
(This picture has nothing to do with this incident…As this is the only photo I could remember someone holding Periyava’s padhukas).
Thanks to Sri Varagooran mama for FB share.
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-07-09-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)
மகாபெரியவா, சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனோட ரூபம்கறதால அவரோட திருவடி தீட்சை தனக்குக்
கிடைச்சா அது மகாபாக்யமா இருக்கும்னு நினைச்சார் ஒரு பக்தர்.இத்தனைக்கும் அவர் அடிக்கடி பரமாசார்யாளை தரிசிக்க வர்றவரோ, மடத்துல உள்ளவாளுக்கு ரொம்பத் தெரிஞ்சவரோ கிடையாது.
போளூர்ல போஸ்ட்மாஸ்டர வேலை பார்த்த அவர் தினம் தினம் எந்த வேலை எப்படி இருந்தாலும், மகா பெரியவாளை மகாபெரியவாளை ஒருதரம் மனசால நினைச்சுப்பார். அவரோட பாதரட்சையைத் தாங்கிக்கற பாக்யத்தையாவது தனக்குத் தரணும்னு ஆத்மார்த்தமா வேண்டிப்பார்.
ஒரு சமயம் மகாபெரியவா யாத்திரை பண்ணிண்டு இருந்த வழியில கலசப்பாக்கத்துல ரெண்டு நாள் முகாம்
போடலாம்னுட்டார் பரமாசார்யா. அங்கே தங்கி இருக்கார்ங்கற விஷயம் தெரிஞ்சதும்,போளுர் பக்தர் ஒடனடியா பொறப்பட்டு கலசப்பாக்கத்துக்கு வந்துட்டார்.
ஆனா,முகாம் இட்டிருந்த இடத்துக்கு அவர் வந்த சமயத்துல மகாபெரியவா அங்கே இல்லை.அங்கே இருக்கிற கோயிலுக்கு சுவாமி தரிசனம் பண்ணறதுக்காக போயிருக்கார்.கொஞ்ச நேரத்துல வந்துடுவார்னு அங்கே இருந்தவா சொன்னா. ஆனா, ‘மகாபெரியவாளை ஒடனே தரிசனம் பண்ணியாகணும்,
கொஞ்சநேரம் கூட காத்துண்டு இருக்க முடியாது!’ன்னு அங்கேர்ந்து விடுவிடுன்னு ஆசார்யா போயிருந்த கோயில் பக்கமா வேகமா நடக்க ஆரம்பிச்சார் அந்த பக்தர்.
அங்கே ஆசார்யா வழக்கமான தன்னோட விறுவிறு நடைக்கு பதிலா, யாருக்காகவோ தாமதிக்கற மாதிரி மெதுவா நடந்துண்டு இருந்தார்.
வேகவேகமா போன பக்தர்,பரமாசார்யா கோயில் வாசலை நெருங்கற சமயத்துல சரியா அங்கே போய்ச் சேர்ந்தார். ஆசார்யாளைக் கொஞ்சம் தள்ளி நின்னுதான் பார்க்க முடிஞ்சுதுன்னாலும் அவரோட தேஜஸ்ல இவர் அப்படியே மெய்மறந்து போய்ட்டார்.
அப்படியே நின்னவரை,ஆசார்யாளோட குரல்தான் சகஜத்துக்குக் கொண்டு வந்தது.”நான் சுவாமி தரிசனம்
பண்ணிட்டு வர்றவரைக்கும் என்னோட பாதரட்சையை யாராவது வைச்சுக்கறேளா?” பகவானே தேடிவந்து
படியளக்கும்போது வாங்கிக்கொள்ள யாருக்காவது கசக்குமா என்ன?”நான் வைச்சுக்கறேன்,நான் வைச்சுக்கறேன்!”னு ஆளாளுக்கு கை நீட்டினா.
“சிகை வைச்சுண்டிருக்கறவா யாராவது பாதரட்சையை வைச்சுண்டா, ஸ்ரேஷ்டமா இருக்கும்!” பெரியவா
சொன்னதும், அநேகமா அங்கே இருந்தவா எல்லாரும் கையைப் பின்னால இழுத்துண்டா.ஒரே ஒருத்தரைத்தவிர.
ஆமா அங்கே இருந்தவாள்ல சிகை குடுமி வைச்சுண்டு இருந்தவர் அவர் மட்டும்தான்.அப்புறம் என்ன அவர்
ஆசைப்பட்டமாதிரியே மகாபெரியவாளோட பாதரட்சையைத் தாங்கிண்டு இருக்கற பாக்யம் அவருக்குக் கிடைச்சுது.
ராமபிரானோட திருவடியை ஆனந்தமா ஏந்திண்டு நிற்கற ஆஞ்சநேயர் மாதிரி பரமாசார்யாளோட திருவடியா நினைச்சு அவரோட பாதரட்சையை ஏந்திண்டு நின்னார் அந்த பக்தர்.
“நான் கோயிலுக்குப் பொறப்பட்டு வந்ததே, உன்னோட அபிலாஷையை பூர்த்தி பண்றதுக்குதான்!” அப்படின்னு சொல்லாம சொல்றமாதிரி அவரைப் பார்த்து மென்மையா சிரிச்சுட்டு கோயிலுக்குள்ளே போனார் ஆசார்யா.
