Sage of Kanchi

ஸ்ரீமஹாஸ்வாமி அந்தாதி

Thanks Suresh for this wonderful work and sharing with other readers.

Periyava_dhyanam_sudhan

Thanks Sudhan for this brilliant drawing!

சீர்களில் சித்து விளையாட்டைச் செய்த வார்த்தைச் சித்தர்களாய் பலபேர்கள் அந்தாதி வகை விருத்தங்களால், படித்து பலன்பெற்று மகிழ்வோர் அனைவரது வருத்தங்களையும் போக்கியுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

“காஞ்சிப் பொக்கிஷம்” அருளிய வரிவார்த்தை வித்தகனாம், “அர்த்தமுள்ள இந்துமதம்” என அழகு தமிற்சொல்லால் அவை தரும் அருமருந்தாம் அறங்களைத் தந்த கவிப்பேரரசர் கண்ணதான் போன்றோரும் அந்தாதி விருத்தங்களால் அமுதகானமழை பொய்தவையும் நாம் அறிந்ததே!

அவ்வகையிலாய் அடியேன், அறிவிற்சிறுபிள்ளையாம் உங்கள் அன்பு உறவாய், அதிரூப சுந்தரச் சங்கரனாம் நம் சசிசேகர சங்கரனை உங்கள் அனைவரோடும் போற்றி நமஸ்கரித்து ப்ரார்த்திக்க “அந்தாதி” யென ஒரு போற்றுதல் இங்கே அமைய வேண்டி ஒரு சிறு முயற்சியை செய்ய எத்தணிக்கின்றேன்.

அன்பிற் சிறந்த அம்மையப்பனாம் ஆனந்தவரதன் நெய்யுந்திருத்தலத்தே நீள்பலகாலமாய் மாதவம்செய் மா’தவனாம் மங்களவரதாயகனை அந்தாதி கொண்டு அந்த ஆதி தேவனைப் போற்றிட ஆவல் கொண்டு, இந்த அந்தாதி ரதத்திலே அவரை அமரவைத்து சொற்களெனும் வடம்பிடித்து தேரிழுக்க முயல்கின்றேன் அறிவிற்சிறியனாம் அடியவன் அருந்தமிழ் துணைகொண்டு தேரிழுக்க முயல்வதால் அனைவருமாய் அடியவனுக்கு ரதமிழுக்க உங்கள் ப்ரார்த்தனைக் கரங்கள் தந்து, உலக உறவுகள் யாவரும் நலமோடு வாழ அடியேனோடு ஒருசேர போற்றிட வாருங்களேன்!

ஜெய ஜெய சங்கர… ஹர ஹர சங்கர…

#ஸ்ரீகுருதுதி

|| கணேச காப்பு ||

குஞ்சரக் கன்றாய் நல்கும் கலைஞானம்
அஞ்சுகத் தெரிவாய் உய்த்துணர – ஆலவாயக்
குஞ்சிதத் தண்டவேள் அந்தாதி பாடிடவே
அஞ்சுகர வாரணமே காப்பு!

|| த்யானம் ||

எப்பொழுதும் குருசரணம் நினைந்திடுவாய் நன்னெஞ்சே
எம்பெருமான் காஞ்சியனாம் சசிசேகரன்தாள் எண்ணே!
முப்பொழுதுங் கடந்தவொரு மணியிறையைக் கண்டுநிறை
முத்தியெனும் வானம்மேவு மொளியுருவா யாகுகவே!
செப்பரிய தவநிலையை அளித்ததிரு கோமகனாம்
முப்புறமு மெரித்ததிரு இறையோனின் அவதாரம்!
துப்பாய ஞானமொடு அழிவுயெனுங் குளிரகற்றி
யெமைகாத்து ரக்ஷிக்கும் குருசங்கரன் தாள் சரணே!

|| ஸ்ரீ சந்த்ரசேகர குரு ஸ்ரீ மஹாஸ்வாமி அந்தாதி: ||

————————————————————————-

கங்கை பொங்குங் கதிர்முடி இறையன் போடே
நங்கை வளமருட் தலமதி லுறையோ னெனவே
அங்கை வுயர்த்தி அருள்புரி விரியென யெமக்குஞ்
செங்கை தந்தெமைக் காக்குந் தூயநற் குருவே !

(1)

குருவென கூண்பிறை சூடியின் எழிலென உதித்தோய்
தருவென அருளுஞ் சிவக்கன லழகின் ஒளியாய்
இருமன விகாரத் திடர்படு மெமையுங் காத்திட
ஒருமன நேயமுந் தந்தருள் திருமறைக் கோணே!

(2)

கோணா மனமதி லுறையுந் திருவாய் மலர்ந்தோய்
வாணா ளிதனில் வணங்குதற் கிறையா யெமக்குங்
காணா விடினுங் கண்டெமக் கருளும் விதமாய்
கருணா மூர்த்தியு மானதோர் துறவறத் தழகே!

(3)

அழகாய் அறிவாய் எங்கிலும் நிறைவாய் விளங்கி
குழலாள் ஒளியாய் திரைசார் அருளா யமையும்
நிழலாய் தொடர்வாய் படரும் ஒளிபோ லெமக்கும்
கழலாள் கனியருள் புவிபெற வந்ததோர் நிறைவே!

(4)

நிறைவே நிலந்தனில் திகழோளி முத்தாம் முதலே
சொல்லா தறியும் வல்லாய் வேந்தென வந்தே
கள்ளார்க் கருள்புரி கார்மழை போலே கலியிதில்
வல்லான் உனைதொழா தில்லை யெமக்கும் உய்வே!

(5)

உய்யும் ஒளிதரும் மலர்நகை முகமே! முத்தென
செய்யும் பணிசீர் பெறவருள் நிதியே! நிமலனாய்
மெய்யுக் கெட்டாப் போதமுந் தந்தெமை காக்கும்
நெய்யுந் தலமுறை காமகோடி பீடத்து முனியே!

(6)

முனியாய் மும்மலம் களையுங் கதிராய் அவதரித்தே
கனியே பலமதம் போற்றிடும் பரமென சஞ்சரித்தோய்
தனியே தவியா நிலைதரும் கமலமாம் பதமலர்
தனிலே சரண்புக நிறைவே வரமாய் அருள்வாய்!

(7)

அருளாய் அரன்மால் அயங்குக னுருவாய் அமைந்தே
உருள்வா தமதை உருக்கும் மாமருந்தே மருந்தீசா
மருள்வார் மமதை மருட்டிய வெம்பதர்க் கூட்டமெமக்
கருள்வாய் மதிவளர் மறைபோற்றும் நாயகமே!

(8)

நாயகமே அகஞ்சேர் அருளொளிச் சுடராய் அன்பர்க்குச்
சுகமே தூரியப் பொருளே துணையே! தூமணியே
அகமேத் திடுந்தூய நல்மானிடந் தூய்த்திட குருவாய்
செகமே வியதூவுரு திவ்வியன் திகழுந்தாள் நடுவே!

(9)

நடுவா னிலுறை மதிசேர் அழகாய் அவதரித்தோய்
கடுவா யுரையா கனிவே தியனாய் காஞ்சியனாய்
கடுஞ்சின மேவிய கள்மனத் தீயவை யாவையும்
விடுவித் தமைதியை விளைப்பாய் எம்குல பதியே!

(10)

பதியுறை கலையும் மதிவளர் மறையும் காத்தவனே
கதியென வருள்புரி கயிலையம் பதியனாய் வந்தெமக்கும்
உதியன யாவிலும் உட்பொருள் உணர்ந்திட உவந்தவனே
பதியென சாந்தப் பொலிவருட் சசிசேகர சங்கரனே!

(11)

சங்கரனே சகலர்க்கும் மங்களமாய் வரந்தரும் மா’தவனே
இங்கிதமே அறிவுசேர் பேறுபெற நிந்தாள் வந்தனமே
கிங்கரர் வந்திடும் பொழுதிலுமே எம்மனம் இடையறாது
சங்கரம் போற்றிடவும் அருள்வாய் திரையார் கங்கையனே!

(12)

|| பயன் ||

ஐந்தொழில் நடம்புரி கயிலனு முமையு
மன்பொடு ஓருரு மேவிய சோதியன்
சிந்துர வதனமுஞ் சிவகொழுந் தெனவும்
பயனுறு மறையுங் காத்திடும் திருவென
சுந்தர சந்நிதி மேவிடும் காஞ்சியில்
குஞ்சித சங்கர குருவடி பற்றிட
அந்தர வினையெது மண்டிடா வாழ்வில்
மங்கள மாட்சிமை ஓங்குதல் திண்ணமே!

பெரியவா சரணம்!
பெரியவா சரணம்!
ஸ்ரீ மஹா பெரியவா அபயம்!

பரமாத்மாவை அடைய நாலு மார்க்கங்கள் ஞானம், பக்தி, கர்மம், யோகம் என இருப்பதாகவும், சரீரம், மனசு இதற்கெல்லாம் ஆதாரமாக இருக்கிற, ஆத்மா என்ன என்ற விவகாரத்திலேயே, எப்போதும் இருந்து கொண்டிருந்தால், கடைசியில் அதுவே பளிச்சிடுமாம் – அது தான் ஞானமென அனேகம் மஹானுபாவர்கள் நமக்கு அன்றாடம் கூறியருளுகின்றனரே! இந்த ஞானம் பெற்றுவிட்டால், அறிகிற ஜீவாத்மாவுக்கும் அறியப்படுகிற பரமாத்மாவுக்குமான பேதமே இல்லை என்பதையும், எல்லாம் ஒரே சாந்த சமுத்திரமாக அடங்கி இருப்பதையும் நாம் உணரலாமல்லவோ!

சிலருக்கு இந்த சாந்தியைவிட, பரமாத்மாவோடு ஒன்றாகச் சேர்ந்து கரைந்து விடுவதைவிட, கொஞ்சம் பிரிந்து அவரிடம் அன்பாக இருந்து கொண்டிருப்பதில் தான் ருசி இருக்கிறது போலும்! அவ்வகையில் நாம் பிரதி தினமும் பக்தி செய்கிறோம்; அதனால் பரமாத்மா கருணை பொழிகிறார். நாம் செய்யும் பக்தியும், அவர் நமக்கு புரியும் கருணையும், ஆக இரண்டுமே அன்பு என்பதன் இரண்டு ரூபங்கள் தாமே! ஆக, ஞானம் அறிவு வழி; பக்தி அன்பு வழி! அன்பு வழிகொண்டு அறிவு வழி பெறவே நாம் அனுதினமும் நம் ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சங்கர மஹாபிரபுவான ஸ்ரீமஹாஸ்வாமிகள் பாதாரவிந்தங்களிலே பணிந்து போற்றி ப்ரார்த்திக்கின்றோம்; பக்தி செலுத்துகின்றோம்.

அந்த கலியுகத் தெய்வம் சொல்லியருளியதைப் போலே நமக்கென்று பண்ணிக்கொள்ளாமல் லோக உபகாரமாகப் பண்ணி, அதன் பலனை ஈசுவரனுக்கு அர்ப்பணம் செய்தால் அகிலவுலகந்தனிலும் அடையமுடியாத ஓர் ஆனந்தத்தை, நிறைவைப் பரிபூரணமாகப் பெறலாமே என்பதாலே அனுதினமும் அனைவருக்காகவும் ப்ரார்த்தனைகள் செய்து, “அவர் அருளால் அவர் தாள் வணங்கி” சர்வம் ஸ்ரீசந்திரசேகரம் என மனதார உணர்ந்துய்ய முற்படுகின்றோம்.

அவ்வகையிலே, சிறியேன், அறிந்ததோர் சிற்றளவு தமிழறிவிலே ஆழ்மனத்தூடே அகழ்ந்தெடுத்த உணர்வுகள் கூட்டி, அன்னையாம் தமிழமுத அழகியின் சொற்களெனும் வடம்பித்து, இன்றைய பொழுதிலே உங்கள் அனைவருடைய ப்ரார்த்தனைக் கரங்களின் உதவியாலே அந்தாதி ரதமிழுத்ததும் கூட அந்த அவ்யாஜ கருணாமூர்த்தியின் அருளாலே தாமே!

சர்வம் ஸ்ரீ சந்த்ர சேகரம்!

ஆத்மார்த்தமாக ஐயனை ப்ரார்த்தித்தோமானம் சர்வ நிச்சயமாக அவர் அருளாலே ஆனந்தம் அடைவோம் என்பது திண்ணமே!

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்

சாணு புத்திரன்.

Exit mobile version