Sage of Kanchi

How Mahaperiyava showed the guru to Writer Sri Balakumaran

குருவை ஏன் தேடுகிறாய். நமக்கு குரு இவர்தான் என்று அம்மா காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை சுட்டிக்காட்டினார்கள். மகா பெரியவா தான் நமக்கு எல்லாம் என்று சொன்னார். ஆனால் நான் பார்த்த நேரத்தில் அவரைச் சுற்றியிருந்த ஜனங்கள் வடமொழிப் புலமை மிக்கவர்களாகவும் அது குறித்த பேச்சுகள் மட்டும் பேசுபவர்களாகவும் இருந்தார்கள்.
நான் அந்தணன் ஆயினும் வடமொழிப் பயிற்சி சிறிதும் இல்லாதவன். என் தாயார் தமிழ் பண்டிதையாக இருந்ததால் தமிழில் ஆர்வம் இருந்தது அவ்வளவே. சதஸ் நடக்கிறது.சதஸ் நடக்கிறது என்று பல பேர் சொல்ல நான் போய் கிட்டே உட்கார்ந்து காது கொடுத்து கேட்டபோது ஒரு வார்த்தையும் புரியவில்லை. ஒரு செய்தியும் விளங்கவில்லை. நான் மிகுந்த அந்நியமாக என்னை உணர்ந்தேன்.
மகா பெரியவாள் என்ற அந்தக் கருணாமூர்த்தி என்னை மிகச்சரியாக பாதை மாற்றி விட்டார்.
உன் புத்திக்கேற்றபடி உன் சக்திக்கு ஏற்றபடி உன் சூழ்நிலைக்கு ஏற்றபடி என்று என்னை திசை திருப்பினார். அவர்கள் எல்லாம் வாயால் பேசாதவர்கள். செய்கையை கூட விளம்பரப்படுத்தாது அவர்கள் சூட்சுமமான செய்கையால் நம்மை வழி நடத்துபவர்கள்.
எனக்கென்று ஒரு சாத்துக்குடிப் பழம் உருட்டி விட்ட போது, நான் ஆவலோடு உருண்டு வந்தபழத்திற்கு காத்திருக்க, என்னை முந்திக் கொண்டு என்னை விட 10 வயது மூத்தவரான ஒரு மனிதர் முன்னே போய் அந்தப் பழத்தை லாவி கொண்டு, “மகா பாக்கியம் மகா பாக்கியம்” என்றும் “எனக்கு கொடுத்தா எனக்கு கொடுத்தா” என்றும் உரக்கச் சொல்லிய போது நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதிர்ச்சி அடைந்து நின்றேன்.
ஏதோ ஒரு குரல் “நீங்க குறுக்கே போய் எடுத்துட்டீங்க” என்று சொல்ல முற்பட அதை அவர் வேறு விதமான சப்தங்கள் மூலம் அடக்கினார்.
“பகவானே என் மேல இந்த அளவு கருணையா” அதிகப்படியான வசனங்கள் பேசினார். அது என்னை நோக்கி வரவில்லை போலும் என்று நான் அமைதியானேன்.
மூன்று நிமிடங்கள் வெறுமே அதே விதமான பிரார்த்தனையோடு எனக்கு குரு வேண்டும் என்கிற ஏக்கத்தோடு மகா பெரியவரைப் பார்த்துக் கொண்டிருக்க, இந்த முறை தீர்க்கமாய் ஒற்றை விரல் நீட்டி என்னை அருகே அழைக்க வேறு எவரும் போகவில்லை. போக முடியவில்லை. நான் மட்டும் நான்கடி முன்னே போனேன்.
அங்கிருந்த பழத்தில் மிகப்பெரிய பங்கனப்பள்ளி பழத்தை எடுத்து அவர் கை நீண்டது. என் முதுகு குனிந்து இரண்டு கைகளும் நீட்ட குவிந்து விரிந்த என்னுடைய கைகளில் அவர் பழம் போட்டார்.
குரு என்கிற ஏக்கம் எனக்கு தீரும் என்பது புரிந்துவிட்டது.
இனம்புரியாத ஒரு நிறைவு என் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது என்கிற ஒரு தெளிவு. அந்த மாம்பழத்தோடு வெளியே வந்தேன். வெளியே அந்த சாத்துக்குடி பழம் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது. “கருணை அம்மா அது கருணை” என்று புலம்பிக் கொண்டிருந்தது. அந்த வீட்டுப் பெண்களும் கண்களை கசக்கிக் கொண்டு இருந்தார்கள்.
அங்கே சுற்றி இருப்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் ஒரு நாடகத் தன்மை இருப்பதாய் நான் உணர்ந்தேன். இந்த நாடகம் உனக்குள் வரக்கூடாது. கவனம் ஆடாதே, பொய்யாய் இருக்காதே உண்மையாயிரு. அவனுடைய பொய்மை உனக்கு காட்டப்படுகிறது, நீ உண்மையாக இருக்கவே அந்த பொய்யை உற்றுப்பார் என்று எனக்குள் தோன்றியது.
