Thanks to Sri Prasanna for the share in Whatsapp
(Article Courtesy: Sri Ganapathi Subramanian – Auditor in Karaikal)
Source: ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள் : அக்டோபர் 1991 – திருவிசைநல்லூர் உத்ஸவம்

திருவிசைநல்லூர் ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களின் மனதிற்குகந்த ஸ்தலம்.
ஸ்ரீஸதாசிவ ப்ரஹ்மேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் அவதரித்ததும் இங்குதான்.
தஞ்சையை ஆண்ட ஸாஹஜீ போஜன் என்று புகழப்பட்ட ஷாஜி ராஜா மான்யமாக அளித்த அக்ரஹாரம். இவ்வரசனின் காலத்தில் தஞ்சை மண்டலத்தில் அத்வைத ராஜ்யலக்ஷ்மீ பொலிந்திலங்கினாள்.
ஷாஜி ராஜரின் சரித்திரத்தை நமக்கு சுவையுடன் அறிவிக்கிறது ஸ்ரீஐயாவாள் அவர்கள் இயற்றிய ஸாஹேந்த்ர விலாஸம் என்னும் நூல்..
ஸ்ரீஸார் அவர்களிடம் அடைக்கலமாகியிருந்த காலத்தில் இயன்றபோதெல்லாம் திருவிசைநல்லூர் சென்று அங்குள்ள ஸ்ரீஐயாவாள் மடத்தில். ஸ்ரீஸார் அவர்கள் தனது ஏணிப்படிகளில் மாந்தர்கள் புஸ்தகத்தில் எழுதியுள்ள ஸ்ரீதர ஐயாவாள் அவர்களின் திவ்ய சரித்ரத்தைப் பாராயணம் செய்து விட்டு வருவது ஆரூரனின் வழக்கம்.
ஸ்ரீஐயாவாள் சரித்திரத்தை எத்தனையோ பேர் எழுதியிருப்பினும் ஸ்ரீஸார் அவர்களது வர்ணனம் நேரில் காண்பது போலவேயிருக்கும். மனதை உருக்கிவிடும். ஒருமுறையாவது அந்த புண்ய ஸ்தலத்தை தரிசிக்க வேணுமென்ற ஆவலை வாசிப்பவர்களின் மனத்தில் தோற்றுவிக்கும்.
திருவிசைநல்லூர் கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்திற்கு முதல் பத்ரிகை ஸ்ரீகாஞ்சீ காமகோடி
பீடாதிபதிகளுக்குத்தான் ஸமர்ப்பிக்கப்படும். அடுத்த பத்ரிகை ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களுக்கு திருவிசநல்லூர் மடத்து நிர்வாஹிகள் சார்பில் நேரில் வைக்கப்படும். பிறகுதான் மற்றவர்களுக்கெல்லாம் உத்ஸவ பத்ரிகை அனுப்பி வைக்கப்படும்.
1991ம் வருஷம். ஸ்ரீஐயாவாள் மடத்தில் நடைபெறும் கார்த்திகை அமாவாஸ்யை கங்காவதரண உத்ஸவ பத்ரிகையை ஸத்குரு ஸ்ரீஸார் அவர்களுக்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டி உத்ஸவ கமிட்டி முக்யஸ்தரான அவ்வூர்ப் பெரியவரான ராயர் ஒருவர் வந்திருந்தார்.
திருவிசைநல்லூர் உத்ஸவமானதால் என்னுள் இயல்பான ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அவரை இருக்க வைத்து … உபசரித்து … பிறகு அவரை ஸ்ரீஸார் அவர்களிடம் ஆஜர்படுத்தினேன்.
ஸ்ரீஸார் அவரிடம் மிகுந்த ப்ரியத்துடன் பல வருஷத்து விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ஸ்ரீசார் அவர்களுக்கு திருவிசைநல்லூர் மடத்துடனும், ஊராருடனும் இருந்த தொடர்பை அறிந்துகொண்டேன்.
பிற்பாடு ஸ்ரீபெரீவா அவர்கள் சம்பந்தமான ஒரு ஆச்சர்யமான நிகழ்வை ராயர் சொன்னார்.
” சில வருஷங்களுக்கு முன்னால் தஞ்சாவூர் ப்ரதேசத்தில் ஐப்பசியில் பருவ மழை பெய்யாது பொய்த்தது.. மேட்டூர் ஜலமும் வரவில்லை. காவேரியில் சுத்தமாக வரத்து இல்லை. ஸ்ரீஐயாவாள் மடத்தின் பின்புறம் கங்கை ஆவிர்பவிக்கும் கிணறும் வறண்டு போனது.
ஸ்ரீஐயாவாள் மடத்தின் கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவம் அந்த வருஷம் நடக்குமா என்ற பயம் வந்து விட்டது.
உத்ஸவ பத்ரிகையை எடுத்துக் கொண்டு போய் ஸ்ரீபெரிவாளின் ஸன்னதியில் ஸமர்ப்பித்தோம். மெதுவாக அங்குள்ள பிரச்னை பற்றிச் சொன்னோம். அப்படியே சில நிமிஷங்கள் கழிந்தன.
ஸ்ரீபெரிவா சற்றுநேரம் மோனமாக இருந்து விட்டு சைகையால் அருகிலிருந்த ஸ்ரீமடத்து அன்பரை அழைத்து ஒரு பெரிய செப்புக் குடத்தில் கங்கா ஜலத்தை நிரப்பி வரச்சொன்னார்கள்.. அங்கு கங்கா ஜலம் இருப்பது பற்றி எங்களுக்கு ஏதும் அதற்கு முன்னால் தெரியாது. அந்த அன்பரும் அவ்வண்ணமே கங்கா ஜாலம் நிரம்பிய ஒரு பெரிய செப்புக் குடத்தைத் தூக்கி வந்து ஸ்ரீபெரீவாளின் திருமுன்னர்க் கொண்டு வைத்தார்.
உடனே ஸ்ரீபெரீவா எங்களிடம் “இந்தக் குடத்தில் இருக்கும் கங்கா ஜலத்தை ஜாக்ரதையாகத் திருவிசைநல்லூருக்குக் கொண்டுபோய் வையுங்கள். மழை வராவிட்டால் ஸ்ரீஐயாவாள் மடத்தில் இருக்கும் கங்கை ஆவிர்பவிக்கும் கிணற்றில் கார்த்திகை அமாவாஸ்யைக்கு முன்னால் சேர்த்து விடுங்கள் .. ! ” என்று அபயம் காட்டி எங்களுக்கு ப்ரஸாதம் அளித்து அனுப்பி வைத்தார்கள்.
திருவிசைநல்லூருக்குத் திரும்பினோம்.
ஸ்ரீபெரீவாளின் வாக்கு என்றும் பொய்க்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தபோதிலும் அப்போதிருந்த வறட்சியான கால நிலை எங்களை ஸஞ்சலத்தில் ஆழ்த்தியபடியே இருந்தது.
உத்ஸவத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையிலும் மழை பெய்யவே இல்லை. காவேரியில் ப்ரவாஹமேயில்லை. வயல் வெளிகளும் காய்ந்து வெடித்துப் போயிருந்தன..ஸ்ரீஐயாவாள் மடத்துக் கிணறும் சுத்தமாகக் காய்ந்துபோயிருந்தது.
உத்ஸவ கமிட்டி மீட்டிங் போட்டோம். என்ன செய்வது என்று கலந்து பேச ஆரம்பித்தோம். எல்லோரும் ஒருமித்ததொரு முடிவுக்கு வந்தோம்.
“ஸ்ரீபெரீவா அவர்களின் உத்தரவு ப்ரகாரம் செப்புக் குடத்திலிருந்த கங்கா ஜலத்தைக் கிணற்றில் ஊற்றிவிடுவோம். அப்புறமாக அதைக் கொஞ்சமாக எடுத்து அனைவருக்கும் ப்ரோக்ஷணம் செய்து விட வேண்டியதுதான் ” என்று தீர்மானித்து அவ்விதமே கங்கா ஜலத்தைக் கிணற்றில் சேர்த்தோம்.
அடுத்து நடந்ததுதான் ஆச்சர்யம் …
கார்த்திகை அமாவாஸ்யை தினத்தில் ஸ்ரீஐயாவாள் அவர்களின் ஸ்தோத்ரத்தைக் கேட்டவுடன் கங்கை அவரது இல்லத்தின் பின்புறமிருந்த கிணற்றில் ஆவிர்பவித்துப் பெருகி ஊரெங்கும் காணும்படி வழிந்தோடினாள் என்பது சரித்ரம்.
அதை மீண்டும் காட்டும்படியாக கார்த்திகை அமாவாஸ்யைக்கு முதல் நாள் செப்புக் குடத்திலிருந்த ஸ்ரீபெரீவா அனுக்ரஹித்திருந்த கங்கையைக் கிணற்றில் சேர்த்த சில மணி நேரத்தில் தொடங்கியது பெரும் மழை. விடிய விடிய விடாது பெய்து ஊரையே வெள்ளத்தில் மிதக்க வைத்தது.
ஸ்ரீஐயாவாள் அவர்கள் கங்கையை வரவழைத்தது போல் மடத்திலிருந்த கிணற்றில் ஜலம் பெருகியது.
அமாவாஸ்யை அன்று விடியற்காலை கிணற்றின் கைப்பிடிச் சுவற்றிற்கு மேல் ஜலம் பெருகி வழிந்தோடியதைக் கண்டோர் அதிசயித்தனர். அதேவிதமாகக் காவேரியிலும் கால் வைக்கக்கூட முடியாத அளவிற்கு ப்ரவாஹம் மிக அதிகமாக இருந்தது.
பல நூறு பக்த ஜனங்கள் அன்று மடத்திலிருந்த கிணற்றில் ஸ்நானம் செய்தும் வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஸ்ரீபெரிவாளைத் தரிசிக்கச் சென்றோம்.
திருவிசைநல்லூர் மடத்தார் வந்திருக்கும் விபரம் அவர்கள் ஸந்நிதானத்தில் தெரிவிக்கப்பட்டது.
உடனே ஸ்ரீபெரீவா அவர்கள் புன்முறுவலுடன்
” திருவிசநல்லூர் மடத்து கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்துக்கு, எப்போதும் போல இந்த வருஷமும் கங்கை வந்தாளா? என்று எங்களை பார்த்துக் கேட்டதை என்னிக்கும் மறக்க முடியாது!” என்று முடித்தார் ராவ்ஜீ .