Thanks to Suresh for sharing this experience with all of us….I have no words to describe how I felt after I read the whole incident. What more proof we need that Periyava is watching over us all the time! We simply need to be aware of this and be sincere to Him – He will take care of the rest.
Periyava Sharanam!

இது நடந்து வெகு நாட்கள் ஆகின்றன. சர்க்கரை நோய் மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் காரணமாக கண்களிலே M.I எனும் பார்வை நரம்பு பாதிப்பினால் உண்டானது ஒரு பார்வை அடைப்பு.
மருத்துவரிடம் காட்ட, அவர் கண் ஆஞ்ஜியோ எடுத்துவரச் சொல்லி உத்தரவு பிறப்பித்தார்கள்.
அன்று காலையில் சங்கர நேத்திராலயா சென்று தேவையான பரிசோதனகள் செய்து கொண்டு, பார்வை பாதித்துள்ளதையும், காரண காரியத்தையுன் அறிந்து கொண்டு, ஒற்றைக் கண் பார்வையுடனாக வீடு திரும்பினேன். அன்றைய இரவிலே ஆரம்பித்து மறு நாள் இரவிலே முடித்த குருப்புகழ் இது. அது மட்டுமா? பாடலிலே கேட்டபடியான வரத்தையும் நல்கி விட்டாரே நம் குருநாதர்.
அன்றைய பதிவை இன்று அந்த குருப்புகழ் விருத்தத்தை இன்று ஒளி-ஒலியாய் பகிர்கின்ற நேரத்திலே இங்கே கீழே பதிவிடுகிறேன்.
சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.
சத்யம்… சத்யம்… சங்கர சாந்நித்யம்.
அவருடைய அவ்யாஜ கருணைக்கு சான்று இன்றும் அடியேன் இரு கண் பார்வையுடனாக ஒவ்வொரு நாளும் ஸ்மரித்துஜ் கொண்டிருக்கின்றேன்.
தகுதி இல்லாவிடினும் கூட அதனை ஏற்படுத்தி பின்பு அருட்கருணையாலே காப்பாற்றும் நம் குருநாதருக்கு இன்னும் ஏழு பிறப்பிலே தொடர் ஸ்மர்அணைச் செய்தாலும் போதாதே!
இனி அன்றைய பதிவுக்குச் செல்வோமே! சங்கரா!
————————
அவருடைய கருணையில் அவ்வப்போது அடியேனை அழகுற அந்த மாஹேசனை ஸ்மரிக்கச் செய்யும் அன்பு அம்மா Saraswathi Thyagarajan அவர்களுக்கு எந்தன் நமஸ்காரங்கள்.
நேற்று இரவு அம்மாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. “கண்ணா, திருச்சிற்றம்பலம்னு சொல்லிச் சொல்லி அந்த ஈச்வரனைப் பாடிய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பலனைத் தரும். அப்படியாக சுந்தர பெருமான் பாடிய “மீளா அடிமை…”-ன்னு ஆரம்பிச்சு எழுதப்பெற்ற பாக்கள் வலது இடது கண்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்க்குமாம். நீயும் பெரியவாளை பாடிக் கூப்பிடு. அதனைப் பாடுவோர்க்கெல்லாம் கண் சம்பத்தப் பட்ட பிரச்சனைகள் தீரட்டும் என்றார்.
விசேஷம் என்னவென்றால், அடியேன் அச்சமயம் சங்கர நேத்ராலயாவிலே உள்ளேன். அம்மாவுக்கு இது விவரம் தெரிய வாய்ப்பேயில்லை. பெரியவான்னா கருணாசமுத்ரமாச்சே. என்னைப்பாட வைத்து எனக்கு அருள்புரிய வருகிறாரா? அதோடு கூடி அனைவரையும் ரக்ஷிக்கவும் செய்ய வருகிறாரா?
நேற்றைய இரவிலே அம்மாவுக்கும் Geetha Kalyan அம்மாவுக்கும் அனுப்பிய அந்த துதியினை மேலும் மூன்று விருத்தங்களுடனாக எட்டாக இப்போது உங்களிடமும் பகிர்கின்றேன்.
சர்வம் ஸ்ரீ சந்த்ரசேகரம்!
கண் வளம் (பார்வை நலம்) பெற கண்மணியாம் கருணாகர சசிசேகர சங்கர துதி!
மீளா அடிமை அருகாய் உணர்த்தும்
உருவாய் வந்தோனே
மீளா தெமக்கு மருள்சேர் வரத்தை
இனிதாய் அளிப்பீரே
மூளாத் தீயதும் சாடா திருக்கத்
தாயாய் காத்திடவும்
தாளாத் துயரெதும் சேரா தெம்மையும்
காப்பாய் சங்கரனே!
(1)
ஏற்றுக் கொள்வீர்! ஆற்றித் தொழுதோம்;
விரும்பிச் சரண்புகுந்தோம்;
சுற்றம் ஏதும் உடையோம் யாமும்
நின்பதம் தனையல்லால்;
குற்றம் குறையும் அறியோம் வாழ்வில்
குருவைத் தொழ விரைந்தோம்;
கற்றோர் உறவால் கதியாம் உம்மைத்
தொழுதோம் சங்கரனே!
(2)
நலம் இலாதெது நிறைவாம் வாழ்வினில்
நின்னடி சேராமல்;
வளம் புகாதோ வந்துமைச் சேர்வார்
வரமாய் வாழ்விதுமே
குலம் குன்றாத நிறைவாய் வாழ்ந்திட
வரமாய் அருள்வோனே
தலம் தலமாய் நடைபயின் றருளிய
திவ்வியச் சங்கரனே!
(3)
திரியும் முப்புரம் எரித்தோன் அருளாய்
தரணியில் வாய்த்தவனே
வறியர் வாழ்வும் இனிதாய் மாற்றிட
தருமம் உணர்த்திடவே
அறிவாய் குருவாய் உருவாய் அமைந்தே
அன்பும் நிறைத்தவனே
பெரியோய் நின்னருள் பெறவே நித்தமும்
பணிந்தோம் சங்கரனே!
(4)
மாயா மதியதும் விழா நிலையதும்
வேண்டிப் பணிந்தனமே!
சாயா தருமத் திருவென ஒளிரும்
சங்கர குருபரனே!
காயா மனமிதில் நிறைவாய் அருட்திரு
சசிசேகர குருவே!
தாயா யெம்நலம் காப்பாய் தன்னருள்
புரிவாய் சங்கரனே!
(5)
கண்டதும் கேட்டதும் நின்திரு மகிமை
உணர்த்துஞ் சத்தியமே
மூண்டமும் மலமும் அகற்றும் பொன்னருள்
புரியும் மா’தவனே
கொண்டது வும்மைத் தந்தது மெம்மைச்
சந்ததம் பெற்றனமே
அண்டின மும்பதம் பற்றிய தெம்மனம்
அருள்வாய் சங்கரனே!
(6)
வஞ்சனை வீண்பழி செய்வினை பிணியெதும்
அண்டா நல்வாழ்வும்
குஞ்சித சங்கரம் போற்றிட வரமாய்
அமைந்திடுஞ் சத்தியமே
அஞ்சுக அன்னையள் அரசாள் தலமுறை
சசிசேகர குருவே
துஞ்சுறு வேயுனை யனுதினந் துதித்தோம்
கற்பகச் சங்கரனே!
(7)
வண்ணமு மெழிலுடை சிவபார்வதி யுமைச்
சரண்புகுந் தாற்றினமே
கண்ணிது நற்பொருள் கண்டிடக் காத்தருள்
புரிவாய் கருணாளா
பண்ணிது மேற்றுநல் லொளிதர வேண்டினம்
அருள்வாய் குருநாதா
எண்ணமு மெதனிலுந் தர்மமுஞ் செழித்திடக்
காப்பாய் சங்கரனே
(8)
நேற்றைய தினம் எழுதப் பெற்றதென்னவோ ஐந்து விருத்தங்கள் தாம்.. ஆனால் ஐயனோ இதனைப் பகிரும் தருவாயில் அஷ்டகமாய் எட்டு விருத்தங்களோடு எழுதிடப் பணித்தனரோ!
