Sage of Kanchi

ஸ்ரார்த்த விதி முறைகள் – Shraadha guidelines by Sri Matam Publications


Shared by Smt Saraswathi Thiagarajan mami.  This article apparently written by a vaideeka – so we put trust on him for accuracy. Before reading his article, I want to thank “ahimsa” for sharing two invaluable documents published by Sri Matam (written by Sri Radhakrishan Sastrigal of Srirangam). To me, that will be the authoritative versions on this topic. Goal of this post is to do this ritual in the most sincere way as much as per the rules to avoid any ill-effects passed on to our future generations by not doing right. I have added this post’s link on the right sidebar on the main page under “Important Links”

smp-5
smp-6

நன்றிகள் ராமச்சந்திர சர்மா அவர்கள்

நம்மில் பெரும் பாலோர் ஒவ்வொரு வருஷமும் அவரவர் களுக்கு சரி என்று தோன்றும் வகையில் ஸ்ரார்தத்தை விடாமல் செய்து வருகிறோம். இன்னும் சிலரோ மிகவும் உத்தமமான முறையில் ஸ்ரார்தத்தை கடை பிடித்து வருகிறார்கள். இருந்தாலும், பல காரணங்களினாலும், இன்றைய விபரீதமான சிந்தனைக் குவியலின் நடுவில் நாம் சிக்கிக் கொண்டிருப்பதினாலும், ஸ்ரார்தத்தில் பல விஷயங்கள் நம்மைவிட்டு மறைந்திருக்கலாம். மறந்தும் இருக்கலாம்.

அவற்றை ஞாபகபடுத்தவே, இந்த பதிவு.

பரலோகம், பித்ரு லோகம், பித்ரு கர்மா

நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பர லோகம் உண்டு. பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங் களின் பயனாகவும் தான் பிரேத நிலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர்.

பித்ருக்களை உத்தேசித்து செய்யும் கர்மாவே ஸ்ரார்த்தம்.

நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று. நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக் கிறார்கள். மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் ச்ரார்த்தம் அவ்வாறல்ல குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ச்ரார்த்தம் செய்தே ஆக வேண்டும்.
யாருக்கெல்லாம் திருப்தி ஏற்படுகிறது இந்த ஸ்ரார்த்தம் செய்வதினால்:

1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.

அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப் பிரிவினர். ஹோமத்தில் பாகம் பெறுகின்ற அக்னி பகவான். எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள். பிண்ட ப்ரதானத்தினாலும், விகிரான்னத் தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப் பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும் பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்.

இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர். பித்ருக்களின் அனுக்ரஹம் நமது பித்ருக்கள் இருந்தார்கள். செத்து விட்டார்கள். இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும்.

அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால், நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள். அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூர மானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள்.

பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ஸ்ரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்ச வ்ருத்தி, ஆரோக்யம் ஞானம், இம்மை- மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.பித்ரு சாபம் நாம் கடமை யிலிருந்து தவறக்கூடாது. வாத்தியாரை குறை சோல்லுவதும், சாக்குபோக்குகளை தேடி கண்டுப் பிடிப்பதும் இப்போது அதிக மாகி வருகின்றது. இதைக் கைவிட வேண்டும்.யாரிடம்தான் குறையில்லை. ச்ரார்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும்.

ச்ரார்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன். இதில் சந்தேகமே வேண்டாம். குதர்கக வாதம் கூடாது. ச்ரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப் படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ரு சாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டு மாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.

பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்க வேண்டாம். பித்ருக்கள் கஷ்டத்தினால் பெரு மூச்சு விட்டாலே, நமக்கு தோஷம் ஏற்படும். பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்ச விருத்தி பாதிக்கலாம்.

1.மந்திரங்கள்

ஸ்ரார்த்தம் செய்யும்போது மந்திரங்களை சாஸ்திரிகள் அக்ஷர சுத்தத்துடனும், ஸ்வரத்துடனும் சொல்லி வைப்பது முக்கியம். அதே மாதிரி கர்த்தா கூடியமான
வரையில, அப்யாசம் இல்லா விட்டாலும், சரியாக திருப்பி சொல்ல முயற்சி செய்வதும் மிகவும் அவசியம்.

