Sage of Kanchi

ஸ்ரீ மகா சுவாமிகளின் அருங்குணங்கள் – மந்திரிரத்னம் சேஷையா சாஸ்திரிகள்

Thanks to Sri Halasya Sundaram Iyer.

“பரமாச்சாரியார் எளிமையான வாழ்க்கையை விரும்பியவர். கைராட்டையால் வீட்டில் நூற்ற கதர் நூலால் புனைந்த ஆடையையே அணிவார். ஒரு சிறிய அறையைத் தனது இருப்பிடமாக ஏற்றுக்கொண்டு எளிமையாக அதில் வாழ்ந்தவர். அவர் உப்பு சாப்பிடுவதில்லை. அதனால் அவருக்கு வியர்வையின் அவஸ்தை கிடையாது. குக்குடாசன நிலையில் ஒரே காலில் நின்று கொண்டு ஒரு மணி நேரத்திற்கு உரைநிகழ்த்தக்கூடிய அபூர்வ சக்தி படைத்தவர் அவர். யோகாசனங்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்தவர்.

மகா சுவாமிகளின் உணவு மிக எளிமையானது. பீடத்தில் அமர்ந்த நாளிலிருந்து உணவில் புளி,உப்பு,காரம் சேர்த்துக் கொண்டதே இல்லை. நெற்பொறியும் சில பழங்களும் [கிடைத்தால் மட்டுமே] பாலும்தான் அவருடைய ஆகாரம். குணத்தாலும் செயலாலும் தவறு செய்தவர்களைப் பார்க்க நேர்ந்து விட்டால் அன்று முழுவதும் உபவாசம் இருந்து விடுவார். கல்கத்தாவில் ஒருமாதம் வில்வப் பழம் மட்டுமே சாப்பிட்டு அவர் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

எப்போதும் கமண்டலம், தண்டம்,
காஷாயவஸ்திரம் இல்லாமல் இருக்கமாட்டார். பெண்கள் யாரும் அவரைத் தனிமையாகத் தரிசிக்கமுடியாது. குளிக்கப்போகும் நேரம் தவிர மற்ற வேளைகளில் தண்டம் அவருடன் இருக்கும். தூங்கும் போதும்கூட அதைப் பிடித்துக் கொள்வார். எவ்வளவு நேரம் கழித்துத் தூங்கப் போனாலும் விடியற்காலை நான்குமணிக்கே எழுந்து விடுவார். முழுமையாக ஜபத்தில் ஈடுபட்டுவிடுவார்.

வேதம், தர்ம சாஸ்திரம்,புராணம்,இதிகாசம் ஆகியவற்றை முழுமையாகக் கற்றறிந்தவர். ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு,கன்னடம்,லத்தீன் மொழிகளை நன்கு அறிந்தவர். தமிழ்மொழியில் தனிப்புலமை பெற்றவர். திருப்பாவை திருவெம்பாவை பாடல்களும், கோளறுபதிகத்தையும் தமிழ் மக்களிடையே பக்தியுடன் பரவச் செய்வதற்கு முயற்சி செய்தவர்.

நோயாளிகளுக்கு மருத்துவமனையில் விபூதிப் பிரசாதம் வழங்கவும்,சாகும் தருவாயில் உள்ளவர்களுக்கு உதவி, இறுதிகடன்களைச் செய்யவும் உதவியவர். ஒரு தடவை அவர் மடத்தில் உள்ள காரியஸ்தரிடம் கல்கத்தாவில் உள்ள ஒருவருக்கு உடனே ஐந்நூறு ரூபாய் அனுப்பி வைக்கும் படி கூறினார். பலருக்கும் அதன் காரணம் புரியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு அவரைத் தரிசிக்க வந்த எளியவர் ஒருவர் “சுவாமி! அன்று தாங்கள் அனுப்பி வைத்த ஐந்நூறு ரூபாய்தான், தந்தை இறந்ததும் இறுதிக்கடன்களைச் செய்ய உதவிற்று! என்று கூறினார்.

மகா சுவாமிகளின் கண்ணோட்டமும், எளிமையும், இரக்கசுபாவமும் இணையே இல்லாதவை

Exit mobile version