Sage of Kanchi

மன்னார்குடிப் பெரியவா by Mahaperiyava

 

RARE PHOTO: This picture, of the inauguration of the Advaitha Sabha in 1895, has a galaxy of Sanskrit stalwarts.1) Mahamahopadhyaya Brahmasri Raju Sastrigal,2) Mahamahopadhyaya Brahmasri Balakrishna Sastrigal,3)Mahamahopadhyaya Brahmasri Harihara Sastrigal,4) Mimamsa Brahmasri Kuppuswami Sastrigal,5) Brahmasri Mahalinga Sastrigal,6) Brahmasri Nilakanta Dikshitendral,7) Brahmasri Narayana Dikshitendral,8) Brahmasri Sundara Vajapayee,9) Sir A. Seshayya Sastrigal, K.C.I.E, 10) Ayyaswami Sastrigal, 11) V. Krishna Iyer, 12) S. Vaidhyanatha Iyer, 13) Sambasiva Iyer, 14) S. Appu Sastrigal and 15) Rayalu Kuppuswami Iyer. Presiding over the meeting is Paramaguru Sri Chandrasekarendra Saraswathi and the picture on the dais is that of Adi Sankara.

Above photo courtesy: The Hindu – (http://www.hindu.com/fr/2009/06/19/stories/2009061951380400.htm)

The following paragraphs are Mahaperiyava’s own words from Deivathin Kural Vol 5.

கொஞ்சம் வேடிக்கை கலந்த மாதிரி இந்த விஷயத்தைப் பற்றி ஒரு பெரியவர் ச்லோகம் பண்ணியிருக்கிறார். ‘பெரியவர்’ என்றேன். அவரைப் ‘பெரியவா(ள்)’ என்றே தான், பெயரைச் சொல்லாமல், மரியாதையாகக் குறிப்பிடுவது வழக்கம். என் மாதிரி ஒரு மடாதிபதியாக இருப்பவரைப் ‘பெரியவா’ என்பதில் விசேஷமில்லை. ஸ்வயமான யோக்யாத இல்லாவிட்டாலுங்கூட, ஸ்தானத்தினாலேயே எங்களுக்குப் ‘பெரியவர்’ பட்டம் கிடைத்துவிடும். நான் சொல்கிற பெரியவர் மடாதிபதி இல்லை. அதற்கடுத்த படியாக லோக கௌரவத்தைத் தன்னுடைய ஆச்ரமத்தினாலேயே ஸம்பாதித்துவிடுகிற (மடாதிபதியாக இல்லாத) ஸந்நியாஸிகூட இல்லை. க்ருஹஸ்தராகவே வாழ்க்கை நடத்தியவர். ஆனால் “குலபதி” என்று புகழக்கூடிய அளவுக்கு ஏராளமான சிஷ்யர்களுக்கு குருகுலம் நடத்திப் பல மஹாவித்வான்களை உருவாக்கிய மஹா மஹோபாத்யாயராக இருந்தவர். ஸந்நியாஸிகளுங்கூட வந்து பாடம் கேட்டுக்கொண்டு போகும்படியான அப்பேர்ப்பட்ட பாண்டியத்தோடு கூடியிருந்தவர். மஹா பண்டிதர் என்பது மட்டும் அவர் பெருமையல்ல. உசந்த குணவானாகவும் இருந்தார். சிவபக்தியில் சிறந்தவர். பரம ஆசார அநுஷ்டானத்தோடுகூட ரொம்பவும் சீலராக வாழ்ந்த பெருமையும் அவருக்கு உண்டு. ஞானம், சீலம் இரண்டிலும் பெரியவராக இருந்த அவரைத்தான் ‘பெரியவாள்’ என்றே லோகம் சொல்லிற்று. அடையாளம் தெரிவதற்காக, அவர் வாழ்ந்துவந்த ஊரின் பெயரைச் சேர்த்து “மன்னார்குடிப் பெரியவாள்” என்று சொல்வார்கள். உயர்ந்த அறிவு, சிறந்த ஒழுக்கம் இரண்டும் கூடிய அவர் 19-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் வரை ஸுமார் தொண்ணூறு வயசு ஜீவ்யவந்தராக இருந்து ‘ஞான-சீல-வயோ வ்ருத்தர்’ என்கிற புகழ்ச் சொல்லுக்கு முற்றிலும் உரியவராக இருந்தார். மஹானாகிய அப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் வந்த அவருடைய சர்மன்* த்யாகரஜர் என்பது. அவர் யாகங்கள் செய்ததால் ‘த்யாகராஜ மகி’ என்று தம்முடைய நூல்களில் தம்மைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பார். ‘மகம்’ என்றால் யாகம். சின்ன வயசிஸில் அவரை வீட்டிலே பெரியவர்கள் கூப்பிட்ட பேர் ராஜு. அதனால் ராஜு சாஸ்திரிகள் என்றும் சொல்வதுண்டு. ஆனால் பேச்சு வழக்கில் ‘மன்னார்குடிப் பெரியவா’ தான். ஊர் உலகமெல்லாம் பெரியவா என்று அழைத்தாலும் ரொம்பவும் அடக்கத்தோடு எளிமையாக இருந்தவரவர். அவருடைய குருமார்களில் கோபாலாசாரியார் என்பவர் ஒருவர். பிற்காலத்திலே இந்த கோபாலாசாரியாரின் புத்திரர் மன்னார்குடிப் பெரியவாளிடம் படித்த மாணவர்களில் ஒருவரானார். இவர் பெரியவாளைவிட வயஸில் சிறியவர் அதோடு சிஷ்யர். அப்படியிருந்தும், குரு புத்ரனுக்கு மரியாதை காட்டவேண்டும் என்ற வழக்கை அநுஸரித்து இவர் வகுப்புக்கு வரும்போது இவருக்கு குருவான மன்னார்குடிப் பெரியவாளே எழுந்திருந்து நிற்பாராம்! பக்தி ச்ரத்தை, ஆசாரம், ஸத்குணங்கள், அபாரமான வித்வத் இத்தனையும் பெற்று, ஸந்நியாஸிகளுக்கும் பாடம் சொன்னவரானாலும் அவர் கடைசி மட்டும் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளவில்லை. “நமக்கு ஏது அவ்வளவு யோக்யதை?” என்றே சொல்வாராம். அத்தனை அடக்க ஸம்பத்து!

அவருக்கு மஹாமஹோபாத்யாய பட்டம் சூட்டியதிலேயே இப்படி (அவரது அடக்க குணத்தைக் காட்டுவதாக) ஒரு விஷயம் உண்டு. (1887-ல்) விக்டோரியா பட்டமேறிய கோல்டன் ஜூபிலி கொண்டாடியபோது, இந்தியாவின் பழைய வழக்கத்தை அநுஸரித்து இனிமேல் வெள்ளைக்கார ராஜாங்கமும் பண்டிதோத்தமர்களுக்கு ‘மஹா மஹோ பாத்யாய’பட்டம் கொடுக்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணினார்கள். அதன் பிரகாரம் முதல் வருஷமே வடக்கத்தி வித்வான் ஒருவருக்கும், தெற்கத்தி வித்வான் ஒருவருக்கும் டைட்டில் தருவது என்று தேர்ந்தெடுத்தபோது அவர்களில் ஒருவராக இருந்த தெற்கத்திக்காரர் நம்முடைய மன்னார்குடிப் பெரியவாள்தான். ஆனாலும் அவருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டபோது, ‘பூர்வ காலத்தில் மஹாபெரிய வித்வான்களுக்கே கொடுத்து வந்த இந்தப் பட்டம் எனக்கா?அவ்வளவு யோக்யதை இல்லவே இல்லை’ என்று சொல்லிச் சும்மா இருந்துவிட்டாராம். பட்டம் வாங்கிக்கொள்ள அவர் டில்லி தர்பாருக்குப் போகவேயில்லை! விஷயத்தை மறந்துவிட்டுத் தம்பாட்டுக்குப் பாடம் சொல்வது, சிவ பூஜை பண்ணுவது என்று இருந்துகொண்டிருந்தார். ராஜாங்கத்தில் இவருக்காகக் காத்துக் காத்துக் பார்த்தார்கள். டில்லிக்குப் போகாவிட்டாலும் கிட்டத்தில் இருக்கிற தஞ்சாவூருக்காவது போய் கலெக்டரிடமிருந்து டைட்டிலை ராஜமரியாதையோடு பெறுவாரா என்று காத்துப் பார்த்தார்கள். விநயப் ஸம்பன்னரான இவருக்கா, அந்த எண்ணமேயில்லை!அப்புறம் கலெக்டர் அந்தப் பெரிய பட்டத்துக்கான ஸன்னதுகளை அவருடைய வீட்டுக்கே அனுப்பி வைத்தபோதுதான் மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டார்.

வித்யை இருந்தால் தலைக்கனமும் இருக்கத்தான் வேண்டும் என்றில்லாமல் நேர் வித்யாஸமாக இருந்தார். வித்யாரம்பத்திலேயே விநாயகரை வந்தனம் செய்வதாலும், எந்த சாஸ்த்ரமாயிருந்தாலும் அதற்கான புஸ்தகத் தொடக்கத்திலேயே பிள்ளையார் ஸ்துதிக்கப்படுவதாலும் உண்மையான வித்வானொருவன் எப்படியிருக்கவேண்டும் என்று காட்டிய அந்தப் பெரியவரைப் பற்றிச் சொல்வதெல்லாமும் விக்நேச்வர ப்ரீதிதான். நாம் எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு எங்கோ போய்விட்டதாக ஆகாது.

அந்தப் பெரியவர் பண்ணியிருக்கும் க்ரந்தங்களில் ‘ந்யாயேந்து சேகரம்’ என்பது ஒன்று. அது அத்வைத வேதாந்தம், தர்க்க சாஸ்த்ரம் ஆகிய இரண்டும் சேர்ந்த புஸ்தகம். தர்க்க சாஸ்த்ரம் என்று பொதுவாகச் சொல்வதற்கு ‘ந்யாய சாஸ்த்ரம்’ என்றே பெயர். அதனால்தான் அந்த சாஸ்த்ரத்தை ஸம்பந்தப்படுத்தி எழுதப்பட்ட இந்த நூலுக்கு ‘ந்யாயேந்து சேகரம்’ என்று பேர்.

‘ந்யாய பாஸ்கரம்’ என்று ஒரு புஸ்தகம் இருக்கிறது. அது அனந்தார்யர் என்பவர் எழுதியது. அத்வைத வேதாந்த க்ரந்தங்கள் சிலவற்றில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தர்க்க வாதங்கள் சரியானவையில்லை என்று கண்டனம் செய்து தர்க்க ரீதியாக எழுதப்பட்ட புஸ்தகமே ‘ந்யாய பாஸ்கரம்’. அதில் சொல்லியிருக்கும் வாதங்கள்தான் சரியில்லை என்றும், அத்வைத க்ரந்தங்களின் வாதங்கள் சரியானவையே என்றும் நன்றாக அலசி மன்னார்குடிப் பெரியவர் எழுதிய மறுப்பு நூல்தான் ‘ந்யாயேந்து சேகரம்’. ந்யாய சாஸ்திரத்தில் தம்முடைய புஸ்தகம் ஸ¨ர்யன் மாதிரி ப்ரகாசிப்பது என்று பொருள்பட அனந்தார்யர் ‘ந்யாய பாஸ்கரம்’ என்று பெயர் வைத்தார். ஸ¨ர்ய.ன் அஸ்தமித்தபின் குளுகுளுவென்று நிலாவைக் கொடுத்துத் தாபசாந்தி செய்வது சந்திரன். சந்திரனுக்கு இந்து என்றும் பெயர். ந்யாய பாஸ்கரத்தின் வாதங்களை அஸ்தமிக்கப் பண்ணி ஸஹ்ருதயர்கள் மனஸுக்குச் சந்திரிகை மாதிரி ஜிலுஜிலுவென்றிருப்பது தம்முடைய மறுப்பு நூல் என்று காட்டும் விதத்தில் நம்முடைய பெரியவர் தம் புஸ்தகத்துக்குப் பெயர் வைக்க எண்ணினார். ஆகையால் இதற்கு அவர் ‘ந்யாயேந்து’ என்று பேர் வைத்திருந்தாலே போதும். ஆனால் அடக்க குணமுள்ள அவர் தாம் ஸ்வயமாக இப்படி ஒரு பெரிய நூல் எழுதியதாக நினைக்காமல் ஈச்வர ப்ரஸாதமாகவே எழுதியதாகத்தான் நினைத்தார். அதனால் தாம் வைக்கும் பேர் ஈச்வரனையும் ஞாபகப்படுத்துவதாக இருக்க வேண்டுமென்று நினைத்தார். சந்திரன், சிவன் இருவரையுமே ஞாபகப்படுத்துவதாக ‘சந்திர சேகர’ என்ற பெயர் இருக்கிறதல்லவா? இதையே ‘இந்து சேகர’ என்றும் சொல்வார்கள். அதனால்தான் “ந்யாய இந்து சேகரம்”, “ந்யாயேந்து சேகரம்” என்று தம்முடைய புஸ்தகத்துக்குப் பெயர் வைத்துவிட்டார். தலையாக, உச்சியாக விளங்குவது ‘சேகரம்’. அத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டி அந்த, ஸம்பிரதாயப் புஸ்தகங்களில் கூறியுள்ள வாதங்கள் தர்க்க சாஸ்த்ர ரீதியாக ஸரியானவையே என்று அழுத்தமாக நிரூபிக்கும் தலைசிறந்த நூலாக ‘ந்யாயேந்து சேகரம்’ விளங்குகிறது.

கும்பகோணத்தில் நமது மடத்துப் பரம குரு ஸ்வாமிகள் அத்வைதப் பிரசாரத்துக்காக அத்வைத ஸபா என்று ஆரம்பித்துவைத்து*, அது நம்முடைய ஸித்தாந்தத்துக்காக நல்ல ஸேவை செய்துவருகிறது. அதில் வருஷா வருஷம் நடத்தும் பரீக்ஷைகளில் ‘ந்யாயேந்து சேகரம்’ குறித்தும் ஒரு பரீக்ஷை இருக்கிறது. இதில் சிறப்பாகத் தேறி முதல் பரிசு வாங்குவதுதான் ஸபையின் தலைசிறந்த ஸம்மானமாகக் கருதப்படுகிறது என்பதிலிருந்து நூலின் சிறப்பு புரியும். (அத்வைத ஸபாவின் ஆரம்ப வருஷங்களில் நம்முடைய சாஸ்த்ரிகள் அதில் முக்யமான அங்கம் வஹித்திருக்கிறார்.)

* ஸ்ரீ சரணர்களுடைய குருவின் குருவான ஆறாவது சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் 1984-ல் அத்வைத ஸபையைத் தொடங்கினார்.

Exit mobile version