Sage of Kanchi

Vinayagar Agaval – Part 28

Lord Ganesa

விநாயகர் அகவல் – பாகம் 28

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.
 
சிறிது வாரங்களாக தடை பட்டு இருந்த விநாயகர் அகவல் விளக்க உரையை, அந்த கணேச மூர்த்தியின் அருளாலேயும், ஸ்ரீ மகா பெரியவாளின் அனுகிரஹத்தாலும், மீண்டும் தொடர்கிறோம் .  அநேகமாக முடிக்கும் தருவாயில் இருக்கிறோம்எடுத்துக்கொண்ட வேலை செவ்வனே நடைபெற ஸ்ரீ கணேச பெருமானை மீண்டும் ஒரு முறை நமஸ்கரித்து அடுத்த அகவல் வரிகளில் மனம் லயிப்போம்;
56.  முன்னை வினையின் முதலைக் களைந்து
57.  வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
58.  தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
 

பதவுரை:

முன்னை –  அநாதி காலமாக, பல ஜன்மாந்திரங்களிலிருந்து  நம்மை தொர்ந்துகொண்டிருக்கும்

வினையின் – (பிறப்புக்கு காரணமான நல்ல மற்றும் தீவினைகளின்
முதலை – ஆணி வேரான கன்ம மலத்தை
களைந்து –  வேரோடு பிடுங்கி எறிந்து
வாக்கும் -வாயால் பேசுதலும்
மனமும் – மனத்தால் நினைத்தலும்
இல்லா – இல்லாத
மனோலயம் – மனம் இந்திரியங்கள் வழியாக உலகப் புறப் பொருள்களில் செல்லாமல் உள்முகமாகி ஒருவழிபட்டு அடங்கி 
தேக்கியே – அந்த மன ஒடுக்க நிலையை நிலை பெறச்செய்து
என்றன் சிந்தை தெளிவித்து – என் சிந்தையை தெளிவுற  செய்து
 

விளக்கவுரை:

புண்ணியம் (நல்ல வினை), பாவம் (தீவினை) – இவை இரண்டிற்கும் மூலகாரணம் ஒன்று உண்டு. அதுதான் மூலவினைஇதை காமிய மலம்/ கன்ம மலம்  என்றும் கூறுவர்.  இது அநாதி காலம் தொட்டு ஆன்மாவில் ஒட்டிக்கொண்டு வருகிறது.  இதுதான் புண்ணிய பாவச் செயல்களை செய்ய தூண்டுகிறது.  அதனால் தான் மீண்டும் மீண்டும் பிறவி உண்டாகிறது.  பிறவி ஏற்பட்டால் இன்ப துன்பம்.  இவற்றை அனுபவித்தே தீர்க்கவேண்டும் . ஓயாமல் பிறவி; ஓயாமல் வேறு வேறு உடல். ஆன்மாவிற்கு புலனாகாமலே, நம்மைக் கட்டுப்படுத்தி நம்மை அடிமை படுத்தும் இந்த  காமிய மலத்தின் வேரையே கல்லி எறிய வல்லவர் நம் கணபதி பெருமான்.  இந்த வினையின் மூலம் அழிக்கப்பட்டால், பின்  பிறவி ஏதுஇதை செய்யும் வல்லமை பெற்றவர் நம் கணேச மூர்த்தியன்றோ? அதைத்தான் இந்த வரிகளில் வேண்டுகிறார் ஒளவை பிராட்டி. “முன்னை வினையின் முதலைக் களைந்து”

இப்பிறவி எடுத்ததன் மூலம், நமக்கும், இறைவனைப் பாட வாயும், இறைவனை நினைக்க மனதும், இறைவனிடம் தலைவணங்க, சிரசும் உள்ளன.  மனத்தால் தூண்டப்பட்டு, வாய் இறைவனை ஸ்மரித்துக் கொண்டு இருந்தால், உடல் உணர்வு மெதுவாக மறையும்.  வாக்கின் உணர்வும், உடல் உணர்வும் மனதில் ஒடுங்கினால், இறுதியில் மனம் தன்னையே துறந்து விடும்.  இந்த நிலையே மனோலயம். இந்த நிலையில் ஆன்ம உணர்வே மேம்பட்டு நின்று சிந்தனையில் தெளிவு ஏற்படும்.
 

அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் குரு வடிவில் வந்து செய்த உபதேசமும் இதுதான். வாழ்க்கையில் வெறுத்து, அண்ணாமலையார் ஆலயத்தின் கோபுரத்திலிருந்து கீழே விழுந்த அருணகிரிநாதரைத் தாங்கி அருளி, முருகன் உபதேசிக்கிறார்:
 
சும்மா இரு சொல்லற
கந்தர் அநுபூதியில் அதைப் பாடுகிறார் அருணகிரியார்:
 
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மாயிரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!
 
சொற்களை அறுத்து சும்மா இருத்தலே யோகசமாதி.  பேச்சும் சிந்தையையும் நிறுத்துவதே சொல்லறுத்துல்.  இந்த யோகநிலையை வேண்டுகிறார் இந்த வரிகளில்:
வாக்கும் மனமும் இல்லா  மனோலயம்

  தேக்கியே என்றன்  சிந்தை தெளிவித்து”

மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.

Exit mobile version