Sage of Kanchi

தீபாவளியும் ஶ்ரீகாமாக்ஷியும்

ஶ்ரீமத் ஸச்சிதாநந்த பரிபூர்ண ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிண்யை ஶ்ரீகாமாக்ஷ்யை நம:

அனேக கோடி ப்ரஹ்மாண்ட நாயிகையான ஶ்ரீபராசக்தியை முக்யமாக உபாஸிக்க வேண்டிய தினங்கள் அமாவாஸ்யை, பௌர்ணமி, க்ருஷ்ண பக்ஷத்து அஷ்டமி, நவமி, சதுர்தசி முதலிய தினங்களாம்!! தீபாவளி பண்டிகையானது ஒவ்வொரு வருஷமும் சதுர்தசி அமாவஸ்யை தினங்களிலேயே வருவது, அத்தகைய மஹத்தான புண்ய தினத்தில் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான ஶ்ரீஅம்பாளை அவச்யம் உபாஸிக்கவேண்டிய காலத்தைக் குறிக்கிறது.

நரகாஸுரன் எனும் க்ரூரமான ராக்ஷஸனை ஶ்ரீக்ருஷ்ண பரமாத்மா பகவதி ஶ்ரீஸத்யபாமா பரமேச்வரி ஸஹாயத்துடன் வதைத்த மஹாபுண்ய தினம் இந்த தீபாவளியாம். நரகாஸுரன் ஆதியில் ஶ்ரீஜகதம்பாளான ஶ்ரீகாமாக்யா பரதேவதையின் பக்தனாக விளங்கியதைக் காளிகா புராணம் கூறும்.

ஜகத்திற்கு பரம கஷ்டங்களை உற்பத்தி பண்ணக்கூடியவனாக இருந்த போதும், பகவதி ஶ்ரீலலிதாம்பாளான ஶ்ரீகாமாக்யா தேவியின் பக்தனாக விளங்கியதால், அவனை  அழிப்பதற்கான வழியை த்ரிமூர்த்திகளாலும் கண்டுபிடிக்க இயலவில்லை.

பின்னர் பகவான் ஶ்ரீக்ருஷ்ணர், ஆத்யா தேவியும் ஸாக்ஷாத் பராபட்டாரிகையும், கோடி ப்ரஹ்மாண்டங்களுக்கு ஈச்வரியாகவும் விளங்கும் ஶ்ரீலலிதா பரமேச்வரியான காமாக்ஷியை, காமாக்யா காளி எனும் வடிவில் உபாஸித்து, ஶ்ரீகாமேச்வரியான பராசக்தியின் க்ருபா கடாக்ஷத்துடன் நரகாஸுரனைக் கொன்று உலகிற்கு மங்களத்தை உண்டு பண்ணினார் என்பது தேவீ உப புராணங்களில் முக்யமான உப புராணமான ஶ்ரீகாளிகா புராணம் கூறும் சரித்ரம்.

முக்யமாக தீபாவளியன்று ஶ்ரீதக்ஷிணகாலிகா பரமேச்வரியை ஶ்ரீவித்யோபாஸகர்கள் மற்றும் ஶ்ரீகாலிகா உபாஸகர்கள் உபாஸிப்பர்.

உபாஸனையில் இல்லாத பக்தர்களும் கூட ஶ்ரீமாதாவான லலிதாம்பாளை இன்று வழிபடுவது அம்பாளின் பூர்ணமான க்ருபா கடாக்ஷத்திற்கு வழிவகுக்கும்.

மங்களமான தீபாவளியன்று ஶ்ரீமங்களாம்பாளான ஶ்ரீகாமாக்ஷி மஹாபட்டாரிகையை வணங்கி ஸர்வ மங்களங்களையும் அடைவோம்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

 

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Exit mobile version