சிரத்தையுடன் ஸ்ரார்த்தம் செய்வதை முக்கிய கர்மாவாக வைதீக கர்மாக்களில் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரார்த்த இறுதி கட்டத்தில் சிரார்த்த பிராஹ்மண்ர்களிடம் கர்த்தா மந்திர ரூபமாக வேண்டுவது என்னத் தெரியுமா?

நாங்கள் ஒருவரையும் யாசியோம். யாசிப்பவர்களுக்கு நிறைய நாங்கள் தர வேண்டும். எங்களது ஸ்ரத்தை எங்களிடமிருந்து விலகக் கூடாது. வேதமும், குலமும் எப்போதும் அறு படாமல் பெருகட்டும். உணவு நிறைய கிடைக்க வேண்டும். அதிதிகளும் நிறைய எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவர்களிடம் கோரி ஆசி பெறு கின்றோம்.

இந்த மாதிரி அர்த்த புஷ்டியுள்ள மந்திரங்களை நாம் சரியாக உச்சரிப் பதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. நினைத்துப் பாருங்கள்.

ஸ்ரார்த்த நியமம்

இரண்டாது ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் இறந்த அதே மாதம், திதி கூடிய தினத்தில் செய்வதே ப்ரத் யாப்திக ஸ்ரார்த்தம்.ஸ்ரார்த்ததில் ஸ்ரத்தை மிகமிக முக்கியம். கர்த்தா ஸ்ரார்த்த மாதம் அல்லது ஸ்ரார்த்த பக்ஷம் முழுவதும் நிபமத்துடன் இருக்க வேண்டும். அதுவும் முடியா விட்டால் குறைந்த பக்ஷம் முன்

நாளாவது நிபமத்துடன் இருக்க வேண்டும். நியமம் என்றால் அந்த நாட்களில் வெளியில் சாப்பிடுவதாக இருந்தால் சகோதரர், குரு, மாமா, மாமியார் வீட்டை தவிர மற்ற இடங்களில் சாப்பிடக் கூடாது. வபனம் [க்ஷவரம்] அப்யங்கம் [எண்ணை தேய்த்துக் குளித்தல்] இரண்டும் இருக்கணும்

ஸ்ரார்த்தம் செய்யும் முறை

இன்றைய நவீன ஆடம்பரமான சூழ்நிலையில் நாம் புதுப்புது வழக்கங் களுக்கும் நாகரீகம் என்ற பெயரில் புதுப்புது பழக்கங் களுக்கும், பல நேரங்களில் மற்றவர்களைப் பர்த்து பார்த்து நாமும் ஆகர்ஷ ணமாகி, நமக்கு தேவையா என்று கேட்காமலேயே அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம். இதன் நடுவில் ஸ்ரார்த்ததிற்கு அவகாசம் பலருக்கு இருப்பதில்லை என்றாலும் மனமிருந்தால் மார்க்கம் கிடைக்கும்.

விதிப்படி, ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். வசதியும், சிரத்தையும் உள்ளவர்கள் ஸ்ரார்தத்தில் கீழ்கண்ட அம்சங்களை குறைந்தது கடைபிடிக்க வேண்டும். வசதி இருப்பது என்பது முக்கியமல்லவா? குருடனைப்பார்த்து ராஜமுழி முழிக்க வேண்டும் என்றால் எவ்வாறு சாத்தியம். வசதி இல்லாதவர் களுக்கு எந்த தோஷமும் வராது.

சாதாரண உத்யோகத்தில் பணிபுரியும் ஒருவர் வருஷத்தில் இரண்டு ஸ்ரார்த்தம் செய்வதாக இருந்தால், குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும். இது அப்பேர்ப்பட்டவர்க்கு ச்ரமம்தான். குறைவான வருமானத்தில் வாழ்பவர் ஸ்ரார்த்ததை சுறுக்கி செய்தால் தோஷம் ஏற்படாது.

எந்த வருமானமும் சரியாக இல்லாத வர்கள் ஹிரண்ய மாகவும் ஸ்ரார்த்ததை செய்யலாம். [அரிசி, வாழைக்காய், தக்ஷணை மட்டும் அளிப்பது. ஆனால் வசதி இருப்பவர்கள் ஸ்ரார்தத்தை ஏனோதானோ என்று செய்தால் தோஷம் ஏற்படும். சந்தேகமில்லை.

வசதி இருப்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய அம்சங்களை கீழே பார்போம்:
1. பார்வணம் [ஹோமம்].
2. தூய்மையான, ருசியான, சூடான சமையல்.
3. ப்ராம்ஹ ணாளுக்கு ஆசாரியனுக்குவஸ்த்ரம்.
4. போஜனத்திற்குப் பிறகு ப்ராம்ஹ ணாளுக்கு தக்ஷிணை.
5. ஆசாரியனுக்கு [பண்ணிவைக்கும் சாஸ்திரிகளுக்கு] சம்பாவனை [ அவருக்கும் எல்லா தான பொருட் களும்].வெள்ளியில் ஏதாவது பொருளும், வெண்பட்டும் வழங்கினால் மிகவும் விசேஷம்.
6.வழங்கும் சாமான்கள் நல்லதகவும், தரமானதாகவும் இருத்தல் முக்கியமானது. ஏனோதானோவென்று வழங்கக் கூடாது. [உதாரணத்திற்கு வாழைக்காய் கொடுப்பதாக இருந்தாலும் அது பெரியதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்].வசதியும், மனோபாவமும்

உணவு தயாரிக்க இயலாத நிலையிலும் ஸங்கல்பம் செய்து பூர்ண உணவிற்கு தேவையானதைவிட அதிகமான அரிசி, பருப்பு, வெல்லம் காய்கறி, வஸ்த்ரம், தக்ஷிணையுடன் தரவேண்டும் என்பதுவிதி.

இந்த மாதிரி செய்ய முடியாத போது, ஹிரண்ய ஸ்ரார்த்தமாகச் செய்யலாம். அதுவும் முடியாத வர்கள், பசுவிற்கு புல் தரலாம். ஸ்நானம் செய்து முறைப்படி தர்ப்பணம் செய்யலாம். ஸ்ரார்த்த மந்திரங்களை ஜபிக்கலாம். அன்று முழுவதும் உபவாசமிருக்க வேண்டும்.

வசதி உள்ளவன் இந்த மாற்று முறைகளைச் செய்தால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். வினோதமான வாதம் ஒன்று இப்போது சிலரால் சொல்லப்பட்டு வருகின்றது. நல்ல வசதி இருப்பவர்கள் கூட வஸ்திரம் வாங்குவது எங்கள் ஆத்து பழக்க மில்லை என்று கூறுவதுதான் அது. முன்னோர்கள், பாவம் ஒரு வேளை வசதி இல்லாமல் வாங்காமல் இருக்கலாம். அதை நாம் இன்று கூறி தப்பித்துக் கொள்வது அசட்டுத் தனம் அல்லவா?

டிவி, ஏசி, ஸ்கூட்டர், கார், கம்ப்யூட்டர், செல்போன் போன்ற வைகளை கூடத்தான் முன்னோர்கள் உபயோகப்படுத்த வில்லை. இவர்கள் இதையெல்லாம் எங்கள்ஆத்து பழக்கமிலை என்று விட்டு வைத்தார்களா?

புதுப்புது பழக்கங்களும் வாழ்க்கை முறைகளுக்கும் தேவையா என்று யோசிக்காமலேயே மற்றவர்களைப் பார்த்து நாம் அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம்.

ஆசார நியமங்களுக்கும் அனுஷ்டானத்திற்கும் விதண்டா வாதம் கூடாது. கூடியமான வரயில் சாஸ்த்ரங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்று காது கொடுத்துக் கேட்பது நல்லது. அப்படி கேட்போ மாகில் பிறகு பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்காது.

