Sage of Kanchi

ஊடுருவி பார்க்கும் திறன்

 

திருநெல்வேலிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தான் கே.வி.கே. சாஸ்திரியின் பூர்வீகம். அப்பா, தாத்தா என்று தலைமுறை தலைமுறையாக இருந்து, கஸ்டம்ஸ் உப்பளத்தில் சேர்ந்து, மரக்காணத்தில் பணியாற்றி ஓய்வுக்குப்பின் வளவனூரில் இருக்க நேரிட்டது. பெரியவாள் சொல்லிட்டா போதும் உடனே கேட்டு விடுவார். ஏன் என்ற மறு பேச்சே கிடையாது. ஒரு சமயம் பெரியவா, “ஏய், கிருஷ்ணஸ்வாமி, நான் ஒண்ணு சொல்றேன், நீ கேட்பாயா?” என்று புதிர்போல் கேட்டார். “உத்தரவு இடுங்கள்” என்று பணிவோடு நின்றார் கே.வி.கே.

“நீ கிருஷ்ணாபுரம் போய், கோவிலுக்கு அருகே உள்ள ஏழாம் நம்பர் வீட்டிலே போய் ஒரு அம்பது ரூபாய் கொடுத்துட்டு வா. அவர் வாங்க மாட்டேன்னு சொல்லுவா. உன் அப்பா அவர் அப்பாகிட்ட கடன் வாங்கினது. திருப்பிக்கொடுக்கவேயில்லை. அதை நீ கொண்டு கொடுத்து அப்பா கடனை தீர்த்துடு. அப்போதான் நிம்மதியா தூக்கம் வரும்னு” சொன்னார். கே.வி.கே க்கு இரவிலே தூக்கம் வராது – விடிய விடிய முழித்துக்கொண்டு இருப்பார், காலையிலே தூங்கி விடுவார். இது எப்படி பெரியவாளுக்கு தெரியும் என்பதுதான் ஒரே கேள்விக்குறி.

சொன்னபடியே கே.வி.கே கிருஷ்ணாபுரம் சென்று பணத்தைக் கொடுக்க முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்களோ, பணத்தை வாங்கவே மறுத்தனர். ‘எங்கப்பா டைரி எழுதற பழக்கம் உண்டு, அதிலே இப்படி கடன் கொடுத்தா இல்லை” என்று கூற, கடைசியில் எப்படியோ பெரியவா சொன்னான்னு சொல்ல அவர்களும் அதை வாங்கிக் கொண்டனர்.

வளவனூர் திரும்பி வந்து பெரியவாளிடம் நடந்த விபரத்தை கூறினார். பெரியவா சொன்னா தலைமுறை கடந்து வந்ததாலே இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. “எனக்கு மனதிலே பட்டுது சொன்னேன்” என்று கூறினார்.

கே.வி.கே க்கும் டைரி எழுதற பழக்கம் உண்டு. அவருடைய டைரியில் அப்பா கடன் திரு. சீதாராமய்யருக்கு கொடுக்க வேண்டும் என்று எப்பவோ எழுதியது ஞாபகம் வந்தது. அப்போதான் அந்த சீதாராமய்யர் குடும்பம் கிருஷ்ணாபுரமத்தில் இருக்கு என்ற விபரம் தெரிய வந்தது.

காலங்களை மீறி, ஊடுருவி பார்க்கும் சக்தி பெரியவாளுக்கு உண்டு என்பதில் சந்தேஹம் உண்டோ? கே.வி.கே ஆண்டு முதல் நல்ல தேக ஆரோக்யத்துடன் தூங்கினார்.

— Shri Bharani Mani

Exit mobile version