Thanks to Sri Suri Murthy for sharing this in FB.
தெய்வத்தின் குரல் – எனது அனுபவங்கள்.
Courtesy:Shri என். ராமசாமி
இந்திய அரசில் பணிக்குச் சேர்ந்து வருடங்கள் 33 ஓடினாலும் இன்றும் அந்த சம்பவத்தை நினைத்தால் மெய் சிலிர்க்கும். 1981 வருடம் மே அல்லது ஜூன் மாதம் என்று நினைக்கிறேன். எனது சிறிய தகப்பனார் அவரது சீடர்களுடன் காசியாத்திரை புறப்பட்டார்கள். எனக்கு அப்போது வயது 23. கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்காக காத்திருந்த காலம். எனது சிறிய தகப்பனாருடன் நானும் காசியாத்திரையில் கலந்து கொண்டேன். எப்பொழுது யாத்திரை புறப்பட்டாலும், முதலில் பெரியவாளை தரிசித்துவிட்டு ஆசி வாங்கியபின்னரே யாத்திரை புறப்படுவது என்பதை மரபாகவே வைத்திருந்தார் எனது சிறிய தகப்பனார்.
யாத்திரைக்கான திட்டங்களை அவருடன் சேர்ந்து நானும் தயாரித்திருந்தேன். தூத்துக்குடியிலிருந்து பேருந்து ஒன்றில் சுமார் 45 யாத்திரிகர்களுடன் புறப்பட்ட நாங்கள் யாத்திரையைத் துவங்கும் முன்பு பெரியவாளை தரிசித்து ஆசி வாங்க முற்பட்டோம். பெரியவாளின் பாரதயாத்திரை கர்நாடகாவை ஒட்டிய மராட்டிய மாநிலத்தில் சென்று கொண்டிருந்த்து. பண்டர்பூரை நெருங்கிக் கொண்டிருந்தார் என்று எண்ணுகிறேன். மிகவும் கஷ்டப்பட்டு கொட்டும் மழைக்கிடையில் அவர் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தோம். அந்த கிராமத்தின் பெயர் உபரி என்று நினைக்கிறேன். ஒரு குடிசையில் போடப்பட்ட திரைக்கு அப்பால் பெரியவாள் இருப்பதை தெரிந்து கொண்டோம்.
இரவு முழுவதும் கண் விழித்து அவரது தரிசனத்திற்காக காத்திருந்தோம். கதிரவன் வரும் முன்பே குடிசையை விட்டு அவர் வெளியே வந்தபோது எங்களுக்கு தெரிந்த பிரகாசம்…
சூரியப்பிராகாசராக ஜொலித்தார். எங்களுடன் வந்த அனைத்து பக்தர்களும் அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்து விட்டார்கள். எங்களனைவரையும் அவர் ஏற இறங்கப் பார்த்த போது எங்களின் உடலில் இரவில் ஏற்பட்ட களைப்புகள் எல்லாம் மறைந்து புதிய தெம்பு வந்த்து.
கருணை தெய்வம் காலாற நடந்து அருகில் ஓடிக் கொண்டிருந்த ஒரு ஆற்றை நோக்கி நடந்தார். அபிராமி அந்தாதி பாடலில் ஒரு குறிப்பிட்ட பாடலை பக்தர்கள் பாடிய போது அதை மீண்டும் மீண்டும் பாடச் சொன்னார்கள். அந்தபாடல் “ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை” அதை ஏன் பாடச் சொன்னார்கள் என்று இன்றளவும் பதில் கிடைக்கவில்லை.
நடை பயணத்தை தொடர்ந்த பெரியவர் ரிக்க்ஷாவில் சாய்ந்து கொண்டு எங்களை பார்த்தபடியே அபிராமி அந்தாதி பாடலை கேட்டுக் கொண்டே வந்தார். நாங்கள் குதுகூலத்துடன் அவருடன் சுமார் நான்கு கிலோ மீட்டராவது நடந்திருப்போம். அருகில் உள்ள ஆற்றில் இறங்கி குளித்து விட்டு நடையைத் தொடர்ந்தார். மேலும் ஐந்தாறு கிலோமீட்டர் தூரம் நகர்ந்தன. அவர் அந்த சிறிய கிராமத்திற்குள் சென்று ஒரு பாழடைந்த சிறிய சிவன் கோவிலை அடைந்து கையில் இருந்த ஜலத்தை சிவன் மற்றும் விக்ரஹங்களின் மேல் தெளித்து தியானத்தில் அமர்ந்தார். அவரின் அருமை தெரியாத அந்த ஊர் மக்கள் வேடிக்கை பார்ப்பது போல பார்த்தார்கள்.
