
ஹனுமத் பஞ்சரத்னம் அப்படி ஒரு ஸ்லோகம். அதை சொல்வதற்கு ஒரு நிமிடம் தான் ஆகும். பொருளை படிக்க நான்கு நிமிடங்கள் தான் ஆகும். ஆனால் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அந்த ஸ்லோகத்தை குறித்து பேசியவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அவை 40 நிமிடங்கள் சுந்தரகாண்டத்தின் ஒரு சுருக்கம் போல அமைந்துள்ளது. கேட்டு மகிழுங்கள்.
கிஷ்கிந்தா காண்டத்தினுடைய கடைசில, “யாரு இந்த நூறு யோஜனை கடல் தாண்டறது? எப்படி லங்கைக்கு போறது? ஸீதையை யாரு பார்த்துண்டு வரப்போறா? நாம் ஸீதையை தர்சனம் பண்ணாம திரும்பவும் கிஷ்கிந்தைக்கு போனோம்னா, ஸுக்ரீவனுடைய கோவத்துக்கு ஆளாக வேண்டிருக்குமே!” அப்படீன்லாம் எல்லாரும் கவலைப்பட்டுண்டிருக்கா. அங்கதன் ரொம்ப கவலைப்பட்டு “நான் உயிரை விடப்போறேன். ப்ராயோபவேசம் பண்ண போறேன்” என்றெல்லாம் சொல்லும் போது, “யாரு எங்களுக்கு அபயம் தரப்போறா?” அப்படீன்னு கேட்கும் போது, ஜாம்பவான் சொல்றார், “இந்த காரியத்தை பண்ணக்கூடியவர் ஹனுமார் தான். நம்ப போய் அவர உத்ஸாகப்படுத்துவோம்”னு. எல்லாரும் வந்து ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்றா. ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்ணப் பண்ண அவருடைய ரூபமும் தேஜஸும் பலமும் எல்லாம் வளர்றது!
ஸ்வாமிகள் சொல்வார், “ஹனுமாரை நிறைய ஸ்தோத்ரம் பண்ணி, அவர்கிட்ட நம்ப வரங்கள் கேட்டா அவர் கொடுப்பார். இந்த ஹனுமத் பஞ்சரத்னத்தை 108 தடவை சொல்லிட்டு, அவர்கிட்ட ப்ரார்த்தனை பண்ணிக்கோங்கோ. கட்டாயம் உங்களுடைய ப்ரார்த்தனையப் பூர்த்தி பண்ணுவார்”, அப்படீன்னு சொல்லுவார். அப்படி இந்த ஹனுமத் பஞ்சரத்னத்துக்கு அபார மஹிமை.