
நல்ல சீலங்கள் உண்டாக வேண்டுமென்றால் துர்குணங்கள் நிவ்ருத்தியாக வேண்டும். துர்குணங்கள் நிவ்ருத்தியாக நல்ல கர்மானுஷ்டானங்களை செய்; பூஜை பண்ணு என்று பல விஷயங்களை சாஸ்திரம் சொல்கிறது.
சித்தத்தில் அழுக்கை ஏற்றிகொண்டு விட்டோமோ, அந்த அழுக்கை போக்க அத்தனை நல்ல கார்யங்கள் செய்து தேய்க்க வேண்டும். நல்ல கர்மானுஷ்டானங்களை செய்ய வேண்டும். அதனால் சித்தசுத்தி வரும். நல்ல சீலங்கள் உண்டாகும்.
தாமிர செம்பு கிணற்றில் பாத்து வருஷங்கள் கிடந்தது விட்டது என்றால் அதனை எத்தனை தேய்த்தாக வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு தேய்க்கிறோமோ அவ்வளவுக்கு அது வெளுக்கிறது, சுத்தமாகிறது.
இந்த உலகத்தை எல்லாம் படைக்கிறவன் யார்? நமக்கெல்லாம் இவ்வளவு அன்ன வஸ்த்ர சௌகர்யங்களை கொடுக்கிறவன் யார்? அவனை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய சித்தத்தை அழுக்கு இல்லாமல் வைத்து கொள்ள வேண்டும்.
கண்ணாடியில் பார்க்கிறோம்.அழுக்காக இருந்தால் பார்க்க முடிகிறதா? சுத்தமாக துடைத்து விட்டு பார்த்தால் நன்றாகத் தெரியும். சுத்தமாக துடைத்த கண்ணாடி என்றாலும் கூட, அது ஆடிக்கொண்டிருந்தால் பிம்பம் விளங்காது. ஆடாமல் நிலையாக இருக்க வேண்டும்.
சுத்தமாக ஆடாத கண்ணாடியாக இருந்தால் தான் உண்மை பிரகாசிக்கும்.சித்தம் என்பது கண்ணாடி போன்றது. பரம் பொருள் ஒன்றே உண்மை. கெட்ட எண்ணம் தோன்றாவிட்டால், சித்த கண்ணாடி சுத்தமாகும்.ஒன்றிலேயே அதை ஈடுபடுத்தினால் அது ஆடாமல் நிலைத்த கண்ணாடி ஆகும்.
அப்போதுதான் பரமாத்மா அதில் பிரதிபலிப்பார். அந்த பிரதிபலிப்பில் – பரமார்த்த தரிசனத்தில் நாம் அனுக்கிரகம் பெறலாம்.