அந்த பக்தர்,ஆசார்யாளோட பாதரட்சையை வைச்சுண்டு கோயில் வாசல்ல நின்னுண்டு இருந்தாரே தவிர,அவரோட மனசு பரமாசார்யா கோயிலுக்குள்ளே நுழைஞ்சப்ப கூடவே தானும் சேர்ந்துண்டு வலம் வர ஆரம்பிச்சுடுத்து.
கோயிலுக்கு உள்ளே போன ஆசார்யா எல்லா சன்னதிகளையும் தரிசனம் பண்ணிட்டு, கடைசியா
கர்பக்ருஹத்துக்கு வந்தார். அங்கே இருந்த சிவாசாரியார் சுவாமிக்கு கற்பூர நீராஞ்சனம் சமர்ப்பிக்கறதுக்கு தயாரானார்.
“கொஞ்ச நேரம் பொறுங்கோ.இன்னொருத்தர் இங்கே வரவேண்டி இருக்கு. அவர் வந்ததும் நீராஞ்சனம்
காட்டலாம்!” மகாபெரியவர் சொல்ல, சிவாசாரியாருக்கு திகைப்பு. எல்லாருக்கும் ஆச்சரியம்.
இன்னொருத்தர் வரணுமா? யார் அவர்? யாருக்கும் புரியலை. அந்த சமயத்துல பரமாசார்யா தன் பக்கத்துல நின்னுண்டு இருந்த அணுக்கத் தொண்டரைக் கூப்பிட்டார்.
“நீ நேரா வாசலுக்குப்போ அங்கே பாதரட்சையை வைச்சுண்டு நிற்கறாரே, அவர்கிட்டேர்ந்து அதை நீ வாங்கிண்டு அவரை உள்ளே வரச்சொல்லு”ன்னு- என்று சொன்னார் ஆசார்யா.
அப்படியே அந்தத் தொண்டர் வெளியில போய் பரமாசார்யா பாதரட்சையை தான் வாங்கிண்டு,அந்த பக்தரை உள்ளே அனுப்பினார்.”இப்போ சுவாமிக்கு ஆராத்தி காட்டுங்கோ!” அப்படின்னார், ஆசார்யா.
எல்லாரும் ஆரத்தி ஜோதியில சுவாமியை தரிசனம் செய்யறச்சே அந்த பக்தர் மட்டும் சுவாமியையும்,
ஆசார்யாளையும் மாறிமாறிப் பார்த்துண்டு இருந்தார். காரணமே தெரியாம அவரோட கண்ணுலேர்ந்து ஜலம்
ப்ரவாகமா வழிஞ்சுது.அடுத்து அம்பாள் சன்னதிக்குப் போனபோதும் அப்படியே பார்த்துண்டு இருந்தார்.
தரிசனம் எல்லாம் முடிஞ்சு,முகாமுக்குத் திரும்பினதும் நமஸ்காரம் செஞ்சு ஆசிர்வாதம் வாங்கிக்க வந்த அந்த பக்தர்கிட்டே, “என்ன,உன்னோட மனசுல நினைச்சது பூர்த்தியாச்சா?” அப்படின்னு கேட்டு பிரசாதம் கொடுத்து ஆசிர்வாதம் பண்ணினார் பரமாசார்யா.
அவர் என்ன மனசுல நினைச்சார்? என்ன நடந்ததுதுன்னு யாருக்கும் புரியலை.கொஞ்ச நேரத்துக்கப்புறம் புறப்படத் தயாரான அவர்கிட்டே அணுக்கத் தொண்டர் ஒருத்தர் கேட்டார்.
“மகாபெரியவா கோயிலுக்கு உள்ளே நுழைஞ்சதும் எம்மனசு எங்கிட்டேயே இல்லை.ஒவ்வொரு சன்னதியா கற்பனை செஞ்சு பார்த்த நான், இவ்வளவு நேரம் ஆசார்யா சுவாமி சன்னதியில் நின்னுண்டிருப்பார், சிவாசார்யா ஆரத்தி காட்டறச்சே சுவாமி மூலவராகவும்,ஆசார்யா உற்சவர் மாதிரியும் இருப்பா. அந்தக் காட்சியைப் பார்க்க எனக்குக் குடுத்து வைக்கலேயேன்னு நினைச்சேன்.
“என் மனசுக்குள்ளேயே இருந்து பார்த்தவர் மாதிரி, என்னை உள்ளே கூப்டதோட இல்லாம நான் நினைச்ச மாதிரியே சுவாமி சன்னதியில சாட்சாத் அந்த மகேஸ்வரனாகவே என் கண்ணுக்கு தெரிஞ்சார் ஆசார்யா. அதுமட்டுமில்லாம, அம்பாள் சன்னதியில காமாட்சி ரூபத்துல காட்சி குடுத்தார். எனக்கு இதுபோதும். இந்த ஜன்மாவுல இனி எதுக்கும் நான் ஆசைப்படவே மாட்டேன்!” அப்படின்னு தழுதழுப்பா சொன்னார் அந்த பக்தர்