சில நொடிகளே பார்த்த அந்த முகத்தை அந்த பொய்மையை அந்த நாடகத்தை அந்த வெறும் வசனத்தை நான் மறுபடி மறுபடி யோசித்து மௌனமாக இருக்க கற்றுக் கொண்டேன்.
மூன்று மாதம் பொருத்து திருவண்ணாமலை சன்னதி தெருவில் கம்பிகளுக்கு ஊடே சிங்கம் போல் அமர்ந்திருந்த யோகிராம்சுரத்குமார் அவர்களைப் பார்க்கும்போது என் குரு இவர்தான் என்று சர்வ சத்தியமாய் எனக்கு தெரிந்து போயிற்று. குரு இங்கே இருக்க நான் எங்கேயோ தேடி இருக்கிறேனே என்று நினைத்தேன்.
அவர் அருகே போக முயற்சித்தபோது “Not now. Later” என்று கட்டளை போலும் அவர் சொன்னார்.
நான் உடனடியாக அந்த இடம் விட்டு அகன்றேன். புறக்கணிப்பு என்பது முன்பெல்லாம் எனக்கு அவமானமாக தோன்றும். துடித்துப் போவேன். ஆனால் அப்படியெல்லாம் துடிக்கவில்லை. துடித்துப் போவதான பொய்மை எனக்குள் வரவில்லை.
காரணமில்லாமல் அவர் சொல்ல மாட்டார். நமது சந்திப்பு இப்போது இல்லை பிற்பாடு என்று சொன்னால் அதைச் சொல்பவர் உங்கள் குரு என்றால் உடனடியாக அதன்படி கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது தவிர வேறு எந்த கேள்வியும் அங்கு இல்லை என்பது புரிந்து போயிற்று, கீழ்ப்படிந்து நடத்தல் எல்லாம் என்னிடம் இல்லாத குணம்.
என்ன Later இப்பவே பார்த்தாலென்ன என்றுதான் எனக்கும் சிந்தனையோடும். அங்கே சப்தமே எழவில்லை. காரணம் அந்த சன்னதியின் மகத்துவம். அந்த உருவத்தின் கம்பீரம். இப்போது இல்லை பிறகு என்று நான் துரத்தப்பட்ட போது அடங்கி நகர்ந்தேன். பிறகு அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நான் துள்ளிக் குதித்தேன். கண்டறியாதன கண்டேன் என்று உள்ளுக்குள்ளே மனம் பாடியது. தேடிக் கண்டுகொண்டேன் என்று பிதற்றியது.
Later என்பதற்கு என்ன அர்த்தம்? என்ன தேதி? எந்த மாதம்? எந்த கிழமை? எனக்கு தெரியவில்லை. ஆனால் மூன்று மாதம் கழித்து போய் நிற்க அப்போதும் வரவேற்பு சரியாக இல்லை. என்னை அழைத்துப் போனவரை உள்ளே உட்கார வைத்துவிட்டு என்னை வெளியே நிற்கவைத்துவிட்டது.
இது ஏதோ விளையாடுகிறது என்னை சோதிக்கிறது. எடைபோட்டு பார்க்கிறது. உரசி இது உயர்ந்த சரக்கா? என்கிற ஆராய்ச்சி நடத்துகிறது என்பதை புரிந்து கொண்டேன். மூன்றாம் முறை போக மிக நெருக்கமான தரிசனம், பிரியமான வார்த்தைகள், வேகமான தொடல்கள். நிறைய விசாரிப்புகள். என் கைகளை கோர்த்து கொண்டு உற்று என் கண்களை பார்த்து, என் மீது சாய்ந்து, என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தினார். பிறகு தலையை தடவினார். கழுத்து தடவினார். முதுகை தடவினார். என்னுள் இருந்து பீறிட்டு எழுந்த ஒரு சக்தியை மிகப்பெரிய சந்தோசத்தை விவரிக்கமுடியாத அதிர்வை நான் உணர்ந்தேன். இந்த உலகம் நீ நினைக்கும் வண்ணமாய் இல்லை. அது உண்மையில் வேறு ஒரு ரூபம் உடையது. அந்த ரூபத்தில் ஒரு பகுதி இதோ உனக்கு காட்டப்படுகிறது என்று அவர் சொல்லாமல் சொன்னார். இது தொடங்கி பல முறைகள் அவருக்கு அருகே ஆனந்த பரவசம் அனுபவித்தேன். அவரின் ஒவ்வொரு அசைவும் புரிந்தது. ஒவ்வொரு பேச்சும் புரிந்தது. அவரின் ஒவ்வொரு செய்கையையும் மிக ஆழமானது என்பதை என்னால் உணர முடிந்தது.
– எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

Exit mobile version