அனுஷ்டானங்கள், பூஜா….வெறும் சடங்கு அல்ல! – My favorite topic

நான் சொல்கிற கர்மாநுஷ்டானங்கள், பூஜை முதலியனவெல்லாம் ‘வெறும்’ சடங்குதானே என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆத்மாநுபவம் என்பது உள் விஷயம். சடங்குகளோ வெளிக் காரியங்கள். இவை எப்படி ஆத்மாநுபவத்துக்கு உதவும் என்பது அவர்களுடைய சந்தேகம்.

உண்மையில் ஆத்மாநுபவம் பெற்றுவிட்டால் சடங்கே தேவையில்லைதான். ஆனால், உண்மையான ஆத்மாநுபவம் நமக்கு வந்துவிட்டதா, அதற்கு நாம் பக்குவப்பட்டு விட்டோமா என்று அந்தரங்க சுத்தமாகப் பார்த்துக்கொண்டால், நாம் அதற்கு

எவ்வளவோ தூரத்தில் நிற்கிறோம் என்று தெரியும். எத்தனையோ ஜன்மாக்கள் எடுத்து, எத்தனையோ கர்மாக்களைச் செய்து, அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமான ஆத்மானந்தத்தை மூடிக் கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்தும் ஸத் வாஸனைகளைப் பெருக்கிக் கொண்டும்தான் பழைய துஷ்கர்மங்களையும்

துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கர்மா தானே நின்று போகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் ‘வெறும்’ சடங்கு என்று சொல்கிற கர்மங்கள், பூஜை எல்லாம் நமக்கு ரொம்பவும் அவசியமானவையே.

உண்மையான ஆத்ம தியானத்துக்குச் சடங்கு வேண்டாம் என்பதுபோல், ஈசுவரன் என்ற மூர்த்தியும் வேண்டாம்தான். ஆனால், அது உயர் நிலையில்தான். ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று இருக்க முடியாது. முதலில் ஈசுவரன் மிகவும் தேவை. அதற்கு எத்தனையோ காரணங்கள். குறிப்பாக ஒன்றைச் சொல்கிறேன். நன்மை எல்லாம் நிறைந்த மூர்த்தியாக நமக்கு ஓர் உத்தம உதாரணம் தேவைப்படுகிறது. தொன்றுதொட்டு ஈசுவரனை இப்படிப்பட்ட அனந்த கல்யாண குணமூர்த்தியாகத்தானே பாவித்து வந்திருக்கிறோம்!

‘ஈசுவரன்’ என்றவுடன் அவரிடம் கெட்ட குணம் ஏதுமே இருக்காது என்றுதானே நமக்கு நிச்சயமாகத் தோன்றுகிறது? அழகு, கருணை, சக்தி, ஞானம் எல்லாவற்றிலும் பூரணமாக ஒன்று உண்டு என்றால் அது ஈசுவரன் என்ற கருத்துத்தான். மனோதத்துவப்படி நாம் எதை நினைத்துக் கொண்டேயிருக்கிறோமோ, அதுவே ஆகிறோம்.

எனவே சடங்கு, பூஜை இவற்றால் உண்டாகிற மற்ற பலன்களோடு, அவை நம்மை நல்லவர்களாக்க மிகுந்த உதவி புரிகின்றன; காரியமற்ற தியான யோகத்தில், ஞான விசாரத்தில் நம்மைச் சேர்க்க நிரம்ப உபகாரம் செய்கின்றன

Thanks to Well-bred Kannan@FB.

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading