Sage of Kanchi

Sri Balu & Sri Kantan Mama

Thanks to Sri Sabarish for the FB article. It is very true – the inner circle (for lack of better term) of Mahaperiyava is very unique – it is very hard to do even half a day of service to Mahaperiyava due to strict guidelines on acharam, niyamam and total unpredictability on how Parameswaran would start yatras etc within 15 mts etc.

the first photo was taken after Sri kantan mama got sanyasi. Sri Balu mama got sanyasa later.

 

*மஹா பெரியவருடன் பாலு மாமாவும் ஸ்ரீ ஸ்ரீ கண்டன் அவர்கள் கொண்ட பக்தியின் வெளிப்பாடு பிரகலாதனை மிஞ்சியது*

ராயபுரம் ஸ்ரீ பாலு’** அவர்கள் +
**’திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன்’** அவர்கள்
பற்றிய சில முக்கியமான செய்திகள்:

இருவருமே தங்கள் வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளாத பிரும்மச்சாரிகள். இருவருமே காசு பணத்தைத் துச்சமாக நினைத்தவர்கள். இடுப்பு வேஷ்டி துண்டு தவிர மற்ற எல்லாவற்றையும் உதறி எறிந்துவிடும் உத்தமர்கள். ஸ்ரீமடத்தில் சம்பளம் ஏதும் வாங்காமல் உண்மையான பக்தியுடன் கடைசிவரை உழைத்து பகவத் கைங்கர்யம் செய்தவர்கள்.

இருவருமே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் கூடவே இருந்து, சுமார் 30 வருடங்களுக்கு மேல் [1965-1994] ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுக்கு கைங்கர்யம் செய்து வந்தவர்கள். இது சாதாரணதோர் விளையாட்டு விஷயம் அல்ல. மிகவும் குறிப்பறிந்து நடக்க வேண்டிய கஷ்டமான வேலை.

இரவு பகல் எந்நேரமும் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும். பசிபட்டினி இருக்க வேண்டும். ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்கு பிக்ஷை நடைபெறாமால், பிக்ஷை நடத்தி வைக்காமல் இவர்கள் எதையும் சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ கூட முடியாது. ஸ்வாமிகள் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் விரதம் பட்டினியென்றால் இவர்களும் பட்டினி இருக்கத்தான் வேண்டியிருக்கும்.

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல ஸ்ரீ ஸ்வாமிகள் எப்போது எழுந்து நிற்பார், எப்போது எங்கே புறப்படுவார் என யாராலும் கேட்கவோ, சொல்லவோ, தீர்மானிக்கவோ, அனுமானிக்கவோ முடியாது.

அதனால் எப்போதுமே இவர்கள் இருவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் தான் இருக்க வேண்டும். ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு ஸ்நானத்திற்கான ஏற்பாடுகள், மடி வஸ்திரங்கள், தியானம், பூஜை, நித்யப்படி அனுஷ்டானங்கள் முதலியவற்றிற்கான அடுத்தடுத்த தேவைகளை கவனிக்க வேண்டியிருக்கும்.

திடீரென்று ஸ்வாமிகள் விடியற்காலம் 3 மணி சுமாருக்கு எங்கேயாவது புறப்பட்டால், இவர்களும் அதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்.

சின்னக்காஞ்சீபுரம், தேனம்பாக்கத்தில் சிவாஸ்தானம் என்ற இடத்தில் ஸ்ரீ மஹாபெரியவா நீண்ட நாட்கள் தனியே, ஓர் கிணற்றடிக்குப்பின்புறம் கொட்டகை போட்டுக்கொண்டு தங்கியிருந்தார்கள். தரிஸனத்திற்கு வருவோர் அந்தக்கிணற்றுக்கு முன்புறம் நின்றே, கிணற்றுக்குப்பின்னால் உள்ள அவர்களை தரிஸிக்க வெண்டும் என ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

முதல் நாள் மாலை தரிஸனம் செய்த நானும் என் குடும்பத்தாரும் மறுநாள் காலையில் மீண்டும் தரிஸனம் செய்ய வேண்டும் என விரும்பியதால், அங்கே அருகில் இருந்த உபநிஷத் ப்ரும்மேந்திர மடம் என்னும் இடத்தில் ஸ்ரீ கோபால தீக்ஷதர் என்பவர் வீட்டில் ஓர் இரவு தங்க நேர்ந்தது.