ஹே, மஹாபிரபு! மந்திரமும் தந்திரமும் யந்திரமும் சாத்திரமும் முற்றிலும் அறியாத சென்மம் எனது. சுந்தக்கண்ணனாம் பரமாத்மா மாயை காட்டி எம்மை தன்னிலே ஆட்கொண்டான் அன்று… இன்றோ சங்கரக் கண்ணனாய் இங்கே எம்மோடு பிறந்து வாழ்ந்து வழிசொல்லி வினைபுரிந்து வழிகாட்டி நல்லறம் உணர்த்தியத்தியதோடு, எம்க்கு நல்லோர் நட்பும், நிறையோர் வாழ்த்தும் கிட்டிடச் செய்து எம்மிலே நிறைந்து காக்க வந்த கருணாகரா! நின் பத்மபாதம் சரண் புகுந்து எல்லோருக்கும் கண்வளம் தந்து காப்பாய் க்ருபாகரா! என ப்ரார்த்தித்து, கண் வளம் பெற கண்மணியாம் கருணாகர சசிசேகர சங்கர துதியிதனை உங்கள்.அனைவரோடுமாக ஒருசேர அவர் தாள் வணங்கி அவரருள் ஏற்றிட வேண்டிப் பகிர்கின்றேன்.
——————-
அன்று இதனை எழுதுகையில், சத்தியம் சொல்கிறேன்… ஒரு கண் பார்வையுடனாக கஷ்டப்பட்டு எழுதிக் கொண்டிருந்தேன். பாடலைப் பகிர்ந்த சில நிமிடங்களில் மருத்துவர் உள்ளே அழைத்தார். என்னுடைய கண் பரிசோதனை ரிப்போர்ட்களை நிதானமக பார்த்துவிட்டு, என் கண்களையும் பரிசோதித்தார்கள். திரும்ப திரும்ப ப்
பத்துடனாக கண்களையும் ரிசல்ட்டுகளையும் பார்த்தவர், ஒவ்வொரு கண்களாக மூடித் திறக்கச் சொன்னர்கள்.
வியப்பின் உச்சிக்குச் சென்றுவிட்டேன். காரணம் இரு கண்களிலும் பார்வை.. மிக மிக மங்கலாகத் தெரிந்த அந்த கண்களிலே பார்வை தெளிவாக… வியப்போடு உடல் நடுங்கியவனை, சில நேரங்களில் தெளிவு படுத்தி அனுப்பிவைத்தார் அவர்.
எந்தன் நெருங்கிய நண்பர்கள் பலர் அந்த ரிப்போர்ட்டை பார்த்தவர்களும், இரு அன்னையரும் இந்த நிகழ்வுக்கு சாட்சி. சரஸ்வதி தியாகராஜன் அம்மா அடியேனுடைய அதிகப்படியான குருப்புகழுக்கு சந்தம் அளித்தவர்கள். என் வாழ்விலே நம் குருநாதர் காட்டிய அவ்யாஜ கருணைகளை நன்றாக அறிந்தவர்கள். இன்றைய பொழுதிலும் மட்டுமன்றி ஒவ்வொரு பொழுதிலும் அவர்களை நினைத்து ஆத்மார்த்தமாக நமஸ்கரிப்பவன் யான். சங்கரம் போற்றி!
சர்வமும் அவராலே! நம்முள் நிறைந்து நம்மை இயக்குபவர் அவரே! பூரண சரணாகதி அடையும் வல்லமை அவர் தந்தாலொழிய வேறு கதியில்லையே! அவர் அருளால் அவர் தாள் வணங்குவோம்! ஆனந்தம் எனும் முக்தியை இவ்வாழ்விலேயே அனுபவமாய் பெறுவோம்!
இந்த துதியினை வெகு அழகாக நம் அனைவருக்கும் குருநாதர் பிரசாதமாக அளிக்க உதவிய மகளாம் Lohitha Swaminathanக்கு ஆசி கூறி சமர்ப்பிக்கின்றேன்.
ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு ஆபத்திலும் அடியவனை மட்டுமல்லாமல் அனைவரையும் காக்கும் குரு நாதரே யாவர்க்கும் துணை.
பெரியவா சரணம்.
பெரியவா சரணம்.
ஸ்ரீமஹாபெரியவா அபயம்.
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.