாபெரியவா சரணம்

ஸ்ரீ கணேச சரணம்



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. Very informative. This is a treasure. We have collected from Part 1 to 9 however we missed Part 3. Is it possible to resend Part 3?
    We are looking forward to chapters beyond 9.

    Periyava Charanam.

    Prasad & Chandra

  2. Maha Ganapathaye Namaha! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

Leave a Reply to kahanamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading