Site icon Sage of Kanchi

More research on dress culture in among women

Since I had received emails that indicated me to finish this series soon, I am starting to publish longer posts!! I hope people read these….Very very detailed research and appropriate responses given by Periyava..

 

பெண்மைக்கு அதி முக்யமாயிருக்கிற லஜ்ஜா ரக்ஷணத்துக்குப் புடைவையைப் போல் ஒன்று இல்லை. இது பாரத ஸ்த்ரீ தர்மம் கண்டுபிடித்த ஒரு பெரிய ஸொத்து – மான ஸம்ரக்ஷண ஸொத்து.

அந்த ‘பாயிண்டு’க்காக இல்லாவிட்டால்கூட மேற்கத்திக் காரர்களும் ‘இண்டியன் ஸாரி’யைப் புகழ்கிறார்கள். கலைக்கண் என்கிறார்களே, அந்தப் பார்வையில் புடைவைக்கு ஒரு லாலித்யம்  (லலிதமான தன்மை) இருப்பதாக அவர்கள் கொண்டாடிக் கொண்டு அதை ரொம்பவும் ‘graceful’ என்கிறார்கள். இப்படி அழகாக இருப்பதோடு கொளரவமாகவும் இருக்கிறது – dignified- என்கிறார்கள்.

அன்னிபெஸன்ட் வெள்ளைக்கார ஜாதியைச் சேர்ந்த போதிலும் புடைவைதான் கட்டிக் கொண்டிருந்தார்? அது இந்தியர்களிடம் ‘பாபுலாரிடி’ வாங்குவதற்காகச் செய்ததில்லை என்றும், புடைவை கட்டிக் கொள்வதில் ஸூக்ஷமமாக எத்தனையோ கெளரவமும் மற்ற பண்புகளும் இருக்கின்றன என்பதாலேயே தான் அப்படி உடுத்துவதாகவும் அந்த அம்மாள் ஒரு புடைவை மாஹாத்மியமே சொல்வாராம்!

இக்கால ஸ்த்ரீகள், ஆஃபீஸ் கார்யம் முதலானவை பண்ணுவதற்கு புடைவையைவிடப் பைஜாமா-ஜிப்பா தான் ஸெளகர்யமாக இருக்கிறது. அடுப்பங்கரைக் கார்யத்துக்குங்கூட இதுவே ஸெளகர்யம் என்று வாதிக்கிறார்களாம். ஸெளகர்யத்துக்காக மானம் -கெளரவங்களை விட்டுக் கொடுக்க முடியுமா? இவர்களை ஆஃபீஸ் பண்ணுவது,  இன்னும் அநேக ஸாஹஸ கார்யம் பண்ணுவது ஆகியவற்றை நான் ஒத்துக் கொள்ளவேயில்லை என்பது தெரிந்ததுதானென்றாலும், ஒரு பேச்சுக்கு அதை ஒத்துக்கொண்ட மாதிரியே வைத்துக் கொண்டு கேட்கிறேன்: Challenging – ஆக இருக்கிறவற்றை face பண்ணுவதில்தானே தங்கள் நவயுக spirit இருப்பதாக இவர்கள் பெருமை பேசுகிறார்கள்? அப்படி ஒரு challenge சொல்கிறேன். இவர்கள் மாதிரி படிக்காமல் கூலி வேலைக்குச் சிற்றாளாகப் போகிற கொத்து வேலைப் பெண்களையே இவர்கள் ஒரு ‘சாலஞ்’ஜாக எடுத்துக் கொள்ளட்டும். அந்த பெண்கள் புடைவை கட்டிக் கொண்டே, அதைக் கெளரவம் போகத அளவுக்குத் தூக்கிச் சொருகிக்கொண்டே பாய்ந்து பாய்ந்து பண்ணுகிறதை விடவா இவர்கள் ஆஃபீஸிலோ, ஃபாக்டரியிலோ, வேறே இடத்திலோ புரட்டி விடுகிறார்கள்? அந்தக் கொத்து வேலைக்காரிக்கு உள்ள ஸாமர்த்யம் இவர்களுக்கு ஏன் இல்லாமல் போக வேண்டும்? அதே மாதிரி, இந்த  சாலஞ்ஜ்க்கார ஸ்த்ரீகளுக்கு அடுப்படிக் கார்யம் புடைவை கட்டிக் கொண்டு ஒழுங்காகச் செய்ய வரவில்லை என்றால், அப்போது அவர்கள் அசடிப் பட்டம் கட்டுகிற முன் தலைமுறை அம்மா-பாட்டிகளிடம் தோற்றுப் போய்விட்டார்கள் என்றுதான் அர்த்தம்!

விதண்டாவாதமாக ஒன்று கேள்விப்பட்டேன். சொல்லவே விரஸமாக இருக்கிறது; சொல்லாமலும் இருக்க முடியவில்லை. ‘புடைவை கட்டிக்கொள்கிறவர்கள் ஸரியாக மேலாக்குப் போட்டுக் கொள்ளாவிட்டால் அதுதான் ரொம்பவும் அசிங்கமாக இருக்கிறது. அதைவிட எங்கள் ஜிப்பாவே சரீரத்தை நன்றாக மூடி மறைக்கிறது’ என்கிறார்களாம். இவர்களுக்கு ஒரே எதிர்க் கேள்வி, புடைவை கட்டிக் கொள்கிறவர்கள் ஏன் ஸரியாக மேலாக்குப் போட்டுக் கொள்ளாமலிருக்க வேண்டும் என்பதுதான். தப்பைத் திருத்த வழி, புடைவையை ஸரியாக, ஒழுங்காக, யுக்தமாகப் போர்த்தி உடுத்திக் கொள்வதுதானே தவிர, அதற்குப்  பதில் வேறே தினுஸு ட்ரெஸ் மாற்றிக் கொள்வதில்லை.

புடைவைக்குள்ளே போட்டுக் கொள்கிற சட்டை கழுத்து வரையிலும், இடுப்பு வரையிலும் நன்றாக மூடுகிற வகையில் இருக்கவேண்டும். ஜிப்பாவில் கழுத்தை, இடுப்பை மூடியிருக்கிறது, அதே மாதிரி கையும் நன்றாக மூடியிருக்கிறது என்ற காரணம் காட்டி பழைய முறைப்படி உடுத்திக் கொள்வதை விரட்டி ஒட்டும்படிப் பண்ணக்கூடாது.

கலாசாரத்தின் தலையில் இடி

இன்றைக்கு இப்படி மூடி ஜிப்பா தைத்துக் கொள்கிறவர்களே நாளைக்கு அதில் என்ன புது மோஸ்தர் கொண்டு வருவார்களோ? துருக்க ஸ்த்ரீகளைப் பார்த்து ஸர்தாரிணிகள் போட்டுக் கொண்ட பைஜாமா-ஜிப்பா தான் இப்போது இந்த பாரத கலாசாரத்தின் பரம கெளரவ ஸ்ருஷ்டியான புடைவையை விரட்டியோட்ட வந்திருக்கிறது. இது இதோடு நிற்குமோ? ஃபாஷன் என்றால் நூதன, நூதனமாக மாறிக் கொண்டேதானே போகும்? அப்படி, இங்கிலீஷ்கார ட்ரெஸ், நீச்சல் ட்ரெஸ் வரையில் என்னவெல்லாம் வந்துவிடுமோ, எப்படியெல்லாம் மானம் மரியாதையைக் காற்றிலே பறக்க விடுவார்களோ என்று கவலையாக, பயமாக இருக்கிறது.

நான் தர்மாபிவிருத்தி பண்ணுகிற லக்ஷணம் – முன்னேயெல்லாம் பெண்கள் கச்சம் போட்டுப் புடைவை கட்டிக் கொள்ளவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போது ‘அபிவிருத்தி’ யடைந்து, பெண்கள் புடைவை கட்டிக் கொள்ள வேண்டும் என்று சொல்லும்படி ஆகியிருக்கிறது! இன்னமும் நான் இருந்துகொண்டு இதைவிடவும் துராச்சாரங்களைப் பார்க்க  வேண்டி வ ந்து என்னவெல்லாம் சொல்லும்படி இருக்குமோ என்று இருக்கிறது.

இப்போது வயஸு வந்த பெண்களும் கல்யாணமாகிற வரையில் புடைவை கட்டாமலிருக்கிறார்களென்றால் இதோடு முடிந்து விடுமா ? தீராப் பசி பிடித்த ஒரு தொத்து நோய் மாதிரியல்லவா எப்போதுமே அஸம்பாவிதப் புது நாகரிகப் போக்குகள் விஸ்தாரமாகிக் கொண்டே போகிற பழக்கம், அப்படி, போகப் போக, மத்யம வயஸு க்ருஹிணிகள், அதற்கப்புறம், வயஸான பாட்டிமார் உள்பட எல்லோரும் பைஜாமா ஜிப்பாவுக்கு மாறிவிடுவார்களோ ? அப்படியானால் இந்த தேசக் கலாசாரத்தின் தலையிலேயே இடி விழுந்த மாதிரியல்லவா ஆகிவிடும்? – என்று வ்யாகுலமாக இருக்கிறது.

எல்லாச் சாராரையும் பிடிக்கும் தொற்றுநோய்

சாஸ்த்ர-ஸம்ப்ரதாயங்களுக்காக இல்லாவிட்டாலும், வேறே கொள்கை காரணமாக இரண்டு கோஷ்டிகளைக் சேர்ந்த பெண்களாவது இந்தப் புது நாகரிக ட்ரெஸ்ஸுக்கு மாறாமலிருப்பார்கள் என்று நான் நம்பிக்கை வைத்திருந்தேன். தீவிரமாக ஹிந்து உணர்ச்சி படைத்தவர்களாகவும், அந்நியர்களின் பாணி நமக்கு வேண்டாமென்று சொல்பவர்களாகவும் ஒரு கோஷ்டி தேசத்தில் இருக்கிறதல்லவா? நம்முடைய தக்ஷிண தேசத்தை விட, வடக்கே அப்படிச் சொல்கிற கோஷ்டி நல்ல செல்வாக்கு – பாபுலாரிடிகளுடனேயே இருக்கிறது. அதைச் சேர்ந்த ஸ்த்ரீகள் அந்நிய பாணியிலான பைஜாமா ட்ரெஸ்ஸுக்கு மாறாமலிருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் விசாரித்துப் பார்த்ததில் அப்படியெல்லாமில்லை; அந்தப் பெண்களையும் புது ஃபாஷன் வெள்ளம் அடித்துக்கொண்டுதான் போகிறது என்று தெரிந்தது. இன்னொரு கோஷ்டி நம் ஊரைச் சேர்ந்தது. ‘வடவர் ஆதிக்கம் கூடாது; தமிழர் பண்பாட்டையே காப்பாற்ற வேண்டும்’ என்கிற கோஷ்டி. அதைச் சேர்ந்த பெண்களாவது தமிழர் பண்பாட்டுக்கு பைஜாமா ஒத்து வராதது என்று நிராகரிக்க மாட்டார்களா என்று நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கையும் பொய்த்துவிட்டது. இப்போது ஊர் முழுதையும் மிச்சம் மீதியில்லாமல் பீடிக்கிற ஒரு தொத்து வியாதி மாதிரி புது ட்ரெஸ் மோஸ்தரும் யெளவன வயஸிலிருக்கிற இந்த தேசத்துப் பெண்கள் எல்லோரையும் பலி வாங்குகிறது என்று தெரிகிறது. கலாசார பலி!

எதிர்த்துக் கேட்டு எடுத்துச் சொல்பவர் எவருமில்லை

நான் பிறந் நாளாகச் சீர்திருத்தங்கள் எனப்படுகிற சாஸ்த்ர விரோத கார்யங்களும், நவயுக நாகரிகங்களும் ஒன்றையடுத்து ஒன்றாக அலை அடித்துக் கொண்டேதான் வந்திருக்கின்றன. அந்த மாறுதல் வழியிலேயே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் போனாலும், ஒரு பத்துப் பேராவது எங்கள் மாதிரி ஆசாரக் குடுக்கைகளுக்கு உடன்பாடாக இருந்தார்கள். அவர்கள் மூலம் கொஞ்சத்தில் கொஞ்சம் எதிரலையடித்து, எதிர் நீச்சல் போட முடிந்தது. 40-45 வருஷம் முந்தி ஸ்த்ரீ ஸ்வதந்தரம் பற்றித் தப்பான சில கொள்கைகள் கொஞ்சம் பலமாகவே தலை தூக்கினபோது நான் எங்கள் வழிகளை ஆதரிக்கக்கூடிய பெண்டுகளைக் கொண்டே, சாஸ்த்ர வழிகளில் பெண்களைச் செலுத்துவதற்கென்று மாதர் சங்கங்கள் அமைக்கச் சொன்னேன். பல ஸ்த்ரீகள் முன்வந்து அப்படி அமைக்கவும் செய்தார்கள். இப்போதோ அப்படிப்பட்ட சூழ்நிலையையே காணோம்!

நவீனப் போக்கை எதிர்த்துப் பேசி, நல்லதை எடுத்துச் சொல்ல இப்போது யாருமே முன்வரமாட்டேன் என்கிறார்கள்.

