Sage of Kanchi

Mantra Japam by Sri Seshadri Swamigal

மந்திரம் சொல்லிச் சொல்லி கர்மாவை அழிக்கலாம். வாழ்க்கைப் போக்கையே மாற்றி விடலாம். மந்திர ஜபம் மனசை சுத்தம் பண்ணும். மனசு சுத்தமாகி விட்டது என்றால் போதும் நீ என்ன கேட்டாலும் கிடைக்கும். மந்திரம் வெறும் வார்த்தையல்ல. கந்தகம் என்பது ஒரு வகை மண்ணு. அது வெடி மருந்தா மாறலயா? அந்த மாதிரி சில குறிப்பிட்ட வார்த்தைகள் உள்ளுக்குள்ள மாறுதல் நிகழ்த்தும்.

மந்த்ரம் சொல்லச் சொல்ல மனசு ஒருமுகப்படும். ஒருமுகப்பட்ட மனசுக்கு நிறைய சக்தி உண்டு. சந்தேகப் படாம உடனே மந்திரம் சொல்ல ஆரம்பிக்கணும். நமக்கு என்ன ஆயுசு விதிச்சிருக்கோ தெரியாது. அதனால இந்த ஆயுசிலேயே நல்லது கிடைக்க மனதில் தெளிவு கிடைக்க இப்பவே மந்திரம் சொல்ல ஆரம்பிக்கணும்.

ஒரு மணி நேரத்துக்கு மேல ஜபம் பண்ண முடியலையே சேஷாத்ரி. அந்த ஒருமணி நேரமும் மனசு எங்கெங்கோ சுத்துறதே, ஆர்வம் உள்ளவர்கள் ஆவலுடன் கேட்டார்கள்.

பண்ணி தான் ஆவேன்னு உட்கார்ந்துடணும். அதுக்குப் பேர் தான் வைராக்கியம். என்ன தடுத்தாலும் எது குறுக்கிட்டாலும் தினம் ஒரு மணி நேரம் ஜபம்கறதை ஆரம்பிச்சுடணும். சிரத்தையா பண்ண ஆரம்பிச்சுட்டா ஒரு மணி நேரம் போறாது. மனசுக்கு பசிக்க ஆரம்பிச்சுடும். இன்னொரு மணி நேரம் பண்ணு. இன்னொரு மணி நேரம் பண்ணுன்னு அதுவா கேட்கும். ஆரம்பத்தில் ஆர்வம் இருக்காது, ஆனால் கஷ்டப்பட்டு ஆரம்பிச்சுட்டா ஆர்வம் அதிகமானாலும்.

நான் ஏழு வயசிலேயே கார்த்தாலே 1 மணி நேரம், சாயந்தரம் 1 மணி நேரம் ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அதனாலே கணக்கோ பாட்டோ பூகோளமோ, இங்கிலீசோ பள்ளிக்கூடமோ முக்கியமில்லைனு ஆயிடுத்து. காசை விட ஜபம் தான் முக்கியம்னு போயிடுத்து. எல்லா அபிலாஷைகளும் ஜபத்தால் நடக்கும்கறபோது வேற இங்கு செய்ய என்ன இருக்கு. மனசு கேட்க, கேட்க ஜபம் பண்ணிண்டே இருக்கேன். என் மனசுக்கு பசி அதிகம். எத்தனை சாப்பிட்டாலும் நிரம்பாத வயிறு மாதிரி எத்தனை ஜபம் பண்ணினாலும் மனசுக்கு பத்தல. பன்னெண்டு மணிநேரம் பண்றேன்.

தினம் ஒரு மணிநேரம் ஜபம் பண்ணினா, மனசு அமைதியாகும். கோபம் குறையும். இதைவிட அதிகமா பண்ணினா கோபம் அறவே போறதுக்கு வாய்ப்பிருக்கு. காலைல ரெண்டு மணி நேரம், சாயந்தரம் ரெண்டு மணி நேரம் பண்ணினா காதில் இனிமையான சங்கீதம் கேட்கும். உடம்பு இறகு போல லேசா இருக்கும். நோய் உபத்திரவாதங்கள் இருக்காது. உணவு கவனமா சாப்பிடத் தோணிடும். ருசிக்கு நாக்கு அலையாது. உணவு குறைஞ்சு உள்ளம் பலமாயிடும்! கார்த்தாலே மூன்று மணி நேரம், சாயந்தரம் மூன்று மணி நேரம் ஜபம் பண்ணினா, முகத்துல மாறுதல் உண்டாகும். கண் கூர்மையாகும். உடம்பிலே இருந்து தேஜஸ் விசிறி விசிறி அடிக்கும். நாம் சொல்லும் வாக்கு பலிக்கும். எட்டு மணி நேரம் ஜபம் பண்ணினா, நீ வேற, மந்த்ரம் வேற இல்ல. நீயே மந்திரமா மாறிடலாம்.

அதற்கப்புறம் நடக்கறதெல்லாம் ஆனந்தக் குதியல் தான். எதை பார்த்தாலும் சந்தோஷம் தான். பசிக்காது. தூக்கம் வராது. யாரையும் அடையாளம் தெரியாது. மனசு கட்டுலேயிருந்து விடுபட்டு ஸ்வாமி கிட்ட நெருக்கமா போய்டலாம். அப்புறம் அதுவே உன்னை இழுத்துண்டு போய்டும். இன்னும் உக்கிரமா ஜபம் செய்ய, அந்த சக்தியே கூட்டிண்டு போய்டும். நீ உன்னோட கட்டுப்பாட்டில் இருக்கமாட்டே. முழுக்க முழுக்க ஸ்வாமிகிட்ட சரணாகதி ஆயிடுவே. அப்ப நீ என்ன கேட்டாலும் கிடைக்கும்.

இதுல பெரிய சந்தோஷம் என்ன தெரியுமோ? உனக்கு வேணும்கறது ஒவ்வொன்றும் பகவானா பார்த்து, பார்த்துக் கொடுப்பார். உன் வார்த்தையெல்லாம் கடவுளுடைய வார்த்தை. உன் செய்கையெல்லாம் கடவுளுடைய செய்கை. எட்டு மணி நேர ஜபத்துக்கு அப்புறம் என்ன? எல்லா நேரமும் ஜபம் பண்ணனும்னு தோணிடும். எட்டு இருபத்தி நாலா மாறிடும். அதுல இன்னும் உக்கிரம் வந்துடும். மந்த்ர ஜபம் என்பது கற்றுக் கொள்வதில் இல்லை. பூஜை என்பது சொல்லித் தந்து செய்வது அல்ல. உள்ளிருந்து பீறிட வேண்டும். தன்முனைப்பாக கிளர்ந்து எழுந்து அதற்குள் தானே மயங்கிச் சரிதல் வேண்டும். சடங்காக செய்கிற போதும், எதிர்பார்த்து உட்காரும் போதும் செய்கிற விஷயத்தின் வீர்யம் குறைகிறது. ஸ்வாசம் போல இயல்பாக மாறிய செயல் தான் உன்னத நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

ஸ்ரீ சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Exit mobile version