Nellikuppam Vaishanava family experience continues….I am trying to find out this family background and see if there is a possibility of doing any interview of them..
அம்மா எப்போதும் போல் எங்கள் அகத்துக்கு வந்து ஆத்ம விசாரம் செய்து கொண்டிருக்கையில் என்னிடம் ”ஸ்ரீ நிவாசா உன் முன்னோர் ஆராதித்து வந்த ஸாளக்ராமம் வைத்துருக்கிறாயே, அதை தினமும் ஆராதனம் செய்து பூஜை செய்யன். என் பையன் ஸ்ரீ பெரியவாளிடம் கொடுத்து அவர் அனுக்ரஹம் பெற்ற பின் தான் எங்களகத்து சாலக்ரமங்களைப் பூஜை செய்ய ஆரம்பித்தான். அன்று முதல் தவறாமல் பஞ்சாயதன பூஜை தவறாமல் செய்து வருகிறான். அதுபோல் நீயும் உன் சாளக்ராமங்களைக் கொண்டு போய் கொடுத்து பெரியவா ஆசி வாங்கியபின் பூஜை செய்ய ஆரம்பியேன்” என்றாள்.
திருவாராதனம் கொஞ்ச நாள் நானும் செய்து வந்தேன்; பின் விசேஷ நாட்களில் மட்டும் செய்யலானேன். அம்மா இது போன்று கூறியதும் நாங்கள் காளஹஸ்தி செல்லும்போது சாளக்ராமங்களையும் எடுத்துச் சென்றோம். சாலக்ராமப் பெட்டியை பெரியவா முன் வைத்து, அவர் ஆக்ஞைக்காகக் காத்திருந்தோம்.
அவர் பெட்டியைத் திறந்து அதிலிருந்த சாளக்ராமங்களை எடுத்துப் பார்த்து ”இது பூரி ஜகன் நாதர், சிலாரூப சாளக்ராமம் , இது க்ருஷ்ணன், இது ஸுதர்சனம்,” என்று சொல்லி பெட்டியை தன்னிடமே வைத்துக் கொண்டு,”எங்கே ராமமூர்த்தி?” என்று அணுக்கத்தொண்டர் திருவண்ணாமலை ராமு என்பவரை அழைத்தார்.
அவர் வந்தவுடன் ”இதை என் பூஜையில் வை” என்று அவரிடம் கொடுத்துவிட்டார்.
பெரியவாள் பூரி ஜகன்னாதர் கோவிலில் நித்ய நேவேத்யம் பற்றியும், ரதோத்ஸவம் பற்றியும் பேச ஆரம்பித்தார். ‘
‘பூரி ஜகன்னாதனுக்கு நித்யம் அன்னம் நிறைய நேவேத்யம் செய்து அதையே யாத்ரீகர்களுக்கு வினியோகம் செய்வார்கள். அந்தப் ப்ரஸாதம் மிக ஸ்ரேஷ்டமானது. ஒருக்கால் யாருக்காவது ப்ரஸாதம் கிடைக்கவில்லை என்றால் தெருவில் எறிந்த இலையில் மீதமுள்ள ப்ரஸாதத்தை சாப்பிட்ட நாயின் வாயில் ஒட்டிக் கொண்டிருக்கும் பருக்கைகளை பிடுங்கியாவது சாப்பிடணும். ஜகன்னாதனுடைய ப்ரஸாதம் அவ்வளவு உசத்தி! ஜகன்னாதன், சுபத்ரை, பலபத்ரன் மூவருக்கும் தனித் தனி ரதத்தில் ரதோத்சவம். அடுத்த வருஷம் ரதங்களை உடைத்து அந்த மரங்களை மடப்பள்ளிக்கு விறகாக உபயோகிப்பார்கள். மறுபடி அடுத்த வருஷம் புது ரதங்கள் தயாரிப்பார்கள். ஜகன்னாதனுக்கு அவ்வளவு ப்ரஸாதம் தயாரித்து ஸர்வத்ராளுக்கும் அதை வினியோகிக்கணும்; அவ்வளவு விசேஷம்” என்று கோவில் பற்றி விசேஷமாகப் பேசினார்கள்.
ஊருக்குப் புறப்படும் தினத்தன்று என்னிடம் ”தந்த வருஷம் என்றால் தெரியுமா” என்று கேட்டார்.
நான் புரியாமல் விழித்தேன்.
“உனக்குத் தெரியாதா? ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய ஸ்வாமிகள் ஹாஸ்யமாக அப்படிச் சொல்வது வழக்கம் ”என்றார்.
“காஞ்சிபுரத்தில் யாராவது கோவிலுக்குப் போய்ண்டிருக்கும்போது , கோவிலிலிருந்து வெளியே அவ்ரும் வைஷ்ணவரைப் பார்த்து,, கோவில்லே ப்ரபந்தம் தொடங்கியாச்சா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த வைஷ்ணவர் ”தந்த வருஷம் நடந்துண்டு இருக்கு என்பார் ” என்று சொல்லி என்னிடம் ”இப்பவாவது உனக்குப் புரியறதா” என்று பெரியவா என்னைக் கேட்டார்.
நான் இல்லை என்று சொன்னேன்.
”ஸம்ஸ்க்ருதத்தில் தந்தம் என்றால் பல்; வருஷம் என்றால் ஆண்டுன்னு அர்த்தம்; திருப்பல்லாண்டு பாசுரம் ஆரம்பிச்சிருக்கான்னு அர்த்தம்” என்று விளக்கினார்.
“அவர் மஹா வித்வான் இப்படி ஹாஸ்யமாகவும், ச்லேடையாகவும் பேசி அர்த்தம் சொல்வார்” என்று அண்ணங்கராசாரியரை ச்லாக்யமாகப் பேசி எனக்கு ஓர் உண்மையை வெளிப்படுத்தினார்.
ஒரு வைஷ்ணவர் மற்றொரு வைஷ்ணவரிடம் கோபமாகப் பேசும்போது ”தந்தவர்ஷம் பண்ணிடுவேன்” என்று சொல்வதையும் குறிப்பிட்டார்(பல்லை உடைச்சுடுவேன்) நான் அம்மாவிடம் ஊருக்குக் கிளம்பும்போது சாளக்ராமத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு விடையை நாம் நாளை பார்ப்போம். ஜய ஜய சங்கரா…..
