ஒரு ஸமயம் ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா என்ற வித்வான் பிக்ஷாவந்தன சமயம் தன் சிஷ்யர்களுடன் காஞ்சிபுரம் வந்தார். இவர்களில் போட்டோ கலைநிபுணர் கிருஷ்ணன் என்பவர் ஒரு புதிய வெளிநாட்டு காமிரா வாங்கி வந்து பெரியவாளிடம் அனுக்கிரஹம் பெற்று, அந்த காமிராவில் முதலில் பெரியவர்களைப் போட்டோ எடுக்க வேண்டும் என்று விஞ்ஞாபனம் செய்தார். வழக்கம்போல பெரியவாள் மௌனம்.
பூஜை, பிக்ஷை முடிந்த பிறகு, ஸ்ரீ பெரியவாள் ஸ்ரீ ஸோமதேவ சர்மாவை கூப்பிட்டு மாடிக்கு வரச்சொல்லி, நமது ஸ்ரீமடம் கோபுரம் முன் நின்று போட்டோ கலைஞரை கூப்பிட்டு தன்னையும், ஸ்ரீமடம், ஏகாம்பரேசுவரர் கோயில் கோபுரம் மூன்றும் ஒரே ஃப்ரேயில் வருமாறு ஃபோட்டோ எடுக்கும்படி சொன்னார். சுமார் 20 நிமிடம் பொறுமையாக நின்றிருந்தார். ஃபோட்டோ கலைஞர் எவ்வளவு முயன்றும் உத்தரவானதன்படி செய்ய முடியாமல் (ஆங்கிள் வசதியாகக் கிடைக்கவில்லை) வேர்த்து விறுவிறுத்து இயலாமையுடன் ஸ்ரீயவர்களைப் பார்த்தார்.
உடனே, பெரியவாள் சற்று நகர்ந்து, ஓர் அடி தள்ளி நின்று, ‘இப்போது எடு; சரியாக வரும்’ என்றார். என்னே ஆச்சர்யம்! பெரியவாள், ஸ்ரீமடம் கோபுரம், ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரம் மூன்றுமே மிக அழகாக ஒரே படத்தில் எடுக்கப்பட்டது.
ஃபோட்டோ, ஆங்கிள், லைட்டிங் போன்ற கலைகளையும் கூட மிக்க நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார் என்பதோடு மட்டுமல்லாமல், அறுபத்து எட்டாவது பீடாதிபதியாய் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் ஸமஸ்த்தானத்தை அலங்கரித்துக் கொண்டுப்பதும் தானே, ஆதி ஸங்கரரும் தானே, ஏகாம்பரேஸ்வரரும் தானே என்று எங்களுக்கெல்லாம் உபதேசம் கொடுத்தார்கள் என்றே எண்ணுகிறேன்.
– எம். எஸ். அருணாச்சலம்.
