Sage of Kanchi

Vinayagar Agaval – Part 43 (Final)

vinayaka-3

The final episode of Vinayagar Agaval on this auspicious Maha Sivarathri day. Many Jaya Jaya Sankara to Shri B.Srinivasan for all the compilation and share. Ram Ram.

விநாயகர் அகவல் – பாகம் 43 (நிறைவு)

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.

71.  தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
72.  வித்தக விநாயக விரைகழல் சரணே!

பதவுரை:

தத்துவ நிலையைத் தந்து – தத்-த்வம்  – தானே அது என்ற மஹாவாக்ய பொருளை விளக்கி உரைத்து

எனை ஆண்ட – மிகவும் அற்பமான, என்னையும் அடிமையாக்கி ஆட்கொண்டு

வித்தக – மிகவும் மேலான
விநாயக – ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முழுமுதல் தெய்வமே!
விரை கழல் சரணே! – தெய்வ அருள் மணம் நிறைந்த உனது திருவடிகளுக்கே அடைக்கலம்!
 

விளக்கவுரை:

எங்கும் நிறை பரப்ரஹ்மமும்  (தத் ) நீயும் (த்வம் ) ஒன்றுதான் அத்வைத பொருளாக, என்றும் நிலையான வீடுபேற்றை தந்த விநாயக!  அன்றும், இன்றும், என்றும், எங்கும் நிறைந்து, விகற்பம் இல்லாமல், விளங்கும் கணபதியே!  நீ என் சிறுமையை விலக்கி எனை ஆட்கொண்டுவிட்டாய்!  வித்தகனே! உன்னிடம் அன்றி வேறு எவரிடம் அடைக்கலம் ஆவதுஒன்றிற்கும் பயன் இல்லாத என்னையும் ஒரு பொருளாக்கி, சிவஞானத்தையும் அருளையும் தரிசிக்க அருளினையே!- என்று போற்றி விநாயகரின் விரை கழலில் சரண் புகுகிறார். கணபதியின் திருவடிகள் எல்லாப் பொருளையும் கடந்து நின்றன.  ஆயினும், சரண்புகும் அன்பர்க்கு எளியதாம் அவர்தம் திருவடி.  ஞானம், பக்தி ஆகிய சாதனங்கள்,நம்மை திருவடி நிழலில் நிறுத்தி பேரின்ப பேற்றைப் பெறச் செய்யும்.


வேதகா ரணமும்நீ வேதமோர் நான்கும்நீ
பாதமோர் நான்கும்நீ பதங்களோர் நான்கும்நீ
போதலை மலையமார் புவனகா ரணமும்நீ
நாதநின் பெருமையை நவிலவல் லார்எவர்” 

என்று போற்றிய வ்யாஸ மகரிஷிக்கு வேதம் தொகுத்து, புராண இதிகாசங்களை விரித்து விளக்க பரம அருளை பாலித்த வித்தகர் விநாயகர்.  புகழ்ந்து ஏத்துவோர் தம் தீராப்பிணி தீர்த்தவர் தெய்வ விநாயகர்.  சிவபெருமானே இவரை வணங்கி விட்டுத்தான்,பார்வதி பரிணயத்துக்குச் சென்றார் என்கிறது புராணங்கள்.  இதுவே இவர்தம் தொன்மைக்கு சான்று.