ஸமூஹத்துறையில் கெளரவம் வாய்ந்தவர்களாகவும், ஜனங்களிடம் செல்வாக்குள்ளவர்களாகவும் இன்று இருக்கப்பட்ட ஸ்த்ரீகளில் பழைய வழிகளை விடாதவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் என்னிடம் வருபவர்களிடம், முன்னே நடந்ததைச் சொல்லி, அதே மாதிரி – அதைவிடவும் அவஸர உணர்ச்சியோடு – இப்போது சாஸ்த்ரீய தர்ம ரக்ஷணத்துக்காகப் பெண்களுக்கென்று ஸங்கங்கள் அமைத்து, அறிக்கைகள் விடுவது பற்றிச் சொல்லிப் பார்த்தேன். ‘நான் சொல்வதை விடப் பெண்களாகப் பிறந்த நீங்களே உங்கள் மாதிரி ஸஹ ப்ரஜைகளுக்கும் சொல்வதுதான் கெளரவும்’ என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால் யாரும் ஸ்வாரஸ்யமாகக்  கேட்டுகொள்ளவில்லை. கேட்டுக் கொண்டதாகத் தோன்றியவர்களும் அப்புறம் கார்ய ரூபத்தில் ஒன்றும் பண்ணவில்லை. ‘அவர்கள் வீட்டுப் பெண்களே புரட்சி இனமாக இருக்கலாம். அல்லது அவர்களுக்கே வெளியிலே கொஞ்சம் கர்நாடகமாக இருந்தாலும் உள்ளுக்குள்ளே புது நாடகத்தில் பிடிப்பு இருக்கலாம். அல்லது கலி ப்ரவாஹம், தங்களால் அணை போட்டு நிறுத்தமுடியாது என்று அவர்கள் விட்டிருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டேன்.

இப்படி கேட்பார் – மேய்ப்பார் யாருமே இல்லாததுதான் பெரிய குறை. கேட்பார் இல்லாததோடு நிற்கவில்லை; தூபம் போடுகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்!

‘கலாசாரம், கலாசாரம், பண்பாடு, பண்பாடு, என்று முழக்கிக்கொண்டு இத்தனை பத்ரிகைகள் இருக்கின்றனவே, ஸ்தாபனங்கள் இருக்கின்றனவே, எதுவாவது, நம்முடைய பெரிய  காலசாரத்தின் ஒரு வேராக இருக்கிற ஆடை விஷயத்தில் இப்படியொரு அலங்கோல மாறுதல் வந்திருப்பதை ஆட்சேபித்துக் குரல் கொடுத்ததா? இல்லவேயில்லை! அதை நினைத்தால்தான் எதிர்காலத்தில் நமது பண்பாட்டுக்கேற்ற நாகரிக வாழ்க்கையைப் பற்றிப் பெரிய ‘கொஸ்சன் மார்க்’ எழும்புகிறது!

நாம் ஒருத்தராவது வாய் திறந்து கொட்டினால்தான் உண்டு என்பதால் கொட்டித் தீர்க்கிறேன். இதைக் கேட்பவர்கல் மற்றவர்களுக்குச் சொல்வார்களோ, மாட்டார்களோ, என்னையாவது ‘டிஸ்கரேஜ்’ பண்ணாவிட்டால் ஸரி என்று.. இன்றைக்கு என்னமோ தோன்றிற்று… வாயை விடுகிறேன். என்னை ‘டிஸ்கரேஜ்’ பண்ணுவதைப் பற்றி ஏன் சொன்னேனென்றால் அப்படியும் இரண்டொருத்தர் மறைமுகமாகப் பண்ணியிருப்பதால்தான்.

ஜனங்கள் எல்லாரிடமும் நல்ல பேர் வாங்கும் Clever சாமியாராக நான் இருக்கிறேனல்லவா? அதனால் புதுமைக் கருத்து, புரட்சிக் கருத்து உடையவர்களும் என்னிடம் வருகிறார்கள். நவ நாகரிக ஸ்த்ரீமாரும் வருகிறார்கள். அப்படியிருக்கும்போது நான் ஆக்ஷேபக் குரல் எழுப்பாமல் அவர்களிடமெல்லாம் நல்ல பேரோடேயே போய்ச் சேரவேண்டும்; ‘ஹிஸ் ஹோலினெஸ் என்று நாமும் நம்மைக் குறைத்துக்கொண்டு நமஸ்காரம் பண்ணினால் அந்த ரெஸ்பெக்டை அந்தக் கிழம் காப்பாற்றிக் கொண்டு சும்மாயிருக்க வேண்டியதுதானே? அதை விட்டு நாம் நம் இஷ்டப்படி  ட்ரெஸ் போட்டுக் கொள்வது மாதிரியான ஸொந்த விஷயங்களில் கூட ஏன் ‘அட்வைஸ்’  பண்ண வேண்டும்?’ என்று அவர்கள் கேட்பதற்கு நான் இடம் கொடுக்க வேண்டாமே – என்ற நல்லெண்ணத்திலேயே அந்த இரண்டொருத்தர் என்னை ‘டிஸ்கரேஜ்’ பண்ணினது – மறைமுகமாகத்தான். துணிச்சலாகப் புரட்சி என்று இறங்கியவர்களிடம் இந்த பலஹீனக் கிழவன் வாயை விட்டுவிட்டு வீண் வம்பில் மாட்டிக் கொண்டு விடப் போகிறேனே என்ற கவலை அவர்களுக்கு.

