பெரியவா சரணம்!
முதல் குருவாம், மௌன குரு ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி!
ஸ்ரீமத் பகவத் கீதையை உபதேஸித்தபடியால் ஜகத்குருவாய் விளங்கியவர் ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா!
கலியுகத்தில் பரமேஸ்வர அவதாரமாகக் காலடியில் தோன்றி பரதக் கண்டம் முழுவதிலும் அத்வைத ஞானத்தினை அருளியவர் ஜகத்குரு ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதாள்!
முதல் குருமணியாக அவர் விளங்கிய சர்வக்ஞபீடமான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் தோன்றிய குருமஹாமணிகளுள் 68-வது ஆச்சார்யாளாக தோன்றி, வேதஞானத்தினை நமக்கருளி, மனித நேயத்தின் மகத்துவத்தையும் நமக்கு தமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி விளக்கிய மஹாபெரியவா என்று அனைவராலும் அன்போடும், பக்தியோடும் போற்றப்படுகிற, இன்றும் சூக்ஷ்ம நிலையில் இருந்து அருள்பாலித்துவரும் கலியுக தெய்வம் ஜகத்குரு ஸ்ரீ மஹாஸ்வாமிகள்!
பதிமூன்று வயதில் சன்யாஸம் ஏற்றுக்கொண்டு நூறாவது வயதிலும் பெரியவர்கள் பொதுமக்களுக்கு ஆசி வழங்கி வாழ்ந்தது நம் பாக்கியமே!
பிற மதத்தவரும் ஸ்ரீமஹாஸ்மியைத் தரிசித்து அவர்களிடம் முகதேஜஸைக் கண்டு நாங்கள் இயேசுவின் அருளைக் கண்டோம்; அல்லாவின் அருளைக் கண்டோம் என்று அனுபவித்து எழுதி உள்ளார்கள்.
நடமாடும் தெய்வமாகவும், பிரத்யக்ஷ ஞானியாகவும், சித்த புருஷராகவும், மஹாஸ்வாமியாகவும், பரமாச்சார்யாளாகவும், விளங்கி உலகமெல்லாம் அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே தவயோகத்தில் வாழ்ந்து நமக்கு அருள்பாளிக்கும் சர்வேஸ்வரனை மனதார போற்றி, அவர் நமக்கு அருளிய அறிவுரைகளை மனதார ஏற்று, நல்வழி நடந்து, நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ்விப்போமாக!
ஓம் ஸ்ரீசந்த்ரசேகராய வித்மஹே
சார்வ பௌமாய தீமஹி |
தன்னோ ஜகத்குரு ப்ரசோதயாத் ||– சாணு புத்திரன்
