அலக்ஷ்மீகரமானதற்கெல்லாம் பூர்ணகும்பம் வைத்துக் கூப்பிடுவதாக் இப்போது பல நடந்து வருவதில் இன்னொன்று, பெண்கள் முறையாகத் திலக தாரணம் பண்ணிக் கொள்ளாமலிருப்பது. கன்யாக் குழந்தைகளுக்கும் ஸுமங்கலிகளுக்கும் திலகம் இட்டுக் கொள்வதை அத்யாவச்யமான அலங்காரமாக நம் ஆசாரத்தில் விதித்திருக்கிறது. அது முகத்துக்கே ஒரு சோபையைக் கொடுப்பதோடு சுபமான சக்திகளை வரவழைத்துத் தருவது ‘ப்ரூகுடி’ என்ற புருவ மத்தியில் யோக சாஸ்த்ர சக்ரங்களில் ஒன்று இருக்கிறது. சித்தத்தை ஒருமுகப்படுத்தி ‘கான்ஸென்ட்ரேட்’ பண்ணுவதற்கு அந்த இடத்திலேதான் நம்முடைய த்யான லக்ஷ்யத்தை வைத்துப் பார்ப்பார்கள். ‘ஸரியாக அந்த இடத்தில் திலகம் இட்டுக் கொள்வது நம்மிடமுள்ள நல்ல சக்திகள் வ்ரயமாகாமல் மூடி போட்டுக் காப்பாற்றுகிறது; energy band -ஐ protect பண்ணுகிறது’ என்று இந்த நாள் அறிவாளிகளும் சொல்கிறார்கள்.
நல்ல மஞ்சள் குங்குமந்தான் நெற்றிக்கு இட்டுக் கொள்வதற்கானது. ஸுமங்கலிகள் புருவங்களுக்கு மத்தியில் இட்டுக் கொள்வதோடு, அதைவிட முக்யமாக வகிட்டிலும் இட்டுக்கொள்ளவேண்டும். அதுவே பரம ஸெளபாக்யம், ஸுமங்கலிகளின் வகிடு மஹாலக்ஷ்மியின் வாஸ ஸ்தானங்களில் ஒன்று. அம்பாளே தன்னுடைய வகிட்டில் செக்கச் செவேலென்று ஸூர்யோதய ரேகை மாதிரிக் குங்குமம் இட்டுக்கொண்டிருந்ததை ஆசார்யாள் ‘ஸெளந்த்ர்ய லஹரி’யில் பாடியிருக்கிறார்.
கன்யாக் குழந்தைகள் சாந்தும் இட்டுக் கொள்ளலாம். அகத்திலேயே அரிசியைக் கருக்கிப் பண்ணிய கருப்புச் சாந்து.
கடையிலே கலர் கலராக விற்கிற பொட்டுக்களை வாங்கி ஒட்டிக்கொள்வது அடியோடு தப்பு, அந்தப் பொட்டை சர்மத்தோடு ஒட்டச் செய்கிற கெமிகலோ, எதுவோ ஒன்று அநாசாரமானதாகவே இருக்கும். அதனால் நாளடைவில் சர்மவியாதி ஏதாவது உண்டானாலும் உண்டாகலாம். ஜெலாடினாக அது இருக்குமானால் அதில் மாட்டுக் கொழுப்புக் கூட இருக்கக்கூடும். இப்படி இருந்தால் பரம மங்களமான திலக தாரணம் என்பதே பசுவதைக்கு உடந்தையாக இருக்கிற மஹா பாபம் வரை கொண்டு நிறுத்துவதாக ஆகிவிடும்.
ஸ்த்ரீத்வம் பழுப்பதற்கேற்ற வெளித்தோற்றம்
இன்னவென்று define பண்ண முடியாமல் மங்களம், லக்ஷ்மீகரம் என்பதாக ஒன்று மனஸை ஒருவித அழகினால் பரிசுத்தப்படுத்தி, ஸந்தோஷிப்பிப்பதாக இருக்கிறது. கன்னிகைகளும் ஸுமங்கலிகளும் அதைப் பரப்பவே ஏற்ப்பட்டவர்கள். வஸ்திரம், தலைப்பின்னல், கொண்டை, திலகம் எல்லாம் அதை வளர்த்துக் கொடுப்பவையாகவே நம் முன்னோர்களால் உருவாக்கப்படிருக்கிறது.
ஆடை-ஆபரணம் என்று சேர்த்துச் சொல்வது. ஆபரணங்களும் ஸ்த்ரீத்வத்துக்கு அவசியமான லக்ஷ்மீகரத்தை உண்டாக்குகிறவை. அதற்காக வாரிப் போட்டுக் கொள்ளச் சொல்லவில்லை. மங்களம் என்பதற்காக எளிய வாழ்க்கை என்ற பெரிய தத்வத்தை விட்டுவிடச் சொல்லவேயில்லை. ஏகமாக, பல தினுஸு நகைகள் போட்டுக்கொள்வது இல்லாதவர்களுக்கும் ஆசையைத் தூண்டி மனஸைக் கெடுக்கும்; கடன்பட வைக்கும். அதற்காக, எளிமையாயிருக்கிறோம், ‘ஸிம்பிள்’ என்று சொல்லிக்கொண்டு ஸுமங்கலிகளும், கன்யாக் குழந்தைகளும் காது, மூக்கு, கழுத்து, கை மூளியாக நிற்கக் கூடாது. நாகரிக வாழ்க்கை என்ற பெயரில் மனஸை எவ்வளவோ ‘காம்ப்ளெக்’ஸாகப் பண்ணிக் கொண்டுவிட்டு வெளியிலே மட்டும் ‘ஸிம்பிள்’ என்று இருப்பதில் என்ன அர்த்தம்?
காலத்தின் விபரீதம், திலகம், நகை ஆகியன யாருக்கு வேண்டும், யாருக்கு வேண்டாமென்று சாஸ்த்ரத்தில் இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாகப் பண்ணுவதாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது!
வெளியடையாளங்கள், புறச்சின்னங்கள் ஆகியவையும் உள்மனப்பான்மையும் ஒன்றோடொன்று ஸ்ம்பந்தப் பட்டிருப்பதால்தான் இப்படிப்பட்ட விஷயங்களை இவ்வளவு தூரம் சொல்வது. ஸ்த்ரீத்வம் என்கிறது உள்ளே நன்றாகப் பழுப்பதற்கு அநுகூலமானதாகவே அவர்களுக்கு வெளித் தோற்றத்திலும் இப்படியிப்படி இருக்கவேண்டும் என்று ஆசாரவிதிகள் ஏற்பட்டிருக்கின்றன.
