This dharma was told to me by a Sastrigal in Chennai, who is a staunch Periyava devotee. But I didn’t know that a portion of a sambavanai should go to Sivan Kovil kainkaryam. Although I dont see any Sastrigal saying no to such incidents their expectation on sambavanai is beyond words. Hope they all remember what Periyava said and follow.
(Source – Twitter feed of Anbezhil)
காஞ்சிப் பெரியவரைத் தரிசிக்கத் திருவண்ணாமலையில் இருந்து ஒரு புரோகிதர் மாதம் தவறாமல் வந்து விடுவார். ஒருமுறை அவர் பெரியவரைத் தரிசிக்க வரிசையில் காத்து நின்றார்.
அப்போது பெரியவர் தன் சீடரை அழைத்து, “அந்த திருவண்ணாமலை புரோகிதரை வெளியே போகச் சொல்” என்றார். சீடருக்குக் காரணம் புரியவில்லை. அவர் தகவலை புரோகிதரிடம் சொல்ல அதிர்ந்து போன அவர், தயங்கியபடியே வெளியேறி, ஆனால் மடத்து வாசலில் நின்று கொண்டே இருந்தார்.
விஷயம் பெரியவர் கவனத்துக்கு வரவே சீடரை அழைத்து, “அவன் ஊரிலிருந்து கிளம்பும் போது, ஒரு வீட்டில் இருந்து வந்தவர்கள், தங்கள் வீட்டில் ஒரு இறப்பு நிகழ்ந்து விட்டதாகக் கூறினர். காரியங்கள் செய்வதற்கு அழைத்தனர். அவனோ அதைச் செய்யாமல் மறுத்து விட்டு மடத்துக்குப் போவதாகச் சொல்லி வந்து விட்டான். அவனை உடனே ஊருக்குப் போய் அந்தக் காரியங்களை உரிய நாட்களுக்குள் முடித்துக் கொடுத்து, ‘சுபநிகழ்வு’ முடிந்த பின் தரிசனத்துக்கு வர வேண்டும் என சொல்லி விடு,” என்றார்.
இதைச் சீடர் அவரிடம் போய்ச் சொல்லவே, ஊரில் நடந்த விஷயம் இந்த மகானுக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியப் பட்டார் புரோகிதர்.
பெரியவரின் உத்தரவுப்படி ஊருக்குப் போய், நடந்ததை அவர்களிடம் சொல்லி, அந்தக் குடும்பத்திற்கு தேவையானதை செய்து முடித்த பிறகு ஒருநாள் மடத்துக்கு வந்தார். அவரை அழைத்த பெரியவர், “சுப காரியங்களைக் கூட நீ மறுக்கலாம். ஆனால் இது போன்ற ‘துக்க நிகழ்வுகளுக்கு வரமாட்டேன்’, என, புரோகிதரான, வைதீகனான நீ, மறுக்கக் கூடாது. மேலும் இந்நிகழ்வுகளுக்கு சம்பாவனையும் (பணம்) கேட்கக் கூடாது. அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி வாங்கியதிலும் ஒரு பகுதியை சிவன் கோவிலில் தீபம் ஏற்றும் செலவுக்குக் கொடுக்க வேண்டும். அப்போது தான் நீ படித்த வேதங்களுக்கு மரியாதை,” என அறிவுரை கூறி பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
இதைக் கேள்வியுற்ற மற்ற புரோகிதர்களும், வைதீகர்களும், ‘இனி துக்க நிகழ்வுகளை மறுக்கமாட்டோம்’ என்று சங்கல்பித்துக் கொண்டார்களாம்!
