Sage of Kanchi

தாய் தந்தையர்களை ரக்ஷிப்பது

Thank you Sri Halasya Sundaram Iyer for the share.

Periyava-mukkoor

மஹாபெரியவாளை சந்திக்க சில பெண்மணிகள் வந்திருந்தார்கள். பெரியவா அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது முதியோர் இல்லம் பற்றி பேச்சு வந்தது. அப்போது பெரியவா அவர்களை முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியாரிடம் அனுப்பி வைத்தார். அவர்களும் அப்படியே முக்கூராரை சந்தித்து மஹாபெரியவா தங்களை அனுப்பி வைத்த விபரத்தை சொன்னார்கள். அப்போது முக்கூரார் சொன்னவைகள் தான் இவை. (குறையொன்றுமில்லை புஸ்தகத்திலும் வந்துள்ளது)

அந்திமக் காலத்திலே பெரியவர்களைக் கொண்டு போய் இப்படி நிராதரவாக முதியோர் இல்லத்தில் விடலாமா? அவர்களைக் காப்பாற்ற வேண்டாமா?

அதனால் இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டும். இங்கே அந்திமக் காலத்தில் ஒருத்தருக்கும் ஒரு சிரமமும் கொடுக்காமல் ஒருத்தர் உட்கார்ந்திருக்கிறார். பிராணன் போய் விட்டது! ‘யாருக்குமே சிரமத்தைக் கொடுக்கவில்லை; இந்த மாதிரி யார் அமைவார்கள்!’ என்று பிள்ளையும் மாட்டுப் பெண்ணும் சொல்கிறார்கள். கூட இருந்த எல்லோருமே சொல்கிறார்கள்.

அனாயாசேன மரணம்.! – போனவருக்கு இது அமையவேண்டுமேயொழிய, இருப்பவர்கள் அதைச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். அவர் சிரமப்படாமல் போக வேண்டும் என்பது போனவருக்கு மட்டும் தான் சொன்னது. இருந்து கொண்டிருப்பவர்கள் என்ன நினைக்க வேண்டும்..?

ஒரு மாதமாவது அவருக்கு சிச்ருக்ஷை பண்ண நமக்கு கொடுத்து வைக்கவில்லையே! என்று நினைக்க வேண்டும். அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்றால் தீர்த்தத்தை எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றால், நாம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும்.

பாதத்தைப் பிடித்து விட வேண்டும்; ஸ்நானம் பண்ணி வைக்கலாம்; அன்னத்தை ஊட்டலாம்.

அவர்கள் நினைக்கிறார்கள்…’அடடா! இந்த துர்க்கந்தத்தைச் சகித்துக் கொண்டு நம் பிள்ளை இப்படிப் பண்ணுகிறானே, அவன் குழந்தைகளெல்லாம் நன்றாக இருக்கட்டும்’ என்று அனுக்கிரஹம் பண்ணுகிறார்கள். அந்த அனுக்கிரஹம் தான் இவர்கள் சந்ததி பின்னால் மேன்மையுறுவதற்கு உதவுகிறது.

ஆகவே சிரமம்கொடுக்காமல் இவர்கள் போய் விட்டால் நன்றாயிருக்குமே என்று ஒரு போதும் சொல்லக் கூடாது.

பெரியவர்களும் ஓடாய்த் தேய்ந்து, அந்திமக் காலத்திலே தங்களை ஒதுக்கிகிறார்கள் என்று தெரிந்ததுமே ‘கிருஷ்ணா – ராமா – கோவிந்தா’ என்று சொல்ல வேண்டாமா? குழந்தை வந்து விட்டானா? வெளியே போன பேரன் வந்து விட்டானா” என்று இவர்களுக்கு விசாரம். இவர்களுக்கு மமகாரம் போவதில்லை! இப்படிப்பட்ட கிருஹத்திலே தேவதைகளெல்லாம் வரமாட்டார்கள்.

பெரியவர்கள் இல்லையென்றால், நாம் இல்லை. வயதான தாய் தந்தையர்களை ரக்ஷிப்பது, பித்ரு தேவதைகளை ஆராதிப்பது, அவர்கள் ப்ரீதியைச் சம்பாதித்துக் கொள்வது….எல்லாம் ரொம்ப முக்கியமானதாலேதான் பித்ரூ கீதத்தில் அதற்கு இவ்வளவு சிறப்புச் சொல்லப்பட்டிருக்கிறது.

பீஷ்மர் மோக்ஷமடைந்த தினத்தில் பித்ரு காரியம் செய்தால், ரொம்ப விசேஷம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

Exit mobile version