ஸ்த்ரீகள் விஷயத்தையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. கர்த்தாவின் மனைவியின் ஒத்துழைப்பு ஸ்ரார்த்தத்தில் மிகவும் அவசியம். இது இருந்து விட்டால் கர்மா நன்கு நடக்கு மென்பதில் சந்தேகமில்லை. கர்மா சரிவர நடைபெற ஒத்துழைப்பதினால் அந்த ஸ்த்ரீ களுக்கும் பல சௌபாக்கியங்கள் ஏற்படுவதோடு இஹபர நன்மைகள் எண்ணற்றவை ஏற்படும்.புருஷர்களிடம் ச்ரத்தைகம்மியாக  இருந்தாலும், மனைவிகள் வற்புறுத்தத்தினால் ஸ்ரார்த்தம் நடை பெருவதையும் நாம் இல்லங்களில் பார்க்கின்றோம்.

மொத்ததில் எல்லா வைதிக கர்மாக்களும் நன்கு நடைபெற வேண்டு மென்றால். புருஷர்கள் நினைத்தால் மட்டும் போதாது. பொம்மானாட்டிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். நமது தர்மத்தில் ஸ்திரீகளின் இடம் மகத்தானது.

புத்திரர்கள் சேர்ந்து செய்யலாமா?

4.பங்கு பிரிக்கப் பட்டிருந்தாலும், பிரிக்கப்படாமல் தனித்தனியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித் தனி ஸ்ரார்த்தம் தேவையில்லை. தனித்தனியே வாழ்ந்து கொண்டு ஸ்ரார்த்தத் தினத்தன்று ஒன்று சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல.

மூத்தவர் பண்ணினால் அவரருகில் இருந்தால் போதும் என்பது எப்போதும் சேர்ந்து இருப்பவர் களுக்கு மட்டுமே. [தாயார் உயிருடனிருந்தால் அவன் இருக்கு மிடத்தில் பித்ருஸ்ரார்த்தம் எல்லோரும் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்பது பெரியோர்களது
வாக்கு].

தனித்தனியே ஹோமத்துடன் ஸ்ரார்த்தம் செய்வதால்,பித்ருக்களுக்கு அதிக திருப்தி.பித்ருக்கள் பல இடங்களிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும்.ஸ்ரார்த்ததில் பலவற்றிற்கு மாற்று உண்டு. ஆனால் ச்ரத்தைக்கு மட்டும் மாற்றம் இல்லை. தெய்வ காரியங்களை முன்பே குறிப்பிட்ட மாதிரி சில நேரங்களில் தள்ளி வைத்து, பிறகு செய்ய சட்டத்தில் இடமுண்டு.

ஆனால், ஸ்ரார்த்த காரியங்களை தள்ளி வைக்கவோ அசிரத்தையாகச் செய்ய இடமில்லை. பூரண ஈடுபாட்டுடன் அவசரமின்றி செய்ய வேண்டும். முறைப்படி செய்ய இயலாவிடில் சக்தியுள்ள மட்டும் சிரத்தையுடன் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கின்றது. எல்லாவற்றிற்கும் பிரதிநிதி உண்டு. சிரத்தைக்கு பிரதிநிதி இல்லை.

ஸ்ரார்த்தத்தன்று சமாராதனை?

ஸ்ரார்த்த திதி அன்று நாங்கள் வருஷா வருஷம் அன்னதானத்திற்கு [அல்லது ஏதவது பாட சாலைக்கு] ஏற்பாடு செய்து மொத்தமாகப் பணம் கட்டி விட்டோம். அதனால் ஸ்ரார்த்தம் செய்வதில்லை என்று கூறுபவர் களும் நமது கண்ணில் படத்தான் செய்கிறார்கள்.இது சுத்த அபத்தம். அன்னதானம் செய்த பலன் வேண்டுமானால் தனியாகக் கிடைக்கலாம். [ஸ்ரார்த்தத்தன்று பித்ருக்களை வரித்து அல்லா மல் மற்றவர்களுக்குப் போஜனம் செய்விக்கலாமா என்பதே ஒரு கேள்விக்குறி எது எப்படி இருந்தாலும், ஸ்ரார்த்தத்திற்குப் பிரதிநிதியாக அன்னதானம் ஆகாது. ஸ்ரார்த்தம் ஸ்ரார்த்தம் தான். பிரச்சனை ஏதும் இல்லாதவர்களும் வசதி உள்ளவர் களும் முறையாக ஸ்ரார்த்தத்தை அனுஷ்டித்துத்தான் ஆக வேண்டும்.

