Sage of Kanchi

Dr.வீழிநாதன் அவர்களின் யூட்யூப் சானல்

வீழிநாதன் மாமா மஹாபெரியவாளோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை, ஆனந்தம் பொங்க பகிர்ந்து கொள்வதை நாம் நிறைய கேட்டிருக்கிறோம். இந்த இணையதளத்திலேயே மகேஷ் நிறைய அவற்றை பகிர்ந்துள்ளார். மாமா எளிமையின் உருவமாக இருப்பதால், அவருடைய இன்னொரு பக்கத்தை உங்களில் சிலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. Dr.வீழிநாதன் அவர்கள், பல வருடங்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருத பிரிவின் தலைவராகவும், பேராசிரியராகவும், இருந்து, சிறந்த பணியாற்றியிருக்கிறார். ஓய்வுபெற்ற பின் கடந்த 25 வருடங்களாக உயர்கல்வி கற்பவர்களுக்கு பாடங்கள் எடுப்பதும், புத்தகங்கள் வெளியிடுவதும், பிறர் புத்தகங்களை சீர்திருத்துவதும் என, தினமும் பல மணி நேரங்கள் உழைத்து வருகிறார். கடந்த சில வருடங்களில், அவர் செய்த விரிவுரைகளை, அவருடைய மகன் Dr.காமகோடி ஒளிப்பதிவு செய்து நம்மோடு பகிர்ந்துள்ளார்.அந்த யூடியூப் சேனலில் இணைப்பை இங்கே தருகிறேன்-> Dr.வீழிநாதன் அவர்களின் யூட்யூப் சானல்

இதில் “தர்க்க சங்க்ரஹம்” குறித்து அவருடைய பாடங்கள், அவருடைய அறிவாற்றலையும், பாடம் நடத்தும் திறமையையும் வெளிப்படுத்துகின்றன. அதோடு “ஹனுமத் பிரபாவம்” “குசேலோபாக்கியானம்” “ரகுவம்சம்” முதலியவற்றின் வியாக்கியானங்களும், நம் மனதை கொள்ளை கொள்கின்றன.

தான் கடலளவு படித்திருந்தாலும், கேட்பவர்கள் புரிந்து கொள்ளும்படி எளிமையாக எடுத்துச் சொல்வதே ஒரு நல்லாசிரியரின் திறமை, பண்பு. தன் படிப்பை காண்பித்து பிரமிக்கச் செய்யும் எண்ணமே அவர்களுக்கு இருக்காது. அது போல, மாமா, இந்த உபன்யாசங்களில், ராமாயணமும், பாகவதமும் சொல்லும் போது, அந்தந்த புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு, அதில் உள்ள ஸ்லோகங்களை மட்டுமே கையாண்டு, அவற்றின் பொருளைக் கூறி, சில இடங்களில் அவற்றில் உள்ள அழகான அம்சங்களை எடுத்துக் காண்பிக்கிறார். இதனால் கேட்பவர்களுக்கு அந்தப் இதிகாச, புராண, காவியங்களின் அருமை புரிகிறது. மேலும் படிக்க ஆசை வருகிறது.

இதைத்தவிர யூட்யூபில் வீழிநாதன் என்று தேடினால், வெவ்வேறு சமயங்களில் அவர் ஆதிசங்கரரை குறித்தும், முத்துசுவாமி தீக்ஷிதர் கிருதிகளை குறித்தும் செய்த பல உபன்யாசங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் தெவிட்டாத அமுதம். காமாட்சி வடிவமான மஹா பெரியவாளின் அருளைப் பெற்ற அவருடைய வாக்கைக் கேட்டு இன்புறுவோம்.

Exit mobile version