பெரியவா சரணம்.
அத்புதமான திருவருட்பா பாடலைப் படித்துக் கொண்டிருந்தேன். அமுதமாய் ஆன்றோர் அதற்கான அர்த்தத்தையும் தெளிவாக தந்துள்ளனராயிற்றே!
ஆயினும் பாடலைப் படித்து முடித்ததும், அம்மையப்பனை அருட்பெருந்தெய்வத்தை அழகுற போற்றிய முறையிலேயே, அம்மையப்ப ஸ்வரூபியான எம் மஹாபட்டாரகனான, முப்பெருந்தேவரின், மூவனிதையின் ஓருருத் தேவனான எம்பெருமான உம்மாச்சீயை, ஸ்ரீஆதிசங்கர பகவத்பாத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடத்தின் இன்றுவரையிலும் சம்பூர்ணமாக விளங்குகின்ற எம் ஆசார்யர்கள் 70 பேர்களையும் ஒருசேரத் தொழும்படியாக ஒரு போற்றுதலை “குருவருட்பா” என எழுதிட மனம் உவகைப்பூண்டதன்றோ!
ஆவல் கொண்டுவிட்டோம்; அதுவும் தர்மமான ஆசை. அதனை அழகுற ஆக்கம் செய்திட அவர் அருள்வரன்றோ!
சங்கரம் போற்றி!
ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர…
திரைபுலங் கடந்த திருவுரு வெளியில்
உறைதலம் புகுந்தஎம் குருவடி நிழலில்
தீவினை தொடரா திருவொளி உய்யவும்
ஊழியிற் காத்தெமக் குதவிடும் சோதி
நிறைபல னுண்டாம் குருபரன் அருளில்
அடியவர் வாழ்வும் அகமகிழ் செய்யும்
நீட்டல்முன் ஓதுவோம் சங்கரம் பத்தியில்
ஆனந்தம் உய்த்திட அருள்தரும் சோதி
அஞ்சுகம் அருளிணை ஐயன்தன் னருளிலே
முட்டகப் பூசெதும் மூண்டிடா நிலையுற
ஆண்டகை ஆசியும் அடியரைக் காத்திடும்
அங்கைநல் லாசியில் அவர்கழல் நாடிட
வித்தகன் வாசியாம் வினைஐயம் நீக்கிட
சுத்தம்மெய்ப் பொருளதைப் பற்றிடக் கூடியே
வீக்கமுங் கொளாஎம் வாழ்விதும் ஓங்கிட
சூதிலா பத்தியில் சங்கரம் போற்றுவோம்!
திருக்கச்சி தண்ட கமண்டலம் துணை
திருக்கச்சி தண்டக மண்டலம் துணை
இச்சபைதனிலும் ஆன்றோர் பலருண்டு! மூத்தோர் பலருள் அருந்தமிழ் தொண்டாற்றிய புலமை மிக்கவர்களும் உண்டு. சிறியேன் நாயேன் படைத்துள்ள இந்த குருவருட்பாவிலே பிழையேதும் இருப்பின் அருட்கூர்ந்து அடியவனுக்கு உணர்த்தியருளுங்களேன் என்பதான வேண்டுகோளுடனாக அனைவர்க்குமாய் பகிர்கின்றேன்!
சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