அது மிகவும் குளிரான மார்கழி மாதம். விடியற்காலம் 4 மணிக்குள் வாசலில் ஒரே ஒரே பரபரப்பு. விடியற்காலம் 3.30 மணிக்கே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா புறப்பட்டு, மிகப்பெரிய வரதராஜ பெருமாள் கோயிலின் வெளிப்பிரகாரத்தை படுவேகமாக பிரதக்ஷணம் செய்யக்கிளம்பி விட்டார்கள், எனக்கேள்விப்பட்டு நானும் ஓடினேன்.

விளக்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டு இவர்கள் இருவரும் [ஸ்ரீ பாலுவும் ஸ்ரீ ஸ்ரீகண்டனும்] கூடவே ஓடுகிறார்கள். அதற்குள் நிறைய ஜனங்களும் தரிஸனத்திற்கு வந்து சேர்ந்து கொண்டு விட்டார்கள்.

ஜனங்கள் யாரும் நமஸ்காரம் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்ரீ மஹாபெரியவா மேல் பட்டுவிடாதபடி, கட்டுப்பாடுகள் செய்ய வேண்டியதும் இவர்கள் வேலையாகவே இருந்தது.

பலர் வீடுகளில் வாசல் தெளித்து கோலம் போட்டு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கு பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்பதும், ஹாரத்தி சுற்றி கற்பூரம் ஏற்றுவதுமாக விடியற்காலம் நாலு மணிக்கே வெளிப்பிரகார நான்கு வீதிகளிலுமே ஒரே அமர்க்களமாக இருந்ததைக்கண்டு ரஸித்தேன்.

சிலசமயங்களில் ஸ்ரீ ஸ்வாமிகளை இவர்கள் இருவரும் உரிமையோடு கோபித்துக்கொண்டு, எப்படியாவது கொஞ்சம் ஆகாரம் அவர்கள் எடுத்துக்கொள்ள வைப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்.

சின்னக் கைக்குழந்தைக்கு அதன் தாய் வாத்சல்யத்துடன், விளையாட்டுக்காட்டி, செல்லமாக கோபித்து, சோறு ஊட்டுவது போல மிகவும் கஷ்டமான வேலை தான், ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்கு பிக்ஷை செய்து வைப்பது என்பதும்.

அவர்களுக்கான உணவுகளில் நிறைய கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உண்டு. சில மாதங்களில் அரிசி, பருப்பு வகைகள் போன்ற தான்யங்களே எதுவும் சேர்க்கக்கூடாது. சிலமாதங்க்ளில் காய்கறிகள், சில மாதங்களில் பழ வகைகள், சில மாதங்களில் பால் தயிர் போன்றவை தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும். அவரின் வாழ்நாளில் கடைசி காலங்களில் ஒரே ஒரு வேளை மட்டும், ஒரு கொட்டாங்கச்சி அளவு நெல் பொரியில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்ததாகச் சொல்வார்கள். அவர்களின் தபஸ் வலிமையினால் மட்டுமே நீண்ட காலம் ஆரோக்யமாக வாழ்ந்துள்ளார்கள்.

இந்த பாலுவும், ஸ்ரீகண்டனும் தனக்காகவே இப்படிப் பட்டினி கிடக்கிறார்களே என்று இரக்கப்பட்டு, ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களும் பிக்ஷைக்கு அமர்வதும் நடைபெற்றதுண்டு எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

அதுபோல ஆயுர்வேத வைத்யமும், மருந்து தயாரிப்புகளும் தெரிந்துகொண்டிருந்த ஸ்ரீ ஸ்ரீகண்டன் அவர்கள், ஸ்ரீ பெரியவாளை மிகவும் கெஞ்சிக்கூத்தாடி வற்புருத்தி ஒருசில சூர்ணங்கள், லேகியங்கள், கஷாயங்கள் முதலியன, சிரத்தையாகத் தானே தன் கைப்படத் தயாரித்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை அவ்வப்போது சாப்பிட வைப்பதும் உண்டு எனக்கேள்விப்பட்டுள்ளேன்.