சில குறிப்புகள்

ஒரு சிறு உதாரணத்தின் மூலமாக இதை புரிந்து கொள்ள முரற்சி செய்வோம். ஒரு நாள் பிரமாதமான மிக ருசியான உயர்ந்த விலையில் பல வகைகளுடன் மிகவும் காஸ்ட்லி யான விருந்து [பெரிய நக்ஷத்ர ஓட்டலாகவும் அது இருக்கலாம்] சாப்பிட்டு விட்டால், மறுநாள் நாம் சாப்பிடாமல் இருந்து விடுகிறோமா? கயா ஸ்ரார்த்தம் மிக உன்னதமானது. ஜன்மாவில் ஒரு தடவையாவது கயா ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்.

ஆனால் அதற்கும் வருஷாவருஷம் செய்யும் ப்ரத்யாப்திக ஸ்ரார்த்ததிற்கும் சம்பந்தம் கிடையாது. இது வேறு. அது வேறு.

ஔபாஸன அக்னி

ஔபாஸனம் நமக்கு நித்ய கர்மாவாகும். ஆனால் இக் காலத்தில் நாம் செய்வதில்லை. ஸ்ரார்த்தத்தன்று ஔபாஸனம் செய்கின்றோம். ஹிரண்யமாக ஸ்ரார்த்தம் செய்யும் போதும் அல்லது பெரியவரோடு மற்ற தம்பிகள் சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக செய்யும்போது, ஔபாஸனம் நம்மை விட்டு அறவே விலகிவிட வய்ப்பிருக்கின்றது. கிருஹஸ்தனுக்கு அடையாளமான ஔபாஸனம் விலகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? ஸ்ரார்தம் பார்வணமாகத்தான் [ஹோமத்துடன்] செய்ய வேண்டும். [பிரம்மச்சாரி கர்த்தாவாக இருந்தால் ஔபாஸனத்திற்கு படிலாக ஸமிதா தானம் சொல்லப் பட்டுள்ளது].

நம்பிக்கை

அவரவர்கள் அவரவர் சூத்திரப் படி ஸ்ரார்த்தம் செய்வதுதான் முறை]. ஒரு வேளை குறிப்பிட்ட சூத்திரம் பண்ணிவைக்க ஆசாரியன் கிடைக்காத பட்சத்தில் எந்த ஸுத்ர வாத்தியார் கிடைப்பாரோ அந்த ஸுத்ரப்படியாவது ஸ்ரார்த்தம் செய்யலாம். கர்மாவை விடக் கூடாது.

அதே மாதிரி சாஸ்திரிகளை குறை சொல்லவும் தேவையில்லை. அவரவர்கள் கர்மா அவரவர் களுடையது. நமது ச்ரத்தையும், பார்வையும் தான் முக்கியம். அதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வெண்டும்.

சம்பாவனை

ஸ்ரார்த்ததில் இப்பொழு தெல்லாம் இன்னொரு விஷயமும் பிரச்சனையாகி வருகின்றதை நாம் சில இடங்களில் பார்க்கின்றோம். அது சம்பாவனை விஷயத்தில். எங்கள் அப்பா அப்போதெல்லாம்

இவ்வளவுதான் கொடுப்பார் என்ற ஆர்க்யுமெண்ட். சிறிது யோசித் தாலும் நமக்கே
புரியும். இது எவ்வளவு அபத்தமென்று. சிலர் குறிப்பிடு கின்ற அந்த காலத்தின் ஒரு ரூபாய் என்பது இன்று கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சமமல்லவா?

