
தற்காலத்தில், ஷோடசி, ஸ்ரீசக்ரம் முதலிய யந்திர தந்திர மந்திரங்கள், ஸ்ரீவித்யா உபாசனை, நவாவரண பூஜை, காமகலா தியானம், குண்டலினி யோகம், போன்ற தூய்மையான சாதனைகளைப் பற்றிய விவரங்கள் அனைத்துமே புத்தகங்களில் காணப்பட்டாலும், அம்பாள் பக்தி பண்ணுவதை ஒரு குருவின் இடத்தில் பணிந்து கற்க வேண்டும் என்ற அடிப்படை விதியை நாம் காலம் காலமாக பின்பற்றி வருகிறோம். ஏனென்றால் அம்பாள் பக்தி என்பது அறிவுப்பூர்வமான அளவில் நின்று விடக்கூடாது. மனமுருகி ஜகதம்பா என்று சொன்னாலே அனுக்ரஹம் கிடைத்துவிடும் என்று இருக்கும் போது, அப்படி பக்தியில் மனது உருக வழி சொல்பவர் குரு. அதைத்தான் மூக கவி, முதலிலேயே ஆர்யா சதகத்தில், மேலே குறிப்பிட்ட அம்பாளுடைய உயர் தத்துவங்களையும், இன்னும் சபரி, மாதங்கி, துர்கா, அன்னபூரணி, சாமுண்டி, வாராஹி, பாலா, ப்ரத்யங்கிரா என்ற காமாக்ஷியின் நாம ரூப பேதங்கள் எல்லாம் விளக்கிய பின்னர், பாதாரவிந்த சதகத்தை ஆரம்பிப்பதன் மூலம் நமக்குக் காண்பிக்கிறார். அம்பாளுடைய சரணம் என்பது அடியவர்களை குறிக்கும். சரணம் என்றால் திருவடி தானே! அதனால் தான் பெரியவாளை ஸ்ரீசரணாள் என்று சொல்வது. இந்த புரிதலோடு பாதாரவிந்த சதகத்தின் முதல் ஸ்லோகத்தை ஆழ்ந்து பார்ப்போம் – நெஞ்சக் கனகல் நெகிழ்ந்து உருக வழி எது? குரு பக்தி
அப்படி அடியவர்களிடத்தில் நாம் பணிவோடு வணங்கி பக்தியை கற்றோமானால், அந்த சரணம் என்னென்ன அனுக்ரஹம் செய்யும் என்பதையும் மூககவியே பாதாரவிந்த சதகம் 99வது சுலோகத்தில் சொல்கிறார் – அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்