இதுபோல கண்களை இமைகள் காப்பது போல ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு இவர்கள் இருவரும் தூய அன்புடனும், வாத்சல்யத்துடனும், பக்தியுடனும் பகவத் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்றிருந்தார்கள். THEY WERE ONLY, LOOKING AFTER ALL THE PERSONAL NEEDS OF “HIS HOLINESS MAHA SWAMIGAL” FOR MORE THAN 30 YEARS FROM 1964 TO 1994.

இவர்கள் இருவரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சுவையான MIRACLE அனுபவங்களைச் சொல்லச்சொல்ல நான் அவற்றை மிகவும் ஆர்வமாகக்கேட்டு அறிந்து, மகிழ்ந்தது உண்டு.

இதில் ஸ்ரீ. ஸ்ரீகண்டன் என்கிற வைத்யலிங்க ஸர்மா பிறந்த ஊர் : காரைக்குடி அருகில் உள்ள வேலங்குடி என்ற கிராமம். அவர் பிறந்த நாள்: 04.04.1937. ஆனால் இவரின் சொந்த ஊர் : திருச்சி. பூர்வீகம்: லால்குடிக்கு அருகே உள்ள ஆங்கரை கிராமம்.

இவரும் பிறகு சந்நியாசம் வாங்கிக்கொண்டார். சந்நியாச ஆஸ்ரமம் காஞ்சீபுரம் காமாக்ஷி அம்மன் கோயில் குளத்தில் மேற்கொண்ட நாள்: 24.02.2002. அதுமுதல் ஸ்ரீ ஸதாசிவானந்த தீர்த்த ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார்.

இவர் சந்நியாஸம் மேற்கொண்ட 24.02.2002 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் உயரமாக நிற்பவர் ராயபுரம் ஸ்ரீ. பாலு அவர்கள்.

இந்த ஸ்ரீ.ஸ்ரீகண்டன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸதாசிவானந்த தீர்த்த ஸ்வாமிகள் ஸித்தியடைந்து ப்ருந்தாவனப்பிரவேசம் ஆன நாள்: 11.05.2003

இவரின் அதிஷ்டானம் திருச்சி லால்குடிக்கு அருகில் உள்ள ஆங்கரை என்னும் கிராமத்தில் காயத்ரி நதி என்ற வாய்க்கால் கரையோரம் அமைந்துள்ளது.

ஸ்ரீ ராயபுரம் பாலு என்பவர் சமீபத்தில், சென்ற மாதம் [மார்ச் 2013 முதல் வாரத்தில்] கும்பமேளா நடந்தபோது, அலஹாபாத் திரிவேணியில், சந்நியாஸம் மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் இனி ஸ்ரீ ஸ்வாமிநாதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என அழைக்கப்படுவார்கள். இவர்கள் இப்போது ஸ்ரீ காஞ்சி சங்கரமடத்தில் உள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் அதிஷ்டானத்தின் அருகே ஓர் குடிலில் தங்கியுள்ளார்கள்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பக்தகோடிகள் அனைவருக்குமே, இந்த ராயபுரம் ஸ்ரீ பாலு + திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் ஆகிய இருவரையும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.

அடியாருக்கு அடியாராக அருந்தொண்டுசெய்து வந்த இவர்கள் இருவரையும் பற்றி மற்ற அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என எண்ணி இங்கு இவர்களைப்பற்றி சிறப்பித்து எழுதியுள்ளேன்.

சிவன் அடியார்களாக விளங்கிய 63 நாயன்மார்கள் பற்றி புத்தகங்களில் படித்துள்ளேன். அவர்களில் யாரையும் நான் நேரில் பார்த்தது இல்லை.

என்னைப்பொறுத்தவரை, பரமேஸ்வரனின் அவதாரமாகத் திகழ்ந்து வந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு அருந்தொண்டு ஆற்றிய இந்த ராயபுரம் ஸ்ரீ. பாலு அவர்களையும், திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்களையும் 64வது + 65வது நாயன்மார்களாகவே என்னால் நினைத்து மகிழமுடிகிறது.

Exit mobile version