என் விஷயம் இருக்கட்டும். வஸ்த்ர விஷயத்துக்கு வருகிறேன். ஆடை பாதி, ஆள் பாதி என்றே பழமொழி இருப்பதால் அது ஜன ஸமூஹத்துக்கு இன்றியமையாத ஒரு விஷயமாகும். அதைப் பற்றிதாக என் மனஸிலே தோன்றிய இன்னொன்றையும் சொல்லாமல் விட வேண்டாம் என்பதால் சொல்கிறேன்.

நாங்கள் பழைய வழிமுறைகளை விடவேகூடாது என்றுதானே சொல்கிறோம் ? இதையே ஸ்த்ரீகளின் வஸ்த்ரம் பற்றின விஷயத்தில் எங்களுக்கு பாதகமாக எடுத்துக்காட்டி சில ‘ப்ருஹஸ்பதி’கள் வாதம் செய்கிறார்கள். அவர்கள் வாதம் என்னவென்றால், ரொம்பவும் பழைய வழிமுறைப்படி ஸ்த்ரீகளுக்கு உத்தரீயம் என்கிற மேலாடையே கிடையாதாம்! பாதத்திலிருந்து இடுப்போடு அவர்களுடைய வஸ்த்ர தாரணம் முடிந்து விட்டது என்கிறார்கள். பழங்காலத்துச் சில்ப-சித்ரங்களைத் தங்கள் கட்சிக்கு ஆதரவாகக் காட்டுகிறார்கள். ஸ்த்ரீகள் தங்கள் சரீரத்தில் களப சந்தன குங்குமாதிகள் பூசிக் கொண்டதாகப் பழங்காலப் புஸ்தகங்களில் வருவதையும் ‘எவிடென்’ஸாகக் கொண்டு வருகிறார்க்ள்.

இது சுத்தப் பேத்தல்.

அறிவாளிகளின் அபிப்பிராயப்படி மொஹஞ்ஜதாரோ சிற்பங்கள்தான் ரொம்ப ரொம்பப் புராதனமானவை. அதிலே தாடிக்கார சில்பம் ஒன்று உண்டு. அதில் அந்த ஆண்பிள்ளையே பூ, பூவாகப் போட்ட ஒரு வஸ்திரத்தை நன்றாக மேலாக்கு மாதிரிப் போட்டுக் கொண்டிருப்பதாக இருக்கும். இப்படி இங்கே சில்பம் என்றால், மொஹஞ்ஜதாரோ காலத்திலேயே ஹரப்பா என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு ஆண் பிள்ளையின் சிலை நிர்வஸ்திரமாகப் பிறந்த மேனிக்கு இருக்கிறது. இப்படி இரண்டு இருப்பதைப் பார்த்தால் முறையாகச் சிந்திக்கிற எவருக்கும் என்ன தெரியும்? அந்தக் காலத்தில் வஸ்திரமே உடுத்தாமலிருந்தார்கள் என்றா தோன்றும்?  ‘நிச்சயமாக வஸ்திரம் உடுத்திக் கொள்ளத்தான் செய்தார்கள்; புருஷர்கள் கூட கீழ்ப் பாகத்துக்கு மட்டுமில்லாமல், மேல் பாதிக்கு உத்தரீயமும் போட்டுக் கொண்டார்கள். அதைத்தான் மொஹஞ்ஜதாரோ சில்பம் ‘ப்ரூவ்’ பண்ணுகிறது. அது நடைமுறை – Realism என்பதன்படி  சில்பி யதார்த்தத்தைக் காட்டிப் பண்ணியது. ஆனாலும் சில்பிகள், கவிகள் முதலான கலைத்துறைக்காரர்கள் ‘ரியலி’ஸத்தோடு மட்டும் நின்று விடுவதில்லை. அவர்களுடைய மனோதர்மத்துக்குப் பூர்த்தியாக அவர்கள் ‘ரியலி’ஸத்துக்கு மாறான ஒரு ‘ட்ரெடிஷ’நையும் – கலை மரபு என்பதையும் – பின்பற்றுவார்கள். அந்த மரபுப்படிதான் அந்த இன்னொரு ஹரப்பா சில்பி நிர்வஸ்திர சில்பத்தில் பண்ணியிருக்கிறான்’ என்றிப்படித்தான் தெளிவாக முறையாகச் சிந்தனை பண்ணிப் பார்க்கிற எவருக்கும் தெரியும்.

