Sage of Kanchi

பாட்டிகள் மஹாத்மியம் – Part 3 – செல்லம்மா பாட்டி

 

maha-periyava

Compiled & penned by gowri sukumar
(பல புத்தகங்களின் தொகுப்பு)
அனுமதியோடு-வரகூரான் நாராயணன்

ஒரு வயஸான பாட்டி. பெரியவா மேல் அளவே இல்லாத பக்தி.

ஸாதாரணமாக, பெரியவா தன்னை அழைப்பவர்கள் வீட்டுக்கு சென்று பூர்ணகும்பம் பெற்றோ, பெறாமலோ கூட தன் திருவடிகளை அவர்கள் வீடுகளில் பதித்துவந்த காலம் அது!.

எனவே அந்தப் பாட்டிக்கும், தன் வீட்டில் நடக்க இருக்கும் ஹோமத்துக்கு பெரியவா நேரில் வந்து ஆஶீர்வாதம் பண்ணவேண்டும் என்று ஆசை!

“ஆத்துல நடக்கப்போற ஹோமத்துக்கு, பெரியவா நேர்ல வந்து கலந்துண்டு ஆஶீர்வாதம் பண்ணினா…. ரொம்ப பாக்யம்….!

“அதுக்கென்ன? நிஶ்சயமா வரேன்”

ஹோமத்தன்று பாட்டிக்கு இருப்பே கொள்ளவில்லை. ‘இப்போ வந்துடுவார், இப்போ வந்துடுவார்’ என்று எதிர்பார்த்து, கடைஸியில் பூர்ணாஹுதி கூட பூர்த்தியாகிவிட்டது.

பெரியவா வரவில்லை!

பாட்டிக்கு துக்கம் ரொம்ப தாங்கவில்லை. ஆனாலும் ப்ரேமையும் பக்தியும் போய்விடுமா?

ஹோம ரக்ஷையையும், தீர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு ஶ்ரீமடத்துக்கு போனாள். உள்ளே அப்பிக் கொண்டிருந்த ஶோகம் முகத்தில் ப்ரதிபலித்தது.

தன் ஆதங்கத்தை பெரியவாளிடம் சொன்னாள்.

“பெரியவா வரேன்னு சொல்லிட்டு வரலியே?….. நா…. ஏதாவுது தப்பு பண்ணிட்டேனா பெரியவா?”

அழகாகச் சிரித்தார்…..

“நா… அங்க ஒங்காத்து ஹோமத்துக்கு வரல-ன்னு யார் சொன்னா? நாந்தான் வந்தேனே!…”

“ஶிவ ஶிவா…! பெரியவா வந்தேளா? இந்த மடஜன்மத்துக்கு ஒண்ணும் புரியலியே!”

“ஹோமத்தை யாராவது போட்டோ எடுத்தாளா?”

“எடுத்திருக்கா…. பெரியவா”

“அதை print போட்டுப் பாரு. அப்றமா… நா… வந்தேனா, வரலியான்னு ஒன்னோட குத்தப்பத்ரிகையை வாஸி.!..

சிரித்துக் கொண்டே ப்ரஸாதம் குடுத்தார்.

Print போட்டுப் பார்த்தால்…! நிஜந்தான்..!

பூர்ணாஹுதி நடக்கையில், அந்த ஜ்வாலை நன்றாக ஒரு ஆள் உயரத்திற்கு எழுந்திருக்கிறது! அதோடு அந்த ஜ்வாலை, பெரியவா தண்டத்தோடு நிற்பது போல் எரிந்து கொண்டிருந்தது!

அப்படி, அந்த angle-ல பார்த்தால், இப்படி இந்த angle-ல பார்த்தால் என்று எந்தவிதமான guessing-ம் இல்லாமல், பார்த்ததுமே, பளிச்சென்று அருட்பெரும்ஜோதி, தனிப்பெரும் கருணையான அந்த “பரஞ்ஜோதி” அங்கே ஹோமகுண்டத்தில் ஆவிர்பவித்திருப்பது ஸாதாரண ஜன்மங்களின் கண்களுக்குக் கூட தெரிந்தது!

அந்த photo இன்றும், சேலத்தில் உள்ள “மஹா பெரியவா க்ருஹத்தில்” உள்ளது.

பக்தர்களுக்கு குடுத்த வாக்கை பகவான் மறுப்பானா?

அந்த தேஜோமயமான அக்னி ரூபம் என்றும் நம்முள் காக்ஷி கொடுத்துக் கொண்டிருக்க பெரியவாளுடைய பாதங்களில் விழுந்து சரணாகதி பண்ணுவோம்!

பெரியவாளுடைய கோடிக்கணக்கான அத்யந்த பக்தர்களில் ஒருவர் செல்லம்மாப்பாட்டி. மூச்சு, பேச்சு எல்லாமே பெரியவாதான்!

அவளுடைய இளமைக் காலத்தில் நடந்த அற்புதமான நிகழ்ச்சி!…

பெரியவா ஹைதராபாத்தில் முகாம். செல்லம்மாவும் அவளுடைய அப்பாவான வித்வானும் பெரியவா தர்ஶனத்துக்காக அவ்வூரிலேயே உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர்.

பணக்கார வீட்டுப் பெண்ணானதால் செல்லம்மா சிறுவயஸிலும் நிறைய நகைகள் அணிந்திருப்பாள்.

ஒருநாள் ஶ்ரீமடத்துக்காக சில ஸாமான்கள் வாங்குவதற்காக, உறவுக்கார பெண்ணுடன் செல்லம்மா கடைத்தெருவிற்கு சென்றாள்.

எல்லா வேலைகளையும் முடிப்பதற்குள் இருட்டிவிட்டது. ஒரு குதிரை வண்டியை அமர்த்திக் கொண்டு ஶ்ரீமடத்துக்கு கிளம்பினார்கள்.

அதே ஸமயம் முகாமில் ஸாயங்கால பூஜைக்கு அமர்ந்த பெரியவா, அங்கு அமர்ந்திருந்த கூட்டத்தில் செல்லம்மாவை தேடினார்.

பக்கத்தில் இருந்த பாரிஷதரிடம் விஜாரித்தார்…

” ஏண்டா.. செல்லம்மா எங்க? ”

“மடத்துக்காக ஸாமான் வாங்க, கடைத்தெருவுக்கு போயிருக்கா பெரியவா”

“என்னடாது?… பாஷை தெரியாத ஊர்ல தனியா என்னடா பண்ணுவா?… நீ ஒண்ணு பண்ணு. மடத்து வண்டிய (மாட்டு வண்டி) எடுத்துண்டு ஒடனே போய் பாத்துண்டு வா. ”

“இதோ…. போறேன்…”

” நீ… மெயின் ரோடு வழியாப் போகாதே! குறுக்கு சந்து வழியாப் போ!”

தாயினும் சாலப் பரிந்து ஒலித்தது அவர் குரல்!

“ஸரி பெரியவா”

பாரிஷதர் கிளம்பிய ஸமயம், கடைத் தெருவிலிருந்து கிளம்பிய செல்லம்மாவின் வண்டி, திடீரென்று மெயின் ரோடை விட்டு பக்கத்து குறுக்கு சந்துக்குள் நுழைந்தது!

“எதுக்கு இந்த இருட்டு சந்துக்குள்ள நொழஞ்சு போறான்?..”

செல்லம்மாவும், உறவுக்கார பெண்ணும் ஸந்தேஹத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.

ஆள் நடமாட்டம் கொஞ்சங்கூட இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கீழே குதித்தான், வண்டிக்காரன்! அவன் பார்வையே ஸரியாக இல்லை. அவன் கண்களோ செல்லம்மா போட்டிருந்த நகைகள் மேலேயே குறியாக இருந்தது.

” ஏம்பா வண்டிய நிறுத்தினே?”

பயம் பிடித்துக் கொள்ள, மனஸோ…. பெரியவா பாதங்களை இறுகப்பற்றிக் கொண்டது.!

கூப்பிடாமலேயே ஓடி வரும் வத்ஸலனாச்சே!

சொல்லி வைத்தாற்போல் அந்த க்ஷணத்தில், ஶ்ரீமடத்து வண்டி அந்த குறுக்கு சந்துக்குள் வந்து சேர்ந்ததும், வண்டிக்காரன் வண்டியை விட்டுவிட்டு இருட்டுக்குள் ஓட்டமாய் ஓடிவிட்டான்!

“செல்லம்மா…. தனியா இந்தப் பக்கம்லாம் வரலாமா? வாங்கோ ரெண்டு பேரும் வண்டில ஏறுங்கோ! பெரியவா ரொம்ப கவலைப்பட்டு என்னை அனுப்பினா..”

ஆபத்ஸஹாய பெருமாள்… பாரிஷதரை அனுப்பி, ஆபத்திலிருந்து செல்லம்மாவையும், அந்தப் பெண்ணையும் மீட்டார்

Exit mobile version