
மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தில் பாதாரவிந்த சதகம் 92வது ஸ்லோகத்தில் ‘ஸ்வஸங்கா³த் கங்கேலி ப்ரஸவஜனகத்வேன ச ஶிவே’ னு ஒரு வரி. – கங்கேலி, அசோகம், காமகேலின்னு சில மரங்கள் இருக்காம். அந்த மரங்கள் சுமங்கலிகள் வந்து பேசிண்டிருந்தாலோ, காலால உதைச்சாலோ நன்னா பூக்கும் அப்படினு ஒரு ஐதீகம். அந்த மாதிரி அம்பாளுடைய பாதத்தினுடைய சம்பந்தம் – ‘ஸ்வஸங்கா³த்’.. ‘கங்கேலி ப்ரஸவஜனகத்வேன ச ஶிவே’ – கங்கேலி மரத்தை நன்னா பூக்கச் செய்வதால், சாதாரண சுமங்கலி பெண்கள் பாதம் பட்டாலே பூக்கும்னா.. “நாரீ குலைக சிகாமணி:”அம்பாள். அம்பாளுடைய பாதம்பட்டு அந்த மரம் எவ்வளவு சந்தோஷம் பட்டு எவ்வளவு பூக்கும்! சாதாரணமா வசந்தகாலம் வந்தா இந்த மரங்கள் எல்லாம் கொஞ்சம் பூக்கும். அம்பாளுடைய பாத சம்பந்தத்துல நன்னா பூக்கறது. அதனாலயே உன்னோட பாதத்தை வசந்தகாலம்.. “ஸுரபி”ன்னு சொல்லலாம். அப்படி இந்த “ஸுரபி”ங்கிற வார்த்தைக்கு மூன்று வித பொருள் இருக்கு. எல்லாமே அம்பாளுடைய பாதத்துக்கு பொருந்தும் அப்படீன்னு மூக கவி அந்த ஸ்லோகத்தில் சொல்றார்.
மஹாபெரியவா இந்த மூணாவது வரியை எடுத்துண்டு “அப்படி பெண்களுடைய பாதம் பட்டாலே மரங்கள் கூட பூக்கும்னா, அப்பேற்பட்ட சுமங்கலிகள் நம்மளுடைய ஆத்துக்குள்ள வந்தா எவ்வளோ க்ஷேமம் ஏற்படும்! அதனால சர்வ தாம்பூலம் அப்படினு பாகுபாடு இல்லாமல் எல்லா சுமங்கலிகளையும் கூப்பிட்டு மங்கள பொருட்களையெல்லாம் கொடுக்கணும். அதுக்காகதான் நவராத்திரி வெச்சிருக்கா. அதனால அதை கொண்டாடனும். சக்தி வழிபாடு!” அப்படினு பேசியிருக்கா. பெரியவாளும் நவராத்ரியை மடத்துல ரொம்ப விமரிசையா கொண்டாடுவா.
நாமும் வரும் அமாவாசைக்கு மறுநாள் முதல் ஒன்பது நாட்களும் கொலு வைத்து, பகலில் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி பூஜை செய்வோம். மாலையில் சுமங்கலிகளை உபசரித்து, லலிதா சஹஸ்ரநாமம், துர்கா சப்தசதீ, மூக பஞ்சசதீ, அபிராமி அந்தாதி, முதலிய ஸ்தோத்ர பாராயணங்கள் செய்து, அம்பாள் மீது கீர்த்தனங்கள் பாடி, குழந்தைகளுக்கு சுண்டல் விநியோகம் செய்து நவராத்ரியை விமரிசையாக கொண்டாடுவோம்.
துர்கா லக்ஷ்மி, சரஸ்வதி அஷ்டோத்தரம் -> துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு; Durga Lakshmi Saraswathi ashtothara naamaavali audio mp3