ஆனைமுகனுக்கு தந்தம் தந்த மகாபெரியவா!

Thanks to Hinduism for the article

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா…

periyava_pillayar_pillar
கோயில் நகரம் எனப்படும் திருக்குடந்தையை, காசி க்ஷேத்திரத்தைவிட வீசம் அதிகம் கொண்ட தலம் என்று போற்றுவர். அதற்குக் காரணம், இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீபகவத் விநாயகர்! கும்பகோணம் மடத்துத் தெருவில், கிழக்கு நோக்கி கோயில் கொண்டிருக்கிறார் இந்தப் பிள்ளையார்.

பன்னெடுங்காலத்துக்கு முன்பு, இந்தத் தெருவில்தான் காவிரியின் கரைப் பகுதி இருந்ததாம். பிறகு அகண்ட காவிரி, தனது அகலத்தைக் குறைத்து ஓடத் துவங்கியதாகச் சொல்வர். தற்போது இங்கே கோயில் தனியாகவும், பகவத் படித்துறை என்பது தனியாகவும் அமைந்துள்ளது.

வேதாரண்யம் எனும் ஊரைச் சேர்ந்தவர் பகவர் முனிவர். இவரின் தாயார் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தார். ஒருநாள், தன் மகனிடம்… ‘நான் இறந்த பிறகு, என்னுடைய அஸ்தியை ஒவ்வொரு தலத் துக்கும் எடுத்துச் செல்வாயாக! எந்தத் தலத்தில் அஸ்தி புஷ்பமாக மாறு கிறதோ, அங்கே கரைத்துவிடு! இதுவே என் கடைசி விருப்பம்’ என்று சொல்லி மறைந்தார். பகவர் முனிவர், தாயாரின் இறுதிக் காரியங்களை முடித்தார். ‘இந்த அஸ்தி, காசியில்தான் பூக்களாக மாறும்’ என நினைத்தபடி, யாத்திரைக்கு ஆயத்த மானார். அஸ்தியை சிறிய பானை ஒன்றில் வைத்துக் கட்டிக் கொண்டு, சீடர்களுடன் புண்ணியத் தலங்கள் தோறும் சென்றார். திருக்குடந்தைக்கு வந்தவர், காவிரியில் நீராடினார்.

அப்போது அவரின் சீடர், கரையில் இருந்த விநாயகர் திருவிக்கிரகத்துக்கு எதிரில் வைக்கப்பட்டிருந்த அஸ்திப் பானையைத் திறந்து பார்த்தார். அதில் பூக்கள் நிரம்பியிருந்தன. ஆனால் அந்தச் சீடர், ‘பானையை ஏன் திறந்தாய்?’ என்று குருநாதர் திட்டுவாரோ என்று பயந்து, அமைதியாக இருந்துவிட்டார்.

பிறகு, குடந்தைத் தலத்தில் இருந்து வழியில் உள்ள தலங்களை தரிசித்தபடி, காசியம்பதிக்குச் சென்றார் முனிவர். அங்கே சென்று, பானையைத் திறந்தபோது, அதில் அஸ்தியே இருந்தது. அதைக் கண்டு சீடர் அதிர்ந்தார். ‘குருநாதா, என்னை மன்னியுங்கள். திருக்குடந்தையில், காவிரி ஆற்றில் நீங்கள் நீராடியபோது, அஸ்தி கலசத்தைத் திறந்து பார்த்தேன். பூக்களாக மாறியிருந்ததைக் கண்டேன்’ என்றார். அதைக் கேட்ட முனிவர், உடனே திருக்குடந்தைக்கு திரும்பினார். காவிரி ஆற்றங்கரையில் இருந்த ஸ்ரீவிநாயகரின் சந்நிதிக்கு முன்னே அஸ்தியை வைத்து, மனமுருக வேண்டினார். பிறகு அஸ்திப் பானையைத் திறந்து பார்க்க… உள்ளே பூக்கள் நிரம்பியிருந்தன. அதையடுத்து காவிரியில் நீராடி, உரிய கிரியைகளைச் செய்து முடித்தார்.இதனால், ‘காசியைவிட அதிகம் வீசம் கொண்ட க்ஷேத்திரம்’ என்பதை உணர்ந்து, சிலிர்ப்புடன் வழிபட்டாராம் முனிவர்.

அஸ்தியானது பூக்களாக மாறிய காவிரிக்கரையே பகவத் படித்துறை என்றும், பகவர் முனிவர் வழிபட்டதால் இந்தக் கணபதிக்கு ஸ்ரீபகவர் விநாயகர் என்றும் பெயர் அமைந்ததாம். இங்கே ஸ்ரீபகவர் முனிவருக்கும் அவரின் சீடருக்கும் விக்கிரகங்கள் உள்ளன.

காஞ்சிப் பெரியவர் கும்பகோணம் வரும்போதெல்லாம், இந்த விநாயகரை வணங்கிச் செல்வாராம். 1952-ஆம் வருடம், காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான சந்திரமௌலீஸ்வரன் எனும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது காஞ்சி மகாபெரியவா, யானையின் இரண்டு தந்தங்களையும் ஸ்ரீபகவத் விநாயகருக்கு அளித்து வழி பட்டார். சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி முதலான வைபவங்களில் ஸ்ரீபகவத் விநாயகருக்கு, அந்த தந்தங்களைக் கொண்டு அலங்கரித்து வழிபடுவது வழக்கமாம்!

மார்கழியில் சிறப்பு பஜனை, சங்கடஹர சதுர்த்தியில் தங்கக் காப்பு அலங்காரம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் உத்ஸவம் என அமர்க்களப்படும் ஆலயம். அப்போது, ஸ்ரீபகவத் விநாயகருக்கு கொழுக்கட்டையும் அருகம்புல் மாலையும் சமர்ப்பித்து வழிபட, நன்மைகள் கைகூடும்!

Loading

4 Responses

  1. Maha Perivaa TRULY Sarveswara Avatharam.Hence, the Samarpanam to SriBhagavath Vinayagar ,the holy Dhantha of the Elephant Chandramouleeswara.

  2. REALLY EXCELLENT I have taken bath several times in that “Bhgavath Padithurai’ and worshipped
    Sri Vinayagar at Kumbakonam but I did not know this fact behind this, Thanks a lot for the message

  3. காசியில் செய்த பாபங்கள் கூட கும்பகோணத்தில் போகும் என்ற பழமொழிக்கு ஒரு சான்று.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading