Mama did this amazing sketch in 1 hour!! All Periyava anugraham!!!
தனுர்வேதத்தில் அஸ்திரம், சஸ்திரம் என்று இரண்டு வகை ஆயுதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவென்றும், அஸ்திரம் மந்திரபூர்வமாக ஒரு பதார்த்தத்தை விட்டால் எதன்மேல் விடுகிறோமோ, அது நாசமடையும் என்றும் சொன்னேன். நாம் பிரதி தினமும் பண்ணவேண்டிய அஸ்திரப் பிரயோகம் ஒன்று இருக்கிறது. அஸுரர்களை நாசம் பண்ணுவதற்காக பிராமணர்கள் தினந்தோறும் ஒரு அஸ்திரப் பிரயோகம் பண்ணவேண்டும். அஸ்திரம் என்றால் ஒன்றை விட்டு எறிகிறதல்லவா ? அந்த அஸ்திரம் எது ? எதை விட்டெறிகிறது ? நம்முடைய புத்தியை ஆசிரயித்திருக்கிற அஸுரர்கள் தொலைய வேண்டும். ஞானசூரியன் பிரகாசிக்க வேண்டும். அது பிரகாசிக்காமல் பண்ணிக்கொண்டு உள்ளே இருக்கிற பிரதிபந்தங்கள் நிவர்த்தியாக வேண்டும், என்ற அந்த அஸ்திரப் பிரயோகம் பண்ண வேண்டும். ஒவ்வொரு நாளும் மூன்று வேளை பண்ணவேண்டும். எந்தக் காரியம் பண்ணினாலும் பன்ணாவிட்டாலும், மூச்சைப் பிடித்துக்கொண்டு அதைப் பண்ணவேண்டும். அதுதான் ஸந்தியாவந்தனத்தில் அர்க்யம் கொடுப்பது.
ஒரு காரியத்தை ‘சிரத்தையாக’ ஒருவன் பண்ணினால் மூச்சைப் பிடித்துக்கொண்டு பண்ணுகிறான் என்று சொல்லுகிறோம். இந்தக் காரியத்தையும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பண்ணவேண்டும். தினந்தோறும் இதைப் பன்ணி வந்தால் அந்தச் சத்ருக்கள் நாசமாய்ப் போய்விடுவார்கள். இது பண்ணுவதற்கு முதலில் மூச்சைப் பிடித்துக்கொள்ளவேண்டும். இப்பொழுது நாம் மூக்கைத்தான் பிடித்துக்கொள்கிறோம். “நாசிகாம் ஆயம்ய” என்று சொல்லுவதில்லை; “ப்ராணான் ஆயம்ய” என்றுதான் சொல்லியிருக்கிறது.
எந்தக் காரியம் பண்ணினாலும் மனது ஒருமைப்படவேண்டும். ஜலத்தைக் கொண்டு அஸ்திரப் பிரயோகம் செய்வதற்கு மனது ஒருமைப்படவேண்டும். அதற்காகத்தான் மூச்சைப் பிடிக்க வேண்டும். மூச்சைப் பிடித்தால் மனது எப்படி நிற்கும் ? மனது நிற்கிறபொழுது மூச்சு நிற்கிறதல்லவா? பெரிய ஆச்சரியம் உண்டாகிறது; பெரிய துன்பம் வருகிறது; பெரிய ஸந்தோஷம் ஏற்படுகிறது அப்பொழுது மனது லயித்துப்போய் ஏகாந்தமாக நிற்கிறது. ஹா! என்று கொஞ்ச நேரம் நின்றுபோய் விடுகிறது. அப்புறம் வேகமாக ஓடுகிறது. நாமாக அதை நிறுத்தவில்லை. அது தானாக நிற்கிறது. மனது அதிலே ஈடுபட்டு நின்றுவிடுகிறது. பின்பு பெருமூச்சு விடுகிறோம். எதற்காக ? முன்பு விடாத மூச்சையும் சேர்த்து விடுகிறோம். மனது ஒருமைப் படுகிறபோது மூச்சு நிற்கிறது. மூச்சு நின்றால் மனது ஒருமைப்படும்.
நாம் அர்க்யம் விடும்போது சித்தைகாக்ரியத்தோடு விடவேண்டும். பிராணாயாமம் பண்ணினால் சித்தைகாக்ரியம் உண்டாகும். அதை நிறையப் பண்ணுவது யோகத்திற்கு; அது கஷ்டமானது; உபதேசத்தின்படி செய்யவேண்டியது. நாம் அட்திகமாகப் பண்ணினால் பத்து தடவைதான் பண்ணுகிறோம். மூன்று பண்ணு என்று சிலவற்றிற்கு நியமம் ஏற்பட்டிருக்கிறது. சிறு வயதில் உபநயன காலம் முதற்கொண்டு கிரமமாக நாம் பிராணாயாமம் பண்ணிக்கொண்டு வந்திருந்தால் இத்தனை நாளில் யோகீஸ்வரராக இருப்போம். பண்ணுகிறதைச் சரியாகப் பண்ணவேண்டுமல்லவா ? அரை நிமிஷம் பிராணன் நிற்கப்பண்ண வேண்டும். அதிகமாக வேண்டாம் சரீரத்திற்குத் தகுந்தாற்போல் செய்யலாம். பிரானன் நின்றால் மனது நிற்கும். அது நின்றால் நாம் விடுகிற ஜலம் அஸ்திரம் ஆகும்.
ஸந்தி பண்ணி ஆரம்ப முதல் கடைசி வரையில் பரமேசுவரார்ப்பணம் பண்ணவேண்டும். அர்க்யமாகிய அஸ்திரப் பிரயோகத்தைப் பண்ணவேண்டும். பின்பு காயத்ரி பண்ணவேண்டும். பிராணாயாமத்தைக் கூடிய வரையில் பண்ணவேண்டும். கொஞ்சம் நிறுத்துகிறது பின்பு விடுகிறது என்ற அளவில் இருந்தால் போதும். அதிகம் வேண்டாம். ஸங்கல்பம், மார்ஜனம், பிராசனம், அர்க்யப் பிரதானம், ஜபம, ஸ்தோத்ரம், அபிவாதனம் இவ்வளவும் பரமேசுவரனுடைய அனுக்ரஹம் பெறுவதற்காகப் பண்ணுகிறேனென்று சொல்லிச் செய்யவேண்டும். இவ்வளவுக்கும் பிராணாயாமம் முக்கிய அங்கம். அதிகமாகப் பண்ணினால்தான் உபத்திரவம் உண்டாகும். அதற்கு குரு வேண்டும். தினந்தோறும் பண்ணவேண்டியதால் ரோகிஷ்டன் கூட பண்ணவேண்டியிருப்பதால் உபத்திரவம் இராது.
மனோவாக்காயங்களால் பாபம் பண்ணியிருக்கிறோம். அந்த மூண்டினாலும் செய்யும் கர்மாக்களால் அந்தப் பாபத்தைப் போக்கிக் கொள்ளவேண்டுமென்று முன்பு சொல்லியிருக்கிறேன் ஸந்தியாவந்தனத்தில் வாக்கினால் மந்திரம் சொல்லுகிறோம்; காயத்ரி ஜபத்தை மனதினால் தியானித்துப் பண்ணுகிறோம்; மார்ஜனம் முதலியவைகளால் காயசுத்தி உண்டாகிறது. இவைகளைத் தவிர கர்மயோக பக்தியோக ஞானயோக ரூபமாகவும் ஸந்தியவந்தனம் இருக்கிறது. ஸந்தியாவந்தனம் பண்ண அவரவர்கள் தங்கள் தங்களுக்கென்று ஒவ்வொரு பாத்திரம் வைத்துக் கொள்ளவேண்டும் அதிலே ஸந்தியவந்தனம் பண்ணவேண்டும். பிராணாயாமம் அவசியம் பண்ணவேண்டும். சந்தியாவந்தனத்தை அவசரமாகப் பண்ணக்கூடாது.
சரியான காலத்தில் உசிதமாக ஸந்த்யானுஷ்டானம் பண்ணினதால்தான் பலர் ரிஷிகள் ஆனார்கள். அபிவாதனத்தில் எந்த மகரிஷியினுடைய சந்ததியில் பிறந்திருக்கிறோமோ அந்த மகரிஷி கோத்திரத்தைச் சொல்லி அன்று முதல் காயத்ரி ஜபிக்கப்பட்டு வருகிறது. அந்த கோத்திரத்தில் பிறந்ததற்காவது கர்மானுஷ்டானங்களைச் செய்ய வேண்டியது நமது கடமை. அந்த முதல் ரிஷிக்கு அப்புறம் எவ்வளவோ பேர் ரிஷிகளாக இருந்திருக்கிறார்கள். த்ரயார்ஷேயம், பஞ்சார்ஷேயம், ஸப்தார்ஷேயம், ஏகார்ஷேயம் என்று சொல்லுகிறார்கள். அந்தந்த கோத்திரத்தில் அவ்வளவு ரிஷிகள் இருந்திருக்கிறார்கள் என்றும் அதனால் தெரியவருகிறது. ஸ்ரீவத்ச கோத்திரம் பஞ்சார்ஷேயம்.
தொடர்ச்சியாக வந்த தாரையை நாம் அறுத்துவிடக் கூடாது. பிராணாயாமத்தோடு சித்தைகக்ரியத்தோடு மந்திர லோபமில்லாமல் பரமேசுவரார்ப்பணம் பன்ணி எல்லாவற்றையும் பண்ண வேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