சில மணித்துளிகளுக்குப்பின் என் சிறிய தகப்பனாரை (புலவர் சங்கரன்) அழைத்து நலம் விசாரித்துவிட்டு யாத்திரை பற்றிய விபரங்களைக் கேட்டார். விளக்கமாக எடுத்துக் கூறியவுடன் சற்று யோசித்து விட்டு “யாத்திரைக்கான திட்டத்தை யார் தயார் பண்ணினார்கள்” என்று கேட்டார். அவரும் “நாங்கள் தான்” என்று சொன்னோம். அதாவது பெரியவாளைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு ஆந்திரா வழியாக பூரீ, காசி, கயா, பத்ரிநாத், கேதார்நாத் தரிசித்து விட்டு அப்படியே குஜராத் சென்று துவாரகா, சோமநாத் சென்று திரும்பி நாசிக் பஞ்சவடி பார்த்து மூகாம்பிகை தரிசித்து மீண்டும் ஊர் திரும்புவதாக உத்தேசம். ஆனால் பெரியவாளுக்கு அதில் சற்று திருப்தி இல்லாததால் யாத்திரை திட்டத்தை மாற்றினார். அதாவது மூகாம்பிகை, நாசிக், பஞ்சவடி பார்த்து இறுதியாக ஆந்திரா நுழைந்து ஊர் திரும்ப உத்திரவிட்டார். ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த்தால் பெரியவா உத்திரவுபடி திட்டத்தை மாற்றியமைக்க்க எனக்கு தயக்கமாக இருந்த்து.
திட்டம் மாற்றியமைக்கப்பட்டதற்கான காரணத்தை உடனே சொன்னார். “நீங்கள் செல்வது பாரத யாத்திரை. பாரதம் கோவில் போன்றது. அதை பிரதக்ஷணமாகத்தான் வரவேண்டும். அப்பிரதக்ஷணமாக வரக்கூடாது” என்றார். அவர் கூறியபடியே திட்டத்தை ஒரு மனதாக தொடர முடிவு செய்தோம். எங்களுடன் வந்த அனைத்து யாத்திரிகர்களையும் ஒவ்வொருவராக கேட்டு ஆசி வழங்கினார். இறுதியாக எனது சிறிய தகப்பனார் என்னை அறிமுகம் செய்து வைத்து,
“இவன் எனது சகோதரர் புத்திரன், படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறான் ஆசி வழங்க வேண்டும்” என்று வேண்டினார். நான் பெரியவரின் பாதாரவிந்தங்களில் விழுந்து நமஸ்கரித்தேன். எழுந்தவுடன் என்னிடம் “என்ன படித்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
நானும் “பி.எஸ்ஸி” என்று சொன்னேன்.
“என்ன பாடம்?” என்று கேட்டார்.
“கெமிஸ்ட்ரி” (இரசாயணம்) என்று பதில் கூறினேன்.
“தூத்துக்குடியில் பிஎஸ்ஸி கெமிஸ்டிரி படித்திருக்கிறாய். உப்பில் ஏதாவது பண்ணு” என்று கூறினார்.
ஏற்கனவே தூத்துக்குடியில் உள்ள பல இடங்களில் வேலை தேடிச் சென்று நேர்முகத் தேர்வு வரை சென்று வாய்ப்பை இழந்த விரக்தியில் இருந்த போது பெரியவாளும் இப்படி சொல்கிறாரே என்று வருத்தப்பட்டேன். இருப்பினும் அவர் வார்த்தைகளை ஒன்றும் பெரியதாக அப்போது எடுத்துக் கொள்ளவில்லை.