புருஷனுக்கே உத்தரீயம் இருந்தது என்றால் ஸ்த்ரீயைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! ஆனால் சில்பிகளும் சைத்ரிகர்களும் இங்கே தங்களுடைய  ட்ரெடிஷன் தருகிற ஸ்வதந்திரத்தைச் சற்று அதிகமாகவே காட்டித்தான் அவர்களை உத்தரீயமில்லாமலும் நிறையக் காட்டியிருக்கிறார்கள். கலா லோகம் என்பதில் ச்ருங்கார ரஸமே ப்ரதானமாயிருப்பதும் இம்மாதிரி நிறைய இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.

‘நிறைய’த்தானேயொழிய ‘முழுக்கவும்’ இல்லை. புராதனமான கந்தார சில்பங்களிலே ஸ்த்ரீகளுக்கு நன்றாக மேலாடை போட்டிருப்பதோடு, அந்தப் புடைவைக்குள் அவர்கள் சட்டையும் போட்டுக் கொண்டிருப்பதாக இருக்கும். சட்டையில் கை ஏறக்குறைய மணிக்கட்டு வரை நீண்டிருக்கும்.

யதார்த்தம் என்கிற நடைமுறை வேறே, ட்ரெடிஷன் – கலா ஸம்ப்ரதாயம்  – மரபு என்பது வேறே; பின்னதற்கே ஜாஸ்தி இடம் கொடுத்துத்தான் கலா ஸ்ருஷ்டிகள் (கலைப் படைப்புகள்) இருக்கும். ஆனாலும் அதற்கு மாறாக அது எங்கே காட்டுகிறதோ, அதற்குத்தான் நடைமுறை என்பதன் ‘வெய்ட்’ உண்டு.

இந்த விஷயமாக நிரம்ப ரிஸர்ச் செய்த ஒருத்தர் சொன்னார்:

“அநேக ஸ்த்ரீ சில்பங்களில் மேல் பார்வைக்கு மேலாடை இல்லாத மாதிரித்தான் தெரியும். ஆனால் கூர்ந்து கவனித்தால் எங்கேயாவது ஒரு இடத்தில் உத்தரீய மடிப்பு அல்லது பார்டர் மாதிரி ஏதாவதொன்று தெரியும்” என்றார். “இதற்குக் ‘கான்வெர்’ஸாக நன்றாக உத்தரீய தாரணம் செய்திருக்கிற சில்பங்களில்கூட, அந்த உத்தரீயத்துக்குள்ளேயே இயற்கையாக அமைந்த சரீர அமைப்பையும் காட்டியிருக்கும்” என்றும் சொன்னார். “சரித்ரத்தில் ரொம்பவும் பின்னாடி வருகிற நாயக் ராஜாக்களின் ராணிமார்கள் நிச்சயமாக நன்றாக உடம்பை மறைத்து மேலாக்குப் போட்டுக் கொண்டிருந்தவர்கள்தான். அவர்களுடைய சிலைகளிலும் அப்படியே பண்ணியிருந்தாலும், உள்ளே சரீர அமைப்பையும் காட்டித்தான் இருக்கிறது. அதனால் சில்பத்தில் இருப்பதை வைத்து  ‘ஸ்த்ரீகளுக்கு உத்தரீய தாரணம் இல்லை’ என்று முடிவு கட்டுவது கொஞ்சங்கூட ஸரியில்லை” என்று அவர் சொன்னார்.

இலக்கண நடை தப்பாமல் எழுதுகிற கதைகளில் பார்த்தால் கதாபாத்ரங்கள் பேசுவதே பேச்சு மொழியில் இல்லாமல் ரொம்பவும் இலக்கணமாகத்தான் இருக்கும். ப்ரத்யஷத்தில் யாராவது அப்படிப் பேசினால் நமக்குச் சிரிப்புத்தான் வரும். ஆனாலும் இலக்கியம் என்பது அப்படியே ப்ரத்யக்ஷத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்பதால் அதை ஒத்துக் கொள்கிறோம். அதற்காக அதுவேதான் பேச்சு மொழி, reality என்பார்களா? சில்ப ஸ்த்ரீகளை ப்ரத்யக்ஷத்தில் வாழ்ந்த ஸ்த்ரீகளுடன் உழப்பிக் கொள்வது இந்த மாதிரிதான். இதைப் புரிந்துகொண்டால் நான் முன்னே சொன்ன அந்த அபத்த வாதம் எழும்பாது.