கணபதி காப்பு வைத்தே எந்த அருள் நூலும் தொடங்கும்.  பிள்ளையார் சுழி ஊன்றியே, எல்லா சுப மடல்களும் எழுத ஆரம்பிக்கவேண்டும்.  கணபதி வழிபாடு செய்தபின்தான், எந்த அனுஷ்டானத்தையும் தொடங்கவேண்டும்.  இது நமது பாரம்பரியம்.  புற சமய தாக்குதலால், தொன்றுதொட்டு வரும்,இந்தப் பழக்கவழக்கங்கள் மாறி வருகின்றன.  இதைக் கடைபிடிப்பது நம் கடமை.  பொய்கைக் கரை என்ன, மரத்தடி என்ன, மழையா, வெயிலா, நிலா ஒளியா, மேலே கூரை உளதா இல்லையா, கோயிலா, குறுக்குச் சாலையா – எங்கும் இருந்து வழியே வருவோர் போவோர்க்கு அருள்பவர் வித்தக விநாயகர்.  மண், கல், சாணம், மஞ்சள், வெல்லம், பஞ்சலோகம், வெள்ளி,பொன்  என்று எதனிலும்   திருவுருவை ஏற்பது அவரின் வியாபகம். அன்பே அவருக்கு நாம் செய்யும் அபிஷேகம். ஞானமே வழிபாடு. துரிய சிவத்தின் அபேத அவதாரம் வைதீக சமயம் ஏத்தும் விநாயகர்.  பிறரால் தாழ்த்தப் பெற்றவரையும் தலை நிமிர வைப்பவர் இவர்.  அதற்கு அடையாளமே அவர் சிரசில் சூடியிருக்கும் அருகம்புல். சைவம், வைணவம், பௌத்தம்,ஜைனம் போன்ற அனைத்து மதங்களும் போற்றும் சர்வசமய சமரச மூர்த்தி விநாகயர்.  உலகில் எல்லா தேசத்திலும் கோயில்கொண்டுள்ளர். பேரருள் கொண்ட இப்பெருமானிடம் அன்பின் உணர்வோடு, அனுபூதி உணர்வோடு ஒளவைப் பிராட்டியார் அடைக்கலம் ஆவதைப் பாருங்கள்வித்தக விநாயக விரைகழல் சரணே! என்று! என்ன அருமை!

சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு‘ – என்று திருவடியின் பெருமையில் ஆரம்பித்து, நிறைவிலும் விரை கழல் சரணே! – என்று முடியும் அற்புத நூல் விநாயகர் அகவல்‘ – இதை மறக்கத் தகுமோவிரை கழலாகிய திருவடியே பரிபூரண ஞானம்‘.  ஞானஸ்வரூபி விநாயகர் அருளிய பரம உபதேசத்தை உணர்ந்து, உருகி அனுபூதி பெற்ற ஒளவை  பாடிய அருமை நூல்.  சிவஞான நுட்பங்களை நினைவுறுத்தும் உபநிடதம் இது.

வேதம் கணபதியின் நாதம்.  ஆகமங்கள், அவரை ஆராதிக்க வந்த அருள்முறைகள்.  உபநிடதங்கள் கணபதியின் உயிர்நிலை.  ஓம்காரம் அவர் தம் திருமேனி.  அகத்தும், புறத்தும் தூய வாழ்வு வாழ வழி கற்பிக்கும் வரத கணபதியின் அருளமுதத்தை விரித்து விளம்புவது இந்த அருள் நூல்.  72 வரிகள் கொண்டு, உருவில் சிறியது.  ஆனால் பொருள் நுட்பதிலோ, மிகப் பெரியது.  இதைத் தொகுத்து வெளியிட எமது புத்தியில் உறைந்த சதுர கணபதிக்கும், ஸ்ரீ மஹாபெரியவாளுக்கும் சமர்ப்பணம்.

ஸ்ரீ மஹாபெரியவாளின் பரம கருணையால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, அவரது வாக்காலேயே நிறைவு பெறட்டும். தெய்வத்தின் குரல் 4-ம் பகுதி!

இப்படியாகப் பிள்ளையார் தாம் பெரிய இடத்துப்பிள்ளையாக இருப்பது மட்டுமில்லாமல், தம் குடும்பத்துப் பெரியவர்களான அப்பா, அம்மா, மாமா எல்லோருக்கும் ஒவ்வொரு ஸந்தர்ப்பத்தில் தாமே பெரியவராக இருந்திருக்கிறார்.

விக்னங்கள் தீர்ந்து வெற்றி கிடைப்பதற்காகப் பரமேச்வரன்
,லலிதாம்பிகை, ராமர் ஆகியவர்களும், விவாஹமாவதற்காக ஸுப்ரஹ்மண்யரும், லோகாபவாதம் நீங்குவதற்காக க்ருஷ்ண பரமாத்மாவும் பூஜை பண்ணின அந்தப் பெரியவரை – குழந்தையிலும் குழந்தையாக இருந்து கொண்டே பெரிய பெரிய தெய்வங்களுக்கும் பெரியவராயிருந்தவரை – நாமும் நம்முடைய வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படும் அநேக இடையூறுகள் நீங்கி வெற்றி கிடைப்பதற்காகவும், குறைகள் – தோஷங்கள் – அபக்யாதிகள் விலகுவதற்காகவும் பயபக்தியோடு, அன்போடு வழிபடுவோம்.
 
ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.  கணேச சரணம்.
 
ஓம் தத் ஸத்.
 
____________________________________________________________________________
Subham
 
ஏதோ விளையாட்டு போல் ஆரம்பித்த முயற்சி.  இதில் எள்ளளவும் நமது புத்தி கிடையாது.  குஹஸ்ரீ ரசபதி அவர்கள் எழுதிய விரிவான உரையை முக்கியமாகக் கொண்டு, அன்னாரது கடினமான தமிழை எளிமைப் படுத்தி – ஆங்காங்கே ஸ்ரீ மஹாபெரியவாளின் தெய்வத்தின் குரலிலிருந்து சம்பந்தப்பட்ட அத்தியாயங்களைச் சேர்த்து தொகுத்து வெளிவந்ததே இந்தத் தொடர்.   ஒரு வருஷமாக வந்து கொண்டிருக்கும் இந்தத் தொடர் முடிந்துவிட்டது என்று நினைக்க முடியவில்லை.  இதை எழுதும் போதெல்லாம், கணபதி சிந்தனையிலும், பெரியவா தியானத்திலும் இருந்தோம்.  இதை பற்றுக்கோடாக வைத்துக்கொண்டு, தெய்வத்தின் குரல் பல அத்தியாயங்களை படிக்க முடிந்தது.  அதை தவிர, தேவார பாசுரங்கள்!  என்ன அருமையான அருள் நூல்கள்!  அவற்றையும், பாடல்களின் பொருளையும் படிக்க வைத்தார் கணபதி.  சில நாயன்மார்களின் வரலாற்றையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  எல்லாம் ஸ்ரீ பெரியவாளின் குருவருள்.   விநாயகர் அகவலை அனைவரும்குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் பாராயணம் செய்யவேண்டும் என்பது ஸ்ரீ மஹாபெரியவாளின் கட்டளை.  50 வருடங்கள் முன்பு, பகுத்தறிவு இயக்கம் தமிழ் நாட்டில் பிள்ளையார் சிலைகளை உடைத்துக் கொண்டு வந்தார்கள்.  தேவர்கள் சிவபெருமானிடம் சரண் புகுந்ததுபோல், அடியார்கள் ஸ்ரீ மஹாபெரியவாளிடம் சரண் புகுந்தனர்.  அப்போது அவர் இட்ட கட்டளை விநாயகர் அகவல்படிக்க வேண்டும் என்பதுதான்.  மிகவும் விலை மதிப்புள்ள பொருள் உள்ள ஒரு பெட்டிக்கு சாவி இல்லை என்பதால், அதை உதாசீனப்படுத்தக்கூடாது.  சாவி கிடைக்கும்போது, பெட்டி இல்லையே என்று வருத்தப்படாமல் இருப்பதற்கு, சாவியைப் பற்றி கவலைப்படாமல், பெட்டியை பாதுகாக்க வேண்டும் – என்பது  ஸ்ரீ மஹாபெரியவாளின் உபமானம்.  இங்கு பெட்டி என்பது விநாயகர் அகவல்‘.  சாவி என்பது அதன் விளக்கம் அல்லது பொருள்.  இப்பொழுது, நமக்கு பெட்டியும் சாவியும் கிடைத்துவிட்டது. இதை மனதில் நிறுத்துவது நாம் ஸ்ரீ பெரியவாளுக்குச் செய்யும் கைங்கர்யம். 
 
ஒரு வருடமாக வந்துகொண்டிருந்த இந்த தொடர், இந்த சிவராத்திரி நன்னாளில் நிறைவு பெறுகிறது.  இதுவே ஈசன் செயல் அன்றோஅதிலும், சென்ற சில பதிவுகளில், அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து என்று பஞ்சாக்ஷரத்தின் பெருமையை அல்லவோ பேசி வந்தோம். இதை ஸ்ரீ மஹாபெரியவாளின் அநுகிரஹம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும். 

துர்முகி
மாசி க்ருஷ்ணபக்ஷ திரயோதசி 
மஹாசிவராத்திரி
Feb 24 – 2017

Exit mobile version