Sage of Kanchi

பெரியவாளைக் கட்டியிழுத்த பகவந்நாமம்!

Periyava_standing_blessing

Thanks to a devotee for sharing this in whatsapp….

1977-ல் தேனம்பாக்கத்தில் இருந்த பெரியவா, தினமும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ஸன்னதியின் மாடவீதிகளில் ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு வருவார்.

வடக்கு மாடவீதியில் இருந்த ஒரு வைஷ்ணவ குடும்பம், பெரியவாளிடம் அபார பக்தி கொண்டது. பெரியவா குள்ள உருவமாக இருந்தாலும், அவருடைய நடைக்கு ஈடு குடுக்க யாராலும் முடியாது!

ஒருநாள் அம்மாதிரி பெரியவா வேகமாக நடந்து கோவிலை ப்ரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு வடக்கு மாடவீதிக்குள் நுழைந்ததும், சற்றும் எதிர்பாராமல் அந்த வைஷ்ணவ பக்தரின் க்ருஹத்தின் வாஸலில் வந்து நின்று கொண்டார்.

கண்களை மூடிக் கொண்டு அப்படியே சிலை போல் நின்று கொண்டிருந்தார். பிறகு வீட்டுக்குள் நன்றாக உற்று நோக்கினார்.

அதற்குள், பெரியவா வாஸலில் வந்து நின்று கொண்டிருப்பதை கண்டதும், உள்ளே இருந்து மொத்த குடும்பமும் வெளியே ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்கள். எல்லாருக்கும் உள்ளே ஒரே ஒரு கேள்விதான்!

“தெனோமும் நம்மாத்து வழியாப் போற பெரியவா, இன்னிக்கி மட்டும் வாஸல்ல நின்னு, கண்ணை மூடிண்டு த்யானம் பண்ணிட்டு, ஆத்து உள்ளுக்குள்ள வேற தீர்க்கமா ஏன் பாத்துட்டுப் போனார்?…”

அதற்கான விடை அன்று இரவே தெரிந்தது!

அந்த குடும்பத்தின் வயஸான தகப்பனார் அன்றிரவு அனாயாஸமாக விஷ்ணுபதம் அடைந்தார்!

அவருக்கு கண் தெரியாது!

ஸதா விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் மட்டுமே பண்ணிக் கொண்டிருப்பார். யானைக்கட்டித் தெருவில் உள்ள சங்கர மடத்தில் ஸாயங்காலம் நடக்கும் கோபூஜைக்கும், கஜபூஜைக்கும் நாள் தவறாமல் போவார்.

வேறு எந்த பெரிய ஸாதனையும் பண்ணவில்லை! அவஸ்யமுமில்லை!

ஸதா நாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்த தன் பக்தனை, பகவானே அவருடைய வீடு தேடி வந்து, வாஸலில் நின்று, தன்னுடன் எடுத்துக் கொண்டு போய்விட்டான்!

வேறென்ன வேண்டும்?

என்ன பாக்யம்!

Exit mobile version