Sri Kamakshidasan – Part II

‘காமாட்சிதாசன்’ சீனிவாசன், கிரகஸ்தர்தான். ஆனால் முறையே வருமானம் ஏதும் தொடர்ந்து வருவதில்லை. அதேநேரம், கடந்த 50 வருடங்களாக, தினசரி பூஜைக்கு ஒரு குறையும் இல்லை!

தேவி மகாத்மியம் பாராயணம் (700 ஸ்லோகம்), ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் (300 ஸ்லோகம்) மற்றும் நவாவர்ண அர்ச்சனை, ஸ்ரீமடத்தில் செய்வது போலவே ஸ்ரீருத்ரம், சமகம், தினமும் மூன்று கால பூஜை என அமர்க்களப்படும், அவரின் இல்லம்.

அவரின் வீடு ஸ்ரீகாமாட்சியின் அருளால் நிரம்பியிருந்தது; அவரின் மனம் பெரியவாளின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தது. உணர்ச்சி மேலிட, சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார் காமாட்சிதாசன் சீனிவாசன்…

”ஒருமுறை, உத்தமதானபுரத்துக்கு ஒன்பது சந்நியாசிகள் வந்திருந்தாங்க. அவங்க எல்லாருமே கையில் தண்டம் வைச்சிருப்பாங்க. சந்நியாசிகளின் அனுஷ்டானங்களில், தண்டம் வைச்சுக்கறதும் ஒண்ணு. அது சாதுர்மாஸ்ய காலம்! ஒன்பது சந்நியாசிகளும், மத்தியான நேரத்துல அம்பாளைத் தரிசனம் பண்றதுக்காக வந்தாங்க.

‘எங்களை மகாபெரியவா அனுப்பிச்சு வைச்சார். ‘சின்ன பையன் ஒருத்தனுக்குப் பூஜை பண்ணி வைச்சிருக்கேன். உங்களுக்கு ஏதோ சந்தேகம்னு சொன்னேளே, அவன்கிட்ட கேளுங்கோ, நிவர்த்தி பண்ணி வைப்பான்’னு அவர் சொன்னார்’ன்னாங்க.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு.  சின்னவ னான எங்கிட்ட, இந்த சந்நியாசிகளைப் பெரியவா அனுப்பி வைச்சிருக்காரேன்னு பயம் வந்துடுச்சு! இருந்தாலும், ‘என்ன சந்தேகம்? கேளுங்கோ’ன்னேன்.

அவர்கள் தங்களது சந்தேகத்தைச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் என்ன கேட்டார்கள்; நான் என்ன பதில் சொன்னேன்னு எதுவுமே எனக்கு நினைவில்லை! ஏதோ, மனப்பாடம் பண்ணி கடகடன்னு ஒப்பிக்கற பள்ளிச்சிறுவன் மாதிரி, தடதடன்னு பதில் சொல்லிட்டேன்.

அப்புறம் அந்த ஒன்பது சந்நியாசிகளும், பெரியவாகிட்டப் போய், நான் சொன்ன பதில்களைச் சொல்லியிருக்கா. ‘எங்களுக்குப் பரம திருப்தி’ன்னு காஞ்சி மகானை நமஸ்காரம் பண்ணியிருக்கா.

இது எதுவுமே தெரியாம, அடுத்த மாசம் பெரியவாளைத் தரிசனம் பண்றதுக்காகப் போயிருந்தேன். அப்ப பெரியவா, ‘உன்னைப் பார்க்கச் சொல்லி, ஒன்பது சந்நியாசிகளை அனுப்பி வைச்சேனே! உன்னை வந்து பார்த்தாளா?’ன்னு கேட்டார்.

எனக்கு உடம்பே நடுங்கிடுச்சு. தப்பா எதுவும் உளறிக் கொட்டிட் டோமோன்னு புரியாம மலங்க மலங்க முழிச்சேன். ‘ஆமாம் பெரியவா… வந்திருந்தாங்க; அவங்க கேட்டதுக்குப் பதிலும் சொன்னேன், பெரியவா’ன்னு திக்கித் திக்கிச் சொன்னேன்.

