
விநாயகர் அகவல் – பாகம்
29 ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம்.59. இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன
60. அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்
பதவுரை:
இருள் – இருளாகிய அஞ்ஞானம் (அறியாமை)
வெளி – ஒளியாகிய ஞானம் (அறிவு)
இரண்டுக்கு – மேலே சொன்ன அந்த இரண்டுக்கும்
ஒன்று இடம் என்ன – கண்களே ஆனது போல
என் செவியில் – அடியேன் செவியில்
அருள் தரும் – திருவருள் பேற்றைத் தரும்
ஆனந்தத்து அழுத்தி – இன்பச் செய்தியை நன்றாக அழுந்த உபதேசித்து
விளக்கவுரை:
கண்கள் இருட்டைக் காண்கின்றன. அதே கண்கள் வெளிச்சத்தையும் பார்க்கின்றன. அதுபோல அறியாமை மயமான அகமே அறிவு மயம் ஆகும். எப்பொழுது? ‘இதனை நாம் அறிகிறோம்‘ என்ற சிந்தனையும் அகன்றுவிட்டால் – அப்பொழுது நம் ஆன்மாவே ஆனந்தமயம் ஆகும். [அறிதல், அறியப்படும் பொருள், அறிபவன் – இந்த மூன்றும் ஒன்றாகும் பொது]. இந்த நிலையை ‘சொரூபம்‘ என்று கூறுவர் . அதாவது சொரூப நிலை அல்லது சாரூபகதி – அருளை சார்தல்.
அறியாமை, அறிவு இவ்விரண்டிற்கும் பிறப்பிடம் ஒன்றே! – என்று மூலமுதல்வன் கணபதி பெருமான் தன் திருவருள் பெருக்கால் தன் செவியில் உபதேசித்து பேரின்பக் கடலில் மூழ்கடித்தான் – என்கிறார் ஒளவை பிராட்டி [இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் ]
61. எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
பதவுரை:
எல்லை இல்லா – வரம்பு வரை இல்லாத
ஆனந்தம் அளித்து – (சாயுஜ்ய) பரமானந்த இன்பம் அளித்து
இந்த நிலை பரமுத்தி நிலை (சாயுஜ்ய நிலை): காண்பவன்,காட்சி, காணப்படும் பொருள் – இவை மூன்றும் கரைந்து, ஆன்மா கணபதியோடு கலந்து சாயுஜ்ய நிலை எய்தும். சத் சித் ஆனந்தம் – எந்த மூன்றும் ஒன்றுக்கு ஒன்று வியாபக வ்யாபியம் ஆகிவிடும் நிலை. இதுவே பரமானந்த நிலை – எல்லை இல்லா ஆனந்தம் (சாயுஜ்யம்)
இந்த நிலையை திருமந்திரம் 5-ம் தந்திரம் பாடல் 1513 விவரிக்கிறது
சாயுச் சியம்சாக் கிரதாதீதம் சாருதல்
சாயுச் சியம்உப சாந்தத்துத் தங்குதல்
சாயுச் சியம்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியம்மனத் தானந்த சத்தியே !
Sayujya is the state of Jagrat-Atita, the
Beyond Consciousness,
Sayujya is to abide for ever in Upasantha
The peace that passes all understanding,
Sayujya is to become Siva Himself,
Sayujya is to experience the infinite power of inward bliss,
Forever and ever
(English Translation by Dr. B.Natarajan)
62. அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
பதவுரை:
அல்லல் களைந்தே – பிறவித் துயரை வேரறுத்து
அருள்வழி காட்டி – அருள் நெறி என்னும் ஞானமார்கத்தைக் காட்டி அனுகிரஹித்து
பிறவித் துயரை வேரறுப்பதே எல்லை இல்லாத ஆனந்தம்.
இந்தக் கருத்துக்களை அத்வைத பரமாக ஸ்ரீ மஹா பெரியவா தெய்வத்தின் குரலில் சொல்லியிருப்பதைப் பார்ப்போம்
தெய்வத்தின் குரல் – 4-ம் பகுதி
அத்வைதமே அபயம்
இந்த விஷயத்தை உபநிஷத்துக்களில் சொல்லியிருக்கிறது. ஒன்றேயான ஸத்யவஸ்துவில் – மெய்பொருள், ஆத்மா, ப்ரஹ்மம் என்றெல்லாம் சொல்வது அதைத்தான்; அந்த ஸத்ய வஸ்துவில் – எப்போது ஒருவன் அதற்கு அந்நியமாக இன்னொன்றை பேதம் செய்து பார்க்கிறானோ அப்போதே அவனுக்குப் பயம் ஏற்பட்டுவிடுகிறது என்று தைத்திரீய (உபநிஷ) த்தில் சொல்லியிருக்கிறது1. ப்ருஹதாரண்யகத்திலும் ஒரு இடத்தில்2ப்ரஜாபதியானவர், “எனக்கு அந்நியமாக எதுவும் இல்லாதபோது எனக்கு எதைக் குறித்து பயம் ஏற்படும்?” என்று கேட்டதாகச் சொல்லிவிட்டு, “இன்னொன்று இருந்தால்தான் த்விதீயமான அதனிடமிருந்து பயம் உண்டாகிறது” என்று முடித்திருக்கிறது.
இப்படிச் சொன்னதால் அத்வைதமாகப் போய்விட்டால் பயமே இல்லை என்று ஆகிவிடுகிறது. இப்படி ஒன்றிலிருந்து inference –ஆக (அநுமானமாக) அந்த முடிவை draw பண்ணிக்கொள்ளும்படி நம்மை விடுவதோடு நிற்காமல், டைரக்டாகவே அத்வைதம்தான் அபயநிலை என்றும் உபநிஷத்துக்கள் பல இடங்களில் உபதேசிக்கின்றன. தைத்திரீயத்திலேயே சற்று முன்னாடி சொன்னதற்கு இரண்டு மூன்று மந்திரம் முந்தி3, மனோ வாக்குகளால் எட்டமுடியாததான அத்வைதமான ப்ரஹ்மாநந்த நிலையைச் சொல்லிவிட்டு, அதை அடைந்தவன் ஒருபோதும் பயப்படமாட்டான் என்ற நேரடியாகக் கூறியிருக்கிறது. அப்புறம், ‘ஆனந்தவல்லி’ என்ற அந்தப் பகுதியை முடிக்கிற இடத்தில் மறுபடியும், மனோவாக்குகளால் எட்டமுடியாத ப்ரஹ்மாநந்த அத்வைத நிலையை அடைந்தவன் ஒரு இடத்திலும் பயப்படமாட்டானென்று சொல்லியிருக்கிறது. முதலில், காலத்தில் ஒருபோதும் (“கதாசன”) பயப்படமாட்டான் என்றும், அப்புறம், ஒரு இடத்திலும் (‘குதச்சன’) பயப்படமாட்டான் என்றும் சொன்னதால், இப்போது ஸயன்ஸில் ஸகல தத்வங்களையும் அடக்கிக்கொண்டு விடும் இரண்டு ஆதார வஸ்துக்கள் என்று சொல்லும்Time, Space இரண்டையும் சொன்னதாகிவிடுகிறது. இதே போல ப்ருஹதாரண்யகத்திலும் (நான்காம் அத்யாயத்தின் நான்காம் பிரிவான) சாரீரக ப்ராஹ்மணம் எனும் ஸெக்ஷனின் கடைசி மந்த்ரங்களில் ஆத்ம ஞானியை வர்ணித்துவிட்டு முடிவாக, ப்ரஹ்மமேயான ஆத்மா அஜரமானது (மூப்பில்லாதது) , அமரமானது, அம்ருதமானது என்று அடுக்கு மொழியில் சொல்லி, இவற்றோடு அது அபயமானது என்றும் கூறியிருக்கிறது. மறுபடியும் தனியாக எடுத்து, “ஆமாம், ப்ரஹ்மம் என்றால் அபயம்தான். தன் ஆத்மாவை ப்ரஹ்மமாகத் தெரிந்துகொண்டவன் பயமேயில்லாதவனாகிறான்” என்று முத்தாய்ப்பு வைத்திருக்கிறது.
[reference : 1 தைத்திரீய உபநிஷத்தின் ஆனந்தவல்லி எனும் பகுதியில் ஏழாவது மந்த்ரம்
2 முதல் அத்யாயம் நாலாம் ப்ராஹ்மணம், இரண்டாவது மந்த்ரம்
3 ஆனந்தவல்லி நான்காம் மந்த்ரம்]
அபயம் – மோக்ஷம் ; பயம் – ஸம்ஸாரம்
மோக்ஷ ஸ்தானம் அபயம் என்பதால் பயம் என்பது எந்த ஸ்தானத்தைக் குறிக்கும் என்று கண்டுபிடித்துவிடலாம். பயமும் அபயமும் ஒன்றுக்கொன்று ‘ஆப்போஸிட்’. அதனால், பயத்தின் ஸ்தானம் மோக்ஷத்துக்கு ‘ஆப்போஸிட்’டாக இருக்கவேண்டும். மோக்ஷம் என்றால் ‘விடுபட்ட நிலை’. அதற்கு ஆப்போஸிட் ‘கட்டுபட்ட நிலை’. இதை ‘பந்த்ம்’ என்பார்கள். பந்த – மோக்ஷம் என்று சொல்வது வழக்கம். லோக வாழ்க்கையான ஸம்ஸாரம்தான் பந்தம். ஸம்ஸார பந்தம் என்று சேர்த்தே சொல்கிறோமல்லவா? அதனால் பயம் என்பது ஸம்ஸாரத்தைக் குறித்துத்தான். இந்தத் தடவை ஜன்மா வந்துவிட்டது. இந்த ஜன்மா முடிந்து சரீரம் போய்விட்ட பிறகாவது இன்னொரு ஜன்மா, மறுபடியும் சரீரம் என்று வராமலிருக்க வேண்டும். அதாவது மறுபடி ஸம்ஸார பந்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் விடுபட்டு மோக்ஷ ஸ்தானம் சேரவேண்டும். செத்தபின் “புனரபி ஜனனம்” வந்துவிடுமோ என்பதுதான் பெரிய பயத்துக்குரிய விஷயம். “பெரிய பயம்” என்று நான் சொன்னதையே பகவான் “மஹத் பயம்” என்று ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்*. கர்மயோகம் என்பதாகப் பலனில் ஆசையில்லாமல் சாஸ்தரம் விதித்த கர்மாக்களை வழுவறப் பண்ணவேண்டும் என்ற உபதேசிக்க வந்த பகவான் இந்த நிஷ்காம்ய கர்ம யோகத்தைக் கொஞ்சம் பின்பற்ற ஆரம்பித்தாலும் போதும், அது பெரிய பயத்திலிருந்து (“மஹதோ பயாத்”) காப்பாற்றிவிடும் என்கிறார்:
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்
காம்ய கர்மமாக ஸ்வய ஆசையின்மீதே பண்ணும் கர்மாதான் ஜீவனை ஸம்ஸாரத்தில் கட்டிப்போடுவது. நிஷ்காம்ய கர்மமோ இந்தக் கட்டை அவிழ்த்துக்கொள்ள உதவி பண்ணுவது. ஆகையினால் மஹா பயத்திலிருந்து அது காப்பாற்றும் என்று பகவான் சொல்லும் இடத்தில் ‘மஹா பயம்’ என்பது ஸம்ஸார பயம்தானென்று ஆசார்யாள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம்.