Thanks to Sriram Shivaraman/Vidya Raju for the article and Umesh for the New Year painting
Wish you a very happy Tamil New Year to all readers…Let us pray our acharyas to bless us with all the health, wealth and wisdom.
Here is an excerpt from Jaya Jaya Shankara Foreword by Shri Ra Ganapathi Anna.
‘ ஜய ஜய சங்கர’ – இரண்டாம் பதிப்பு முகவுரை – ஸ்ரீ ரா.கணபதி அண்ணா
‘ ஜய ஜய சங்கர’ முதல் பதிப்பை வெளியிடும்போது இந்நூலின் பெயர்ப்பொருத்தம் பற்றிச் சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரவர்களும் தர்மரக்ஷாமணி ஸ்ரீ.கே பாலஸூப்ரமணிய ஐயரவர்களும் கூறிய ஒரு சில விஷயங்களை இங்கு வாசகர்களுக்கு அளிக்கிறேன்:
கடபயாதி சங்கியைப் படி ‘ ஜய ‘ என்பது பதினெட்டு என்ற இலக்கத்தைக் குறிக்கும்.ஜயன் எனப்படும் அர்ஜுனனைக் காவிய நாயகனாகக் கொண்டதும், ‘ஜய ‘ என்றே பெயர் பெற்றதுமான மஹாபாரதத்தில் இவ்வாறே பதினெட்டுப் பர்வங்களும், அதில் விஜயனுக்கு விமலன் உபதேசித்த ஸ்ரீமத் பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்களும் உள்ளன. என்னையும் அறியாமலே ‘ஜய’ சப்தத்தைத் தலைப்பில் கொண்டுள்ள இந்நூலும் பதினெட்டே அத்யாயங்களில் பூர்த்தியாகி யிருப்பது மனசுக்கு மங்களமாயிருக்கிறது.
அந்தப் பதினெட்டாவது அத்தியாயம் ‘காமகோடி’ என்று தலைப்புப் பெற்றிருப்பதில் ஒரு பொருத்தத்தைப் பாருங்கள்!
‘பதினெட்டுப் பீடங்களில் மிகச் சிறந்ததான காமகோடியை அடைந்து சேவியுங்கள்’ என்று ஆன்றோர் வாக்கு இருக்கிறதாம்.
‘இன்று காமகோடி பீடத்தில் சீல மூர்த்தியாக எழுந்தருளியுள்ள இளைய பெரியவர்களான
ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருநாமமும் ‘ஜய’ என்றே தொடங்குவதை எண்ணிப்பார்த்து மேலும் களிப்பு அடைகிறேன்.
ஜயது ஜயது நித்யம் சங்கராசார்ய வர்யோ
ஜயது ஜயது தஸ்ய அத்வைத வித்யான வைத்யா
ஜயது ஜயது லோகே தத்சரித்ரம் பவித்ரம்
ஜயது ஜயது பக்திஸ்தத் பதாப்ஜே ஜனானாம்.
குரோதி, வைகாசி 19உ ரா. கணபதி
‘ஜய’ வருஷம் நமக்கு அனைத்து மங்கலங்களும் தர மஹா பெரியவாளைப் பிரார்த்திப்போம்.
காஞ்சி மடத்தில், தமிழ்ப்புத்தாண்டு அன்று நிகழ்ந்த நிகழ்வுகளை, மகாபெரியவரின் சீடராக இருந்த நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் நினைவுபடுத்துகிறார். புத்தாண்டுக்கு இரண்டு நாள் முன்னதாகவே மடம் களைகட்டி விடும். மடத்தைச் சுத்தம் செய்து, சந்திர மவுலீஸ்வரர் பூஜைக்கூடத்திற்கு முன்புறம் தென்னங்குருத்து, மாவிலை தோரணங்கள் கட்டப்படும். மடத்து வாசலில், வாழையடி வாழையாய் பக்தர்களின் குடும்பங்கள் தழைத்தோங்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில், வாழைத் தோரணங்கள் கட்டப்படும்.
புத்தாண்டுக்கு முதல்நாள் இரவில் மகாபெரியவர் பூஜிக்கும் திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் சந்நிதி பழங்கள், காய்கறிகள், புஷ்பங்களால் அலங்கரிக்கப்படும். இரண்டு பக்கமும் பெரிய குத்து விளக்குகள் ஏற்றி வைப்பார்கள். மடத்தின் அலுவலகத்தில் பெரிய கண்ணாடி வைக்கப்பட்டு, அதன் எதிரில் சந்தனம், குங்குமம், வாசனைத்திரவியங்கள், தேங்காய், பழங்கள், காய்கறிகள், நாணயங்கள் குவிக்கப்படும். பெரியவரைத் தரிசிக்க முதல்நாளே, பக்தர்கள் ஏராளமாகக் கூடியிருப்பார்கள்.
புத்தாண்டு அன்று பெரியவர் சந்திரமவுலீஸ்வரரைத் தரிசிக்கும் முன்பாக விஷுக்கனி தரிசனம் காண்பார். புளி,வெல்லம், வேப்பிலை கொழுந்து சேர்த்து கலந்த “நிம்ப கந்தளம்’ என்ற பச்சடி, பானகம், நீர்மோர், வடைபருப்பு, ஆகியவை நைவேத்யம் செய்யப்படும். அவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள்.
பின், பிரபல சங்கீத வித்வான்களின் இன்னிசை நடைபெறும். வேதசதஸ், நாராணய ஸ்மிருதி, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் நடத்தப்படும். பெரியவர், அன்று காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்து வருவார்.
பின், பெரியவர் முன்னிலையில், மடத்து வேதியர்கள் புத்தாண்டுக்குரிய பஞ்சாங்கம் வாசிப்பார்கள். பஞ்சாங்கம் கேட்பதன் பயன் பற்றி பெரியவர் பக்தர்களுக்கு விளக்கமளிப்பார். பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள நட்சத்திரம், திதி, வாரம், யோகம், கரணம் பற்றி படித்தாலும், கேட்டாலும் பாவநிவர்த்தி, ஆயுள்விருத்தி, லட்சுமி கடாட்சம், செயல்பாடுகளில் வெற்றி, நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்பார்.
பெற்றோர், குரு, தெய்வத்தை வணங்கும்படி அறிவுரை சொல்வார். வந்தவர்களை எல்லாம் காமாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும்படி அறிவுறுத்துவார். “லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ (உலகம் நலமடையட்டும்) என்று கூறி, ஓய்வே எடுக்காமல், பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். காமாட்சியம்மன், ஆதிசங்கரர் படங்களையும், நாணயத்தையும் பக்தர்களுக்கு வழங்குவார். மடத்து ஊழியர்களுக்கு மட்டைத்தேங்காயும், நாணயமும் கொடுப்பார்.
தமிழ்புத்தாண்டு நன்னாளில், வாழும் தெய்வமான பெரியவரை மனதார வணங்குவோம். எல்லாரும் எல்லாமும் பெறுங்கள்.