புஸ்தகங்களில் ஸ்த்ரீகள் சரீரத்தில் சந்தன குங்குமாதிகள் பூசிக் கொண்டிருந்ததாக இருப்பதும் இதேமாதிரி காவ்ய ‘ட்ரெடிஷன்’ – இலக்கிய மரபு – என்பதன்படிதானா என்றால், அப்படி முழுக்கவும் தள்ள முடியவில்லை. ஸ்த்ரீகள் அப்படி இருந்ததற்குப் புஸ்தங்களில் நிறையவே ‘ரெஃபரென்ஸ்’ வருகிறது. ஆனால் முக்யமான விஷயம், குல ஸ்த்ரீகளானால் அவர்கள் அப்படி இருந்தது சயனக்ருஹத்தில் மட்டும்தான். பாதிவ்ரத்யம் (கற்பு) போதாதவர்களும் விலை மகளிர் எனப்படுகிறவர்களில் சில பேரும் பொது ஸ்தலத்திலும் கொஞ்சம் அப்படி ஸஞ்சரித்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

பாகவத்தில் கோபிகா ஸ்த்ரீகளையும், ருக்மிணியையும் பற்றி வருகிறதிலிருந்து அவர்கள் களப குங்குமாதிகள் பூசிக் கொண்டிருந்த போதிலும் அதற்கு மேலேயே உத்தரீயமும் போர்த்திக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

ராவணன் தூக்கிக் கொண்டு போகிறபோது ஸீதை தன்னுடைய உத்தரீயத்தின் ஒரு பாகத்தைக் கிழித்து தன் நகைகளைக் கட்டி, ராமருக்கு அதுவாவது தடயம் காட்டட்டுமெனக் கிஷ்கிந்தையில் போட்டாள் என்று ராமாயணத்தில் இருக்கிறது. இதைப்பற்றிக் கிஷ்கிந்தா காண்டத்தில் ஸுக்ரிவன் சொல்வதும், ஸுந்தர காண்டத்தில் ஆஞ்ஜநேயர் அசோகவனத்தில் தனக்குத் தானே சொல்லிக்கொள்வதும் உத்தரீயம் இருந்ததை நிச்சயப் படுத்துகின்றன.

அந்தரீய-உத்தரீயங்கள் எனப்படும் வேஷ்டி, அங்கவஸ்த்ரங்கள் ஆகிய இரண்டு மட்டுமின்றி த்ருதீய வஸ்த்ரம் என்பதாக ஒரு மூன்றாவது வஸ்த்ரமும் ஆண்களே வைத்துக் கொள்ளவேண்டுமென்று சாஸ்த்ரம். வேதத்தின் வாக்குதான்  ‘அதாரிடி’க்கெல்லாம் மேலான ‘அதாரிடி’. அதோடு, அதுதான் ஆதிக்கெல்லாம் ஆதியான புஸ்தகம், நம்முடைய ரொம்பவும் தொன்மைக்கால வழக்கு அதிலிருந்துதான் தெரிகிறது. அதன்படி ஆண்-பெண் இரு பாலரும் ‘வாஸாந்தரம்’ என்று இடுப்புக்குக் கீழே ஒரு வஸ்த்ரமும், ‘பரிதானம்’ என்று இடுப்புக்கு மேலே ஒரு வஸ்த்ரமும் தரிக்க வேண்டும். ஸ்த்ரீகள் விஷயத்தில் இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தே பிற்பாடு புடைவையாயிற்று.

ஸூர்ய பகவானுடைய குமாரியான ஸூர்யா என்பவளை ஸோமன் என்கிற தேவதை கல்யாணம் பண்ணிக் கொள்வதாக ரிக்வேத்தின் கடைசி அஷ்டகத்தில் வருகிறது. அந்த மந்தரங்களைத்தான் இப்போதும் விவாஹங்களில் சொல்வதாக நடந்து வருகிறது. அதிலே அந்த ஸூர்யா ஆசாஸனம், விசஸனம், அதிவிகர்த்தனம் என்று மூன்று வஸ்திரங்கள் தரித்துக் கொண்டதாக இருக்கிறது.

