Sage of Kanchi

Vinayagar Agaval – Part 1

Thanks to Sri Srinivasan for the article.

periyava_pillayar_pillar

விநாயகர் அகவல் – பாகம் 1

நமஸ்காரம்

ஸ்ரீ மஹாபெரியவா சொன்னதை ஒட்டி, விநாயகர் அகவல் – என்ற ஸ்துதி பாடலின் அர்த்தத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம். முதலில், பாடல் தலைப்பின் பொருளின் மகத்துவத்தைப் பார்ப்போம். விநாயகர் என்ற நாமாவைப் பற்றி ஸ்ரீ மஹாபெரியவா சொல்லுவதை பார்க்கலாம்.

[தெய்வத்தின் குரல் – Volume 6]

பிள்ளையாரின் பிரஸித்த நாமாக்களில் ஒன்று விநாயகர். வட தேசத்தைவிட தக்ஷிணத்தில் அதிப்ரஸித்தமான நாமா. பிள்ளையார் சதுர்ச்சி என்று பேச்சில் சொல்வதையே விநாயக சதுர்த்தி எனறுதான் நாம் formal- ஆகக் குறிப்பிடுவோம். வடக்கே கணேஷ் சதுர்த்தி என்பார்கள். ஸித்தி விநாயகர், ச்வேத விநாயகர் என்றெல்லாம் பெரும்பாலும் விநாயக சப்தம் சேர்த்தே நம் தக்ஷிண தேசக் கோயில்களில் அவருக்குப் பெயர் சூட்டியிருக்கும். விநாயகர் அகவல் என்ற ஒளவையின் பிரஸித்த ஸ்தோத்திரத்துக்குப் பெயர் இருக்கிறது.

வி-நாயகர். நாயகர் என்றால் தலைவர். பல பேருக்கு மேலே அவர்களைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர்.

வி எனும் அடை
விநாயகர் என்ற பெயரில் நாயகருக்கு முந்தி வி இருக்கிறது. சிவகணத் தலைவரான பிள்ளையார் நாயகர் என்ற பேருக்கு ரொம்பவும் பொருத்தமுடையவர் என்று தெரிகிறது. அதற்கு முந்தி வி போட்டால் என்ன அர்த்தம்?

ஸம்ஸ்கிருதத்தில் வார்த்தைகளுக்கு முன்னே சேர்க்கிற prefix (முன்னடை) களில் வி என்பது ஒன்று. இந்த வி யின் விசேஷம் என்னவென்றால் அது பின்னாடி என்ன வார்த்தை வருகிறதோ அதன் அர்த்தத்தை இரண்டு விதங்களில் மாற்றக்கூடும். ஒன்றுக்கொன்று முழுக்க வித்தியாஸமான இரண்டு விதங்கள். மலம் என்றால் அழுக்கு. வி சேர்த்து விமலம் என்றால் சுத்தம். இந்த இடத்தில் வி என்பது பின்னே வரும் வார்த்தைக்கு ஆப்போஸிட் மீனிங் உண்டாக்கும்படிச் செய்கிறதென்று தெரிகிறது. ஆனால் சுத்தத்துக்கு வி போட்டு விசுத்தம் என்று வார்த்தை இருக்கிறது. அதற்கு சுத்தமாக இல்லாதது என்று ஆப்போஸிட் அர்த்தம் பண்ணிக் கொண்டால் தப்பு. இந்த இடத்தில் வி என்பது பின்னே வரும் வார்த்தையை எதிர்ப்பதமாகப் பண்ணாது. அதற்கு மேலும் வலியும் உயர்வுமே கொடுக்கும். விசுத்தம் என்றால் பரம சுத்தமானது எனறு அர்த்தம். விபரீதம் என்று ஒரு வார்த்தையைச் சொல்கிறோம். பரீதம் என்றால் முறையாகச் சுற்றிக் கொண்டிருப்பது. விபரீதம் முறைகெட்டுத் தாறுமாக இருப்பது. இங்கே வி எதிர்ப்பதமாக்கிவிடுகிறது. ஜயம் வெற்றி என்றால் விஜயம் அதற்கு எதிப்பதமான தோல்வியா என்றால், அப்படி இல்லையல்லா?விசேஷமான, அதாவது சிறப்புப் பொருந்திய வெற்றியே விஜயம்.

விசேஷம் என்ற வார்த்தையையே எடுத்துக் கொள்ளலாம். சேஷம் – விசேஷம். சேஷம் என்றால் மீந்துபோனது என்றே நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதுவும் ஸரிதான். அதைவிட சிறந்த உள்ளர்தமும் உண்டு. மற்றதோடு சேராமல் தன்னுடைய உயர்வினால் அவற்றிடமிருந்து பிரித்து நிற்பதும் சேஷம் தான். சிஷ்டர் என்று சான்றோர்களைச் சொல்கிறோமல்லவா?சேஷ த்திலிருந்துதான் சிஷ்ட பதம் வந்தது.

ஸமூஹத்தில் சராசரி ஜனங்களில் ஒருவராக இல்லாமல் பிரிந்து உயர்ந்து, (சிரித்து) distinct- ஆக இருந்து distinction பெற்றவர்களே சிஷ்டர்கள். சேஷம் என்பதற்கு தன்னுடைய சிறப்பால் தனிப்பட்டு நிற்பது என்ற இந்த அர்த்தத்தைவிட மீந்து போனது என்ற அர்த்தமே வியாபகமாக ஆனதால்தான், அந்தச் சிறப்பை வலியுறுத்திக் காட்டுவதற்காக வி சேர்த்து விசேஷம் என்பது.

இருபொருளிலும் வி-நாயகர் !
வி ப்ளஸ் நாயகர் என்னும்போது வி என்பது நாயகருக்கு எதிர் அர்த்தம் கொடுக்குமா?அல்லது அதை இன்னும் சிறப்புத் தந்து உசத்தி வைக்குமா?

இரண்டுந்தான்,

அதெப்படி என்று ஆச்சர்யமாயிருக்கலாம், சொல்கிறேன்.

தவன் என்றால் பதி. மாதவன் என்றால் மா என்கிற மஹாலக்ஷ்மியின் பதி. விதவா என்றால் பதி இல்லாதவள். அதே போல விநாயகர் என்றால் தலைவன் இல்லாதவர். எல்லோருக்கும் அவர்தான் தலைவர். அவருக்குமேல் தலைவர் இல்லை. அதனால் தலைவர் இல்லாதவர் வி-நாயகர்.

தம்மிலும் மேலான ஒரு தலைவர் இல்லாதவர் விநாயகர்.

இங்கே வி எதிர் அர்த்தம் கொடுக்கிறது.

இதற்கு நேர் மாறாக அதே வி சிறப்புக் குறியாகவும் இருக்கிறதல்லவா?அந்த விதத்திலும் விக்நேச்வரர் விநாயகராக இருக்கிறார். அவர் ஸாதாரணமான நாயகர் (தலைவர்) அல்ல. ரொம்பவும் சிறப்புப் பொருந்திய, விசேஷமான விசிஷ்டமான நாயகர் அதனால் விநாயகர்.

தமக்கு மேல் நாயகன் இல்லாததாலும் வி-நாயகர். தாமே மிக மேலான நாயகராக இருப்பதாலும் வி-நாயகர். இரண்டு அர்த்தத்திலும் பேர்ப் பொருத்தமுள்ளவராக இருக்கிறார்.

அமரத்தில் பிள்ளையார்ப் பெயர்கள்.
அமர (கோச) த்தில் விக்நேச்வரரின் பெயர்களைச் சொல்லும்போது விநாயக என்றுதான் ஆரம்பித்திருக்கிறது. (மனத்திற்குள் அந்தப் பெயர்களைச் சொல்லிக்கொண்டு, விரல் விட்டு எண்ணியபடி) நம்முடைய சாஸ்திரங்களில் பதினாறு நாமாக்களை முக்யமாகச் சொல்லியிருக்கிறதென்றால், ஜைனனான அமரஸிம்ஹன் எழுதிய அந்தக் கோசத்தில் இதில் பேர் பாதி – எட்டுப் பெயர்கள் – சொல்லியிருக்கிறது.

விநாயகோ, விக்நராஜ, த்வைமாதுர, கணாதிபா: I

அப்-யேகதந்த, ஹேரம்ம, லம்போதர, கஜாநநா: II

இதிலே விநாயக, விக்னராஜ, ஏகதந்த, ஹேரம்ப, லம்போதர, கஜானன என்ற ஆறு பெயர்கள் நம்முடைய ஷோடசநாமாவிலும் இருக்கின்றன. கணாதிப என்ற பெயர் கணாத்யக்ஷ என்பதாக ஷோடச நாமாவில் இருக்கிறது. இதில் இல்லாமல் அமரத்தில் இருக்கும் ஒரே பெயர் த்வைமாதுர என்பது. அப்படியென்றால் இரண்டு தாயார்களை உடையவர். அம்பாள் ஒரு தாயார். கங்கை இன்னொரு தாயார். கங்கையிலுள்ள சரவணப் பொய்கையைச் சேர்ந்தே சிவநேத்ரத்தின் அக்னிப் பொறி ஸுப்ரஹ்மண்ய ஸ்வரூபமாக உத்பவித்ததால் ஸுப்ரஹ்மண்யருக்கு கங்கை நேர் தாயார் மாதிரி. அதனால்தான் அவரை காங்கேயன் என்பது. பிள்ளையாருக்கு அத்தனை நேர் சம்பந்தமில்லா விட்டாலும்,

அவருடைய தகப்பனாருடைய சிரஸில் கங்கை பத்னி ஸ்தானத்திலிருப்பதால், ஒளபசாரிகமாக (உபசாரமாக) அவளையும் ஒரு தாயாராகச் சொல்வது. விநாயக நாமா அமரத்தில் பிள்ளையாரின் முதல் பெயராயிருக்கிறதென்று சொல்ல வந்தேன். ஒரு நிகண்டுவில் (அகராதியில்) ஒரு தெய்வத்தைப் பற்றிய பெயர் வரிசையில் முதலாக வருவதென்றால் அது முக்கியத்வம் வாய்ந்த நாமா என்று அர்த்தம்.

அகவல் என்றால் மயில் அகவுவது போன்ற சந்தத்தை உடைய பாடல்.

72 அடிகளைக் கொண்ட இது ஒளவையாரால் பாடப் பெற்றது.

Exit mobile version