அனைவரும் ஆசி பெற்று யாத்திரையைத் துவங்கினோம். திருத்தி யமைக்கப்பட்ட திட்டபடி யாத்திரை முடியும் தருவாய் வந்த்து. ஆந்திராவில் நுழைந்து தமிழக எல்லையை அடைந்தோம். சென்னை – திருப்பதி செக் போஸ்டில் எங்கள் பேருந்து வந்த போது யாத்திரிகர் வரிக்காக நிறுத்தப்பட்டது. செலுத்த வேண்டிய யாத்திரை வரியை அறிந்த போது ஆடிப்போனாம். தலா ஒருவருக்கு ரூபாய் 1500 வரை செலுத்த வேண்டும் என்றும் இல்லையேல் பேருந்து பறிமுதல் செய்யப்படும் என்று திட்டவட்டமாக செக் போஸ்ட் அலுவலர்கள் கூறிவிட்டார்கள். அதிகமான திருத்தியமைக்கப்பட்ட வரி அமலுக்கு வந்து ஒன்றரை மாதங்களாவதாக கூறினார்கள். செய்வதறியாது திகைத்தோம். யாத்திரிகள் அனைவரும் பாமரர்கள். அதுவும் யாத்திரை முடியும் தருவாயில் அவர்களிடம் இருந்த அனைத்து பணங்களும் செலவாகி விட்டது. எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் எங்களை விடுவதாக இல்லை. அனைவரும் செக் போஸ்ட் அருகில் அமர்ந்து அபிராமி அந்தாதி பாடலை பாட ஆரம்பித்தோம். அதுவும் “ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை” பாடலை பெரியவாளை நினைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப பாடினோம். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்தப்பாடல் அதிக ஒலியுடன் செக் போஸ்ட் பகுதியில் ஒலித்துக் கொண்டிருந்தது. வாகனங்கள் பலவும் நிறுத்தப்பட்டு பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
என்னவாயிற்றோ தெரியவில்லை. அந்த செக் போஸ்டின் பணியாள் ஒருவர் வந்து எங்களிடம் பழைய யாத்திரிகர் வரியை உடனே செலுத்திவிட்டுச் செல்ல வேண்டிக் கொண்டார். என்ன நடந்தது என்பதை யாராலும் யூகிக்க முடியவில்லை. பழைய யாத்திரிகர் வரி என்பது நபர் ஒருவருக்கு நூறுரூபாய்க்கும் கீழ். உடனடியாக செக் போஸ்டில் யாத்ரிகர் வரியை செலுத்திவிட்டு கிளம்பும் முன் அங்குள்ள ஒருவரிடம் “ஏன் இந்த திடீர் மாற்றம்?” என்று கேட்டோம். அதற்கு அவர் “இப்போது தான் தபால் வந்தது. அதில் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் அரசால் அதிகம் ஏற்றப்பட்ட யாத்திரிகர் வரியினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து இடைக்காலத் தடை பெற்றிருப்பதாகக் கூறினார்.
எங்கள் அனைவருக்கும் விழிகளில் நீர் சொரிந்தது. யாத்திரையின் துவக்கத்தில் பெரியவரிடம் ஆசி பெற்ற போது யாத்திரை திட்டத்தினை மாற்றியமைத்த்தின் உள் நோக்கம் இதற்காகத்தானோ என்று அப்போது புரிந்தது. ஒரு வேளை எங்களின் முந்தைய திட்டத்தின் படி யாத்திரையை மேற்கொண்டிருந்தால் யாத்திரை துவக்கத்திலேயே ஆந்திர மாநிலத்திற்குள் நுழைந்திருப்போம். அனைத்து பணத்தையும் யாத்திரிகர் வரிக்காகச் செலுத்திவிட்டு யாத்திரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊர் திரும்பியிருப்போம்.
யாத்திரையை முடித்து விட்டு ஊர் திரும்பிய போதுதான் மற்றொரு அதிசயத் தக்க சம்பவம் என் வாழ்வில் நிகழ்ந்தது. வீட்டிற்குள் நுழைந்த போது ஒரு தபால் அட்டை தூசிகளுக்கு மத்தியில் கிடந்த்து. எடுத்துப் பார்த்தேன், அதிர்ந்து போனேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து இந்திய அரசு பணியில் உள்ள உப்பு ஆய்வாளர் பணிக்கான நேர்முக அழைப்பு தான் அது. அன்று அவரிடம் ஆசி பெறும் போது, தூத்துக்குடியில் பிஎஸ்ஸி கெமிஸ்டிரி படித்திருக்கிறாய். உப்பில் ஏதாவது பண்ணு என்று கூறிய அந்த நடமாடும் தெய்வத்தின் குரல் காதில் ஒலித்தது. வேலை எனக்கு கிடைத்தவிட்ட மாதிரி பெரிய மகிழ்ச்சி. சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நேர்முகத் தேர்வில் கலந்து கண்டு அவர் ஆசியுடன் வேலையும் கிடைத்தது. இன்று மத்திய அரசின் உப்புத் துறையில் துணை உப்புக் கண்காணிப்பாளராக எனது பணியைத் தொடர்ந்து கொண்டு வருகிறேன்.
இத்துடன் எங்கள் யாத்திரையின் போது (1981ம் வருடம்) காஞ்சி பரமாச்சார்யாருடன் நடைபயணம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்களை இணைத்துள்ளேன். அருகில் சென்று எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சற்று தொலைவில் இருந்து எடுத்த புகைப்படங்கள் அவை. அவ்வளவாக வண்ணப்புகைப்படங்கள் வலம் வராத காலக்கட்டத்தில் பிரத்யோகமாக வண்ணச்சுருள் கொண்டு எடுக்கப்பட்டு சிங்கப்பூரில் கலர் பிராஸ்ஸிங் செய்யப்பட்ட அரிய படங்களை இங்கு வெளியிடுவதில் பெருமையும், சந்தோஷமும் அடைகிறேன்.
Courtesy:Shri என். ராமசாமி
Hate Hate Shankara Jaya Jaya Shankara