அதனால் இப்படி யெல்லாம் வாதிடாமல் தன்னால் முடிந்ததை திருப்தியாக சம்மாவனை அளிப்பது உசிதம். சாஸ்திரிகளை தேவதாஸ்வரூபமாக நினைப்பதுதான் நமது பாரம்பரியம்.

சாப்பிடும் ப்ராம்ஹணாள் எக்காரணம் கொண்டும் வரிக்கப்பட்ட பிராம்ஹணாளை அவமானப்படுத்தும் எண்ணமே நமக்குவரக்கூடாது. நாம் எல்லோருமே ப்ராம்மணார்த்தம் சாப்பிட வேண்டிய குலத்தில் பிறந்தவர் கள்தானே!

நம் முன்னோர் களும் ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருநவர்கள்தானே! ஆனால் இன்று நஸ்ம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணா ர்த்தம் சாப்பிடத் தயார்? நம்மால் முடியாதல்லவா? அப்படி இருக்கும் போது மற்றவர் களை குறை கூறுவதில் நமக்கு என்ன யோக்யதை இருக்கு?

ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களும் ஒரு வகையில் பொது சேவை செய்பவர்கள்தான். அவர்கள் இல்லா விடில் கர்மா எப்படி நடக்கும் நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.

வைதீகம்

வைதீகத்தில் நம்பிக்கை வளர வேண்டும். அதற்கு வைதீகாளிடம் நம்பிக்கையும், மரியாதையும் வைப்பதுதான் ஒரே வழி. வைதீக தர்மத்தை அனுஷ்டிப்பது நமது கடமையாக் இருப்பதால் மிகமுக்கியமான மந்திரங்களையாவது. நாம் ஒவ்வொருவரும் அத்யயனம் செய்ய வேண்டும். கேசட்டுகளை நம்பக் கூடாது. ஏனெனில் அது நம்மைத் திருத்தாது. மேலும் கேசட்டுக்களைக் கேட்கும்போது, நம்மை அறியாமலே நமக்கு ஒரு திருப்தி மாயை ஏற்பைடு விடுகின்றது.
நாம் வாயை திறந்து சொன்னால்தான் பலன் கிடைக்கும். ஒரு நாளும் ஸந்தியா வந்தனம் செய்யாமல் இருக்க வேண்டாம். குறிப்பாக ஸந்தியா வந்தனத்தில்வரும் ப்ராணாயாமம், சூரிய த்யானம், தர்ப்பணம், காயத்ரி ஜபம் போன்ற வைகளை கவனமாக செய்யப் பழகுவது நல்லது. கூடியமானவரை ஆசார நியமங்களை நாம் கடைபிடித்தால் நமக்கு ச்ரேயஸ் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஒருவன் கர்ம வினைகள் எல்லாம் சாஸ்திர விதிகள் படி செய்யும் சமஸ் காரங்களால் தான் தொலையும் – நாம் நம்மை பெற்ற பெற்றோர்களுக்கு செய்யும் தர்ப்பணம் , ஸ்ரார்த்தம் , மஹா லயம் போன்ற பித்ரு சம்ஸ்காரங்களால் தான் அவர்களுக்கு பித்ரு லோகம் கிடைக்கிறது – முறைப்படி வாழ்நாள் முழுதும் செய்தால் அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து விடுதலை பெற்று மேலும் அடுத்த பிறவியில் அவர்கள் செய்த பாவ புண்ணிய ங்களுக்கு ஏற்ப முன்பு இருந்ததை விட நல்ல பிறவி அவர்களுக்கு வாய்க்கிறது – அதற்கு உரிய சம்ஸ்காரங்களை செய்த நாம் , அவர்களுக்கு நல்ல கதியை கொடுத்ததற்காக அவர்கள் தரும் பரிசு தான் நமக்கு இப்பிறவியில் கிடைக்கும் எல்லா வகையில் மேன்மை –

பின் குறிப்பு

இந்தப் பதிவு நம்மிடயே இருக்கும் குழப்பங்களை நீக்கவே. யாரையும் குறை சொல்ல அல்ல.

சர்வம் கிருஷ்ணர்ப்பணம்..

Exit mobile version