Sage of Kanchi

‘நிபஜனகான’ – உன் பஜனையாகிற சங்கீதத்தில் ஈடுபடுகிறவர்களை இந்த உலகில் நான் எங்கே பார்ப்பேன்?

Thanks to Sri Srinivasan mama for FB sharing…

Maharajapuram_viswanathan

‘பெரியவாளுக்குக் கர்னாடக சங்கீதத்தில் மிகுந்த விருப்பம் உண்டு நல்ல சங்கீதத்தைக் கேட்டால், நேரம் போவது தெரியாமல் ரசித்துக் கேட்பார்’ என்றவர், அந்த நாட்களில் பெரியவாளை வந்து சந்தித்த பிரபல சங்கீத வித்வான்கள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

‘தன்னைச் சந்திக்க வருகிற வித்வான்களிடம் அவர்களுக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் எடுத்துச் சொல்வார் பெரியவா. சில பாடல்களுக்கு அவர் தரும் விளக்கத்தை வித்வான்களே வியந்து கேட்பார்கள்.

திருவையாற்றில் பகுள பஞ்சமி அன்றைக்குத் தியாகராஜரின் சமாதியில் எல்லா வித்வான்களும் கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடுவார்கள் அல்லவா? அதேபோன்று, காஞ்சிபுரத்திலும் தமிழ் வருடப்பிறப்பு அன்று விடியற்காலையில் ஆரம்பித்து பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடச்சொல்லிக் கேட்க வேண்டும் என்று பெரியவாளுக்கு ஆசை. அதற்குக் காரணம் இருந்தது. பெரியவா ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கோடம்பாக்கத்தில் தத்தாஜி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போதுதான் திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை உத்ஸவம் நடந்து கொண்டிருந்தது. அதை ரேடியோவிலும் ஒலிபரப்பினர். காஞ்சிபுரத்திலும் அதுபோன்று நடத்தவேண்டும் என்கிற ஆசை அப்போதுதான் பெரியவாளுக்கு உண்டாயிற்று.

செம்மங்குடி சீனிவாச அய்யர் பெரியவாளை தரிசனம் பண்ண அடிக்கடி மடத்துக்கு வருவார். அவரிடம் தன் ஆசையைச் சொன்னார் மகா பெரியவா. பிறகென்ன… செம்மங்குடிக்கு ரொம்ப சந்தோஷம். அவர் உடனே அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விசுவநாத அய்யர் போன்றோரிடம் சொல்லி, அதற்கு ஏற்பாடு செய்து, காஞ்சிபுரத்தில் பிரமாதமாக நடத்தினார். அதை ரேடியோவில் ஒலி பரப்பவும் ஏற்பாடு செய்தார்.

எல்லோரும் பஞ்சரத்ன கிருதிகள் பாடி முடித்ததும், பக்கத்தில் இருந்த மகாராஜபுரம் விசுவநாதய்யரிடம், ‘ஆரத்தியின்போது நீங்கள் பாடணும்’ என்று கேட்டுக் கொண்டார் பெரியவா. விசுவநாதய்யருக்குச் சந்தோஷம் தாளலை! அதுவும், பெரியவா முன்னால் பாடறதுங்கறது எவ்வளவு பெரிய விஷயம்! பக்திப் பரவசத்துடன், ‘நிபஜனகான’ பாட்டை அருமையா பாடினார். பெரியவா, கண்கள் மூடி பாடலைக் கேட்டு ரசித்தார்.

‘உன் பஜனையாகிற சங்கீதத்தில் ஈடுபடுகிறவர்களை இந்த உலகில் நான் எங்கே பார்ப்பேன்? லட்சுமி, சிவன், பிரம்மன், சசிதேவியின் பதியாகிய இந்திரன் முதலானவர்களால் வணங்கப் படுகிறவனே! சகுண- நிர்க்குண உபாசனைகளின் உண்மை, பொய்களையும்… சைவம், சாக்தம் முதலான ஆறு சமயங்களின் ரகசியங்களையும், அணிமா முதலான அஷ்டஸித்திகளின் பகட்டையும் நீ விளக்க… நான் மகிழ்ச்சியுடன் அறிந்து கொண்டேன். நல்ல முகம் உடையவனே… உமது பஜனை என்னும் கானத்தில் லயித்து ரசிப்பவர்களை நான் எங்கே காண்பேன்?’ என்பது அந்தப் பாடலுக்கு அர்த்தம்.

மகா பெரியவாளுக்கும் ரொம்ப சந்தோஷம்!

Exit mobile version