Sage of Kanchi

காஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – – சங்கரன் சந்திரன் – பகுதி 1

Periyava Smiling Sketch BN Mama

Thanks to BN Mama for this anusham special drawing….

Thanks to Sri BN Mama for getting permission from Sri Chandran to publish this freely with Mahaperiyava devotees….Thanks to Sri Venkatasubramaniam in sharing these articles also…

சந்த்ரமௌளி எனப்படும் திரு.சந்த்ரன் காஞ்சி முனிவருடன் 1965 முதல் 1994 வரை, முப்பது வருடங்கள் ஸ்ரீமடத்தின் ‘ஆடிடரா’க இருந்து, மஹானுடன் அருகில் இருந்து பணி செய்யும் பாக்கியம் பெற்றவர். அவர் தன்னுடைய அனுபவங்களை ஆங்கிலத்தில் ஒர் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அவருடைய ஒப்புதல் பெற்று, அதைத் தமிழாக்கம் செய்து இங்கே பெரியவா பக்தர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!

1965—ஆம் வருஷம், நாங்கள் சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு ‘அபார்ட்மென்ட்’—இல் குடியிருந்தோம். அப்பொழுது CA INTER தேர்வுக்காக நான் படித்துக்கொண்டிருந்தேன். ஸ்ரீ சந்த்ரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் அருகில் உள்ள ஒரு பக்தரின் வீட்டில் முகாம் கொண்டிருந்தார். அவர், அனைத்து இல்லத்தரசிகளையும், தினமும் சமையல் ஆரம்பிக்கும் முன்னர், மூன்று கைப்பிடி அரிசியைத் தனியே எடுத்து வைக்குமாறு பணித்திருந்தார். மாதம் ஒரு முறை, இப்படி சேர்ந்த அரிசியை, சங்கர மடத்திலிருந்து வாங்கிக் கொண்டு போய் வேதபாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பர்.

அதேபோல, தினமும் ஒரு ‘நயா பைசா’ காசை சேமித்து, அப்படிச் சேர்ந்த தொகையை ஏழை மக்களுக்குத் தானம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். என் தாயாரும், அதன்படி சேர்த்து வந்தார். ஒரு நாள், அப்படி சேர்ந்த தொகையை (ஒரு சிறு பெட்டியில் இருந்தது) எடுத்துக்கொண்டு போய் ஸ்வாமிகளிடம் கொடுக்குமாறு என்னிடம் சொன்னார். என்னுடைய ‘கசின்’ ஷண்முகத்துடன் ஒரு நாள் ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த வீட்டிற்குச் சென்றேன். நாங்கள் அங்கு சென்றபோது மாலை 5 மணி இருக்கும், ஸ்வாமிகள் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார்; அவரைச் சுற்றி சில பக்தர்கள் இருந்தனர். காசுகள் இருந்த பெட்டியை அவருக்கு முன்னால் வைத்தேன். அவர் என்னை ‘அது என்ன?’ என்று கேட்டதற்கு, ‘இந்த பெட்டியை அம்மா உங்களிடம் கொடுக்கச்சொன்னார்கள்’ என்றேன். அவர் அதிலிருந்த காசுகள் சிலவற்றை திரும்பத் திரும்ப எடுத்தார்; பிறகு ஒரு காசைத் தேர்ந்தெடுத்தார். அதை சில நிமிஷங்கள் பார்த்துகொண்டே இருந்துவிட்டு, அதை என் கையில் வைத்தார். அதுதான் அவரிடமிருந்து நான் பெற்ற முதல் பரிசு.

அதை ஒரு பெரிய பொக்கிஷமாக இன்றும் வைத்துக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை, அன்றுதான் என்னுடைய ஆன்மீக வாழ்க்கைத் தொடங்கிய நாளாயிருக்கும் என நினைக்கிறேன்.

1970—ஆம் ஆண்டு, காஞ்சி முனிவர் காஞ்சீபுரத்தில் இருந்தார். GN என்று அழைக்கப்பட்ட ஒரு பக்தர் ஏப்ரல் மாதம் தன்னுடைய பெண், மாப்பிள்ளை, பேரக்குழந்தைகளுடன் தரிசனத்திற்கு சென்றிருந்தார். மே மாதம் நடக்கவிருக்கும் அவருடைய பேத்தியின் கல்யாணத்திற்கு பெரியவாளின் ஆசீர்வாதம் வேண்டி சென்றிருந்தார். பெரியவாளுக்கு முன் கல்யாணப் பத்திரிகையை வைத்துவிட்டு ஆசிக்காக காத்து நின்றார்.

ஸ்வாமிகள் GN—ஐ எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, அவர் தன் மாப்பிள்ளை வேதாரண்யத்தில் வேலை பார்ப்பதாகவும், அங்கிருந்துதான் தரிசனத்துக்கு வருவதாகவும் கூறினார்.

“ஒரு மிகவும் சுபமான நாள்ல நீ என்னிடம் வந்திருக்கேன்னு ஒனக்குத் தெரியுமோ?”—–ஸ்வாமிகள்.

“இன்னிக்குப் பங்குனி உத்திரம்; இந்த நாள்லதான் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கல்யாணம் நடந்தது. அகஸ்திய முனிவர் அந்தக் கல்யாணத்தை வேதாரண்யம் சிவன் கோயில்லேந்துதான் பார்த்தார்.”

சிறிது இடைவெளிக்குப் பிறகு ஸ்வாமிகள் கூறினார், “ இன்னிக்குக் கார்த்தாலே நான் வேதாரண்யம் கோவில்லதான் இருந்தேன்; சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடந்த கல்யாணத்தைப் பார்த்தேன்.”

GN—உம் மற்றவர்களும் இதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தனர். தங்கள் கண்ணுக்குமுன் இருக்கும் பெரியவா, எப்படி காலையில் வேதாரண்யத்தில் இருந்திருக்க முடியும் என்று அதிசயித்தனர். பெரியவா பேச்சை மாற்றி, அவர்களுக்குப் பிரசாதம் கொடுத்தார்.

எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது, பெரியவா ஒரு மிகப்பெரும் தபஸ்வி என்பதால், எந்த நேரத்திலும் எங்கே வேண்டுமானாலும் அவர் இருக்க முடியுமென்பது.

Exit mobile version