‘அவா எல்லாரும் இங்கே வந்து, நீ சொன்னதையெல்லாம் எங்கிட்ட தெரிவிச்சா. சரியாத்தான் சொல்லியிருக்கே! உனக்குக் காமாட்சியோட அனுக்கிரகம் இருக்கு. நீ எப்படித் தப்பா சொல்லுவே? சரியாத்தான் சொல்லுவே!’ன்னு மெள்ளச் சிரிச்ச பெரியவா, கைதூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். அப்படியே சிலிர்த்துப் போச்சு உடம்பு!” எனக் கண்களில் ஆச்சரியம் பொங்க விவரித்தவர், இன்னொரு சம்பவத்தையும் தெரிவித்தார்.

சர்வ தீர்த்தக் கரை. அங்கே பெரியவா காஷ்ட மௌனத்துல இருந்தார். உடம்பு ஒடிசலாக, ஒல்லியாக இருந்தது. ‘பெரியவா தூத்தம் (தண்ணீர்) கூடக் குடிக்கலை’ என அருகில் இருந்தவர்கள், வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அன்றைய தினம், காஞ்சிபுரத் துலதான் இருந்தேன். திடீர்னு ஒரு சேதி… ‘பெரியவா உத்தரவு, உடனே வா’ன்னு தகவல். பறந்தடிச்சுண்டு பெரியவாளைப் பார்க்க ஓடினேன்.

அன்னிக்குதான், புஷ்பங்களால  மகா பெரியவாளை அலங்கரிக்கிற மாதிரி பாட்டு ஒண்ணு எழுதினேன். அந்தப் பாட்டையும் பெரியவாளோட அழைப்பையும் மனசுல நினைச்சுண்டே, அங்கே போய் நின்னேன்.

‘அவனை உள்ளே கூப்பிடு’ன்னு பெரியவாளோட குரல் நன்னாக் கேட்டுது, எனக்கு. உள்ளே நுழைஞ்சு, காஞ்சி மகானைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம், குழப்பம், வியப்பு, சந்தோஷம், பயம்னு எல்லாம் மாறிமாறி வர்றது. அங்கே… புஷ்பங்களால, பெரியவாளைப் பிரமாதமா அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அவரோட பீடத்துலேருந்து அவர் சிரசுல இருக்கற கிரீடம் வரை, எல்லாமே பூக்களால அலங்கரிக்கப்பட்டிருந்துது.

தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினேன்; கண் லேருந்து ஜலம் அருவியாக் கொட்றது, எனக்கு! ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே! மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கியோ?!’னு கேட்டார்.

‘அடியேனுக்குக் காமாட்சியும் பெரியவாளும் ஒண்ணுதான், பெரியவா’ன்னு சொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்; கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.

 

‘சரி.. என்ன எழுதியிருக்கேனு படி!’ என்று பெரியவா சொல்ல… கண்கள் மூடி, பரவசத்துடன் அந்தப் பாட்டைச் சொன்னேன். அதன் அர்த்தம் இதுதான்…

‘எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின் சரணங்களாக விளங்குகின்றனவோ, எந்த மகானுடைய சரீரம் முழுவதும் ஒரே புஷ்பமயமாக அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம் சோபித மாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய ஞானப்பிரதானமான யோக தண்டம் முழுதும் புஷ்பத்தினால் சுழற்றப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும் சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி விளங்குகிறதோ- அப்படிப்பட்ட காஞ்சி மகா சுவாமிகளின் பாதார விந்தங்களை, அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்!’

நான் பாட்டைச் சொல்லி முடிச் சதும், குவியலாக இருந்த பூக்களைக் கொஞ்சம் எடுத்துத் தன் சிரசின் மீது தூவிக்கொண்டார், பெரியவா.

பெரியவாளுக்கும், அவர் எப்போதும் வைத்திருக்கிற தண்டம் முதலானவற்றுக்கும் நான் வர்ணித்திருந்தது போலவே அலங்கரித்திருந்தனர். யாரோ ஒரு பெண்மணியின் நேர்த்திக்கடனாம் இது!

இப்படியரு மலர் அலங்காரத்தில் பெரியவாள் திருக்காட்சி தந்ததும், அதற்கு முன்னமேயே அப்படியரு பாடலை அடியேன் எழுதியதும்… ஸ்ரீகாமாட்சியம்மையின் பெருங் கருணையன்றி வேறென்ன?! மகாபெரியவா என்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம்! வேறென்ன சொல்றது?!” – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் காமாட்சி தாசன் சீனிவாசன்.

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading