Sage of Kanchi

கர்மத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்

Gayathri Japam2

அநேக நியமங்களோடு பெரிய யக்ஞம் செய்வது, விரதம் இருப்பது, பிரம்மாண்டமாக கோயில் கோபுரங்களைப் பார்த்துப் பார்த்துக் கட்டுவது, குளம் வெட்டுவது என்றிப்படியெல்லாம் முன்னே பல காரியங்களைச் செய்து வந்தார்களே, இவையெல்லாம் அந்தந்த லட்சியத்தோடு நின்றுவிடவில்லை. இவற்றின் முக்கியமான லட்சியம் சித்தத்தை ஒருமுகப்படுத்தி சுத்தமாகப் பழகுவதேயாகும். இந்த ஸத்காரியங்களின் நடுவிலும் அநேக கஷ்டம், அநேக அவமானம் எல்லாம் வரத்தான் செய்யும். ஆனாலும் காரியத்தை முடித்தாக வேண்டும் என்பதால், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு மேலே மேலே எடுத்துக் கொண்ட வேலையில் போய்க் கொண்டிருப்பார்கள். இதுவே சித்த சுத்திக்கு நல்ல உபாயமாகும். அப்புறம் சுவாசபந்தம், தியானம் எல்லாம் வைத்துக் கொள்ளலாம். முடிவிலே, ஒரு கழக்கோடி எப்படி எந்த அழுக்கிலும் பட்டுக் கொள்ளாமல் கிறுகிறு என்று உருளுகிறதோ – அந்தக் கழக்கோடி மேலே நாம் கொஞ்சம் விபூதியைப் பூசினால் அதைக்கூட உதிர்த்துவிட்டு ஒடும் – அப்படி எந்த துன்பத்திலும் ஒட்டாமல் பரமாத்மாவை நோக்கி ஒடி அவரைச் சேர்ந்து விடுவோம். இந்த சேர்க்கை தான் யோகம் என்பது. அதுதான் நம் மூலமான நிலை. அதுவேதான் முடிவான நிலையும். நடுவாந்திரத்தில் நாம் எப்படியோ மாறிபோயிருக்கிறோம். அதனால் அந்த நிலை இப்போது நமக்குப் புரியவில்லை. நமக்குப் புரிகிற இடத்திலிருந்து அந்த நிலைக்குப் போக வேண்டுமானால் கர்மத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்.

Exit mobile version