இதையெல்லாம் கவனிக்காமல்தான் பழைய காலத்தில் ஸ்த்ரீகளுக்கு மேலாடை இல்லை என்று அசட்டுத்தனமாகச் சொல்வது. ஸ்த்ரீ கெளரவத்தையும் மானத்தையும் பவித்ரத்தையும் ப்ராணனுக்கு மேலாக மதித்துக் காப்பாற்றிய இந்த தேசத்தில் அப்படி இருந்திருக்கவே முடியாது. மலையாள தேசம் ஒரு விதிவிலக்கு. காரணம், அதை பாரத தேசத்தில் சேராத தனி தேசமாகவே ஆதியில் பரசுராமர் அமைத்தார். அப்போது பாரதத்தில் இருந்தவர்களைத்தான் அவர் அங்கே குடியேற்றினார். அப்படிக் குடியேறியவர்கள் திரும்பவும் mainland-க்குப் போகாமல் தடுக்க வழி, அவர்களுடைய பழக்க வழக்கங்களை வேறே மாதிரி மாற்றி விடுவதுதான்; அப்படிப் பண்ணிவிட்டால் mainland- காரர்கள் அவர்களை ம்லேச்சர்களாகக் கருதி, தங்கள் ஸமூஹத்தில் சேர்த்துக் கொள்ளாமல் பஹிஷ்காரம் பண்ணி விடுவார்கள் என்று நினைத்தார். அப்படியே நம்முடைய பாரத தேசத்தில் நடக்கும் சாஸ்த்ர வழக்குகளிலும் நடைமுறைகளிலும் அநேக மாறுபாடுகளை மலையாள தேசத்துக்காரர்களுக்கு ஏற்படுத்தினார். அவற்றில் ஒன்றுதான் ஸ்த்ரீகளின் மேலாடை பற்றியது.

ஆத்ம ச்ரேயஸுக்கு ஹானி

பைஜாமா-ஜிப்பா போட்டுக் கொள்கிற ஸ்த்ரீகள் மேலுக்கு அங்க வஸ்த்ரம் மாதிரி ஒன்று பேருக்குப் போட்டுக் கொள்வதாகத் தெரிகிறது. ஸ்த்ரீத்வம் என்று இருப்பதன் மான, கெளரவ, வெட்கங்களுக்கு இந்த மேலாடை போதவே போதாது. யதோக்தமாகப் புடைவை உடுத்திக்கொண்டு அதன் மேலாக்குப் போர்வையிலிருப்பதுதான் அவர்களுக்கு லக்ஷணம், ரக்ஷணம் எல்லாம். புருஷர்களின் தப்பான பார்வையைத் தூண்டிக் கொடுக்கிற எந்த ஆடை அலங்காரமும் அவலக்ஷணந்தான். பெண்கள் கற்பு நெறியை நெருப்பு மாதிரிக் காப்பாற்றி வந்து அதையே தேசாசாரத்தின் ஜீவரத்தமாகப் பண்ணிக் கொண்டிருக்கிற இந்த பாரத வர்ஷத்திலே அதற்கு ஊறு விளைவிக்கும்படி பண்ணினால் நம்முடைய மஹோன்னத நாகரிகமே இடிந்து விழுகிற மாதிரிதான்!

இன்றைக்கு ஜிப்பாவுக்கு மேலே பேருக்கு ஒரு வஸ்திரம் என்பது எதிர்காலத்தில் இல்லாமலே போகலாம். ஏனென்றால் மானாவமானங்களை மதிக்காமல் ஸெளகர்ய – அஸெளகர்யங்களைப் பார்த்தல்லவா இப்போது உடுத்தத் தலைப்பட்டிருக்கிறார்கள்? ஜிப்பாவுக்கு மேலே அங்கவஸ்த்ரம் மாதிரி ஒன்று போட்டுக்கொள்வது அஸெளகர்யமாயிருக்கிறது என்று தோன்றிவிட்டால்?

ரொம்பவும் அருவருப்பான இன்னொரு விஷயம் ஸ்த்ரீகளுக்கு ‘நைட்-கெளன்’ பழக்கமுழ் வந்திருக்கிறது என்பதாகும். குருவை மிஞ்சின சிஷ்யனாக இதில் வெள்ளைக்காரர்களையும் மிஞ்சி விட்டிருக்கிறார்களென்று தெரிகிறது. வெள்ளைகாரர்களில் புருஷர்கள்கூட ‘பெட்-ரூமில்’ மட்டுந்தான் ‘நைட்-கெளனில்’ இருப்பது; அந்த ரூமை விட்டு அகத்துக்குள்ளேயே வெளியில் வந்தால்கூட அப்படியே வராமல் ஸாதா ட்ரெஸ்ஸுக்கு ‘சேஞ்ஜ்’ பண்ணிக் கொண்டுதான் வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நம் தேசத்துப் பெண்களோ ‘நைட்-கெளனி’லேயே ‘நைட்’ போன அப்புறமும் தெருவில்கூட சுற்றுகிறார்கள் என்று தெரிகிறது. ரொம்பவும் தலைகுனிவான விஷயம்.

இப்படியெல்லாம் செய்வது ஸ்த்ரீகளின் ஆத்ம ச்ரேயஸை அடியோடு கெடுக்கும். தேசத்திலும் அமங்களங்களை, பல தினுஸான பீடைகளை வ்ருத்தி பண்ணும்.

 

Exit mobile version