Thanks to Elanthai Sri Ramasami mama for sharing his poems on Periyava. Will post one at a time.
Happy guruvaram!

புகழ்கின்ற சொல்லில் பொருளாக நிற்கும் புனித மறை
அகழ்கின்ற நெஞ்சில் அருளாக மாறி அழகுதரும்
நிகழ்கின்ற கால நெளிவிலே பற்றிடும் நிம்மதியாய்த்
திகழ்கின்ற காஞ்சித் திருமகன் தெய்வத் திருவடியே!
நேர்நின்ற பேச்சும் , நிறைநின்ற காப்பும், நினைவுகளின்
பேர்நின்ற வெற்றிப் பெருமிதம் பேசும் பெருமைகளும்
கூர்நின்ற பார்வை குளிர்கின்ற அன்புக் குளிர்நிலவும்
கார்நின்ற காஞ்சிப் பெரியவர் தம்முள் கனிந்திடுமே!
பொன்னை உருக்கிப் புடம்போ’ட்டு வார்த்தநற் புண்ணியமே,
தன்னைக் கரைத்துத் தனதுளம் தன்னையே தாங்கிவர
மின்னைக் கரைத்து விழியமு தாக நீ வீசுகிறாய்
என்னே அழகிதை எப்படி நானும் இசைப்பதுவே!
வந்தர சாளருள் மாமணியே, மறை வாரிதியே,
தந்திர மந்திர சாகச மில்லாத் தவமணியே,
எந்திர வாழ்வில் எமக்கருள் செய்ய எழுநிதியே,
சந்திர சேகர சங்கராச் சார்ய சரஸ்வதியே!
சிரிப்புக் கிடமா’ய்த் திரிந்து தினம்தினம் தின்னுபசி
அரிப்புக் கிடமா’ய் அலமரும் ஏழை அடுதுயரைப்
பிரிப்புக் கிடமாய்ப் பிணித்தவர் வாழப் பிடியரிசி
விரிப்பைத் திறந்து விடியல் அளித்தனை வித்தகனே!
விதவித மாக விரிந்திடும் பாதை விரிவுகளில்
மதமத பேத மரபுகளுக்குள் மலர் நகையாய்ப்
பதம்பத மாகப் பரிவுடன் நீயொரு பாலமிட்டாய்
நிதநிதம் நின்னடி போற்றுவோம் நெஞ்ச நிறைமலரே!
காவி உடையும், கரத்தில்செங் கோலும், கமண்டலமும்,
மேவிச் சிரசில் விரிமலர் மாலை விழுதுகளும்,
தாவில் தவமும், தவக்கனல் தந்த தரிசனமும்
ஆவி எடுத்த பயன்தர வாய்த்தநல் ஆலயமே!
பேசாத பேச்செழு பேரின்ப வெள்ளப் பெருக்கினில
மாசாக வந்து மனந்தின்ற யாவும் மயங்கிவிழும்
தாசாதி தாசராய்ச் சங்கரன் பாதங்கள் சாரவிழி
வீசா’த வீச்சில் விரிந்திடும் வேத வியப்புகளே!
நினைவே தவமாய் நினதடி சார்ந்து நெருங்கிவரக்
கனவாய்க் கதையாய்க் கரந்த பலப்பல காட்சியெலாம்
நனவாய் விழிகளில் நாடக மாக்கிடும் நாயகமே,
தனியே இலாத தனியே, தவமேநற் தண்ணருளே!
முதற்பொரு ளாகிடும் மொய்ம்பினை , வேத முழுப்பொருளை,
கதிப்பொரு ளாகிடும் காஞ்சி காம’ட்சியாம் கற்பகத்தை,
துதிப்பொரு ளாகத் தொழுதிடும் ஞானச் சுடர்மதியை
நிதிப்பொரு ளாகப் பிடித்திட நெஞ்செழும் நிம்மதியே!