Sage of Kanchi

பாட்டிகள் மஹாத்மியம் – Part 2 – லக்ஷ போஜனம் பாட்டி

mahaperiyava_rare_closeup.jpg

I am sure this incident is not new to anyone….From what Periyava says on how humble we need to be particularly when doing dharma karyam to how we all behave today, it shocks all of us. Today, even before we give dhanam, we first post in Facebook and then donate 🙂 When I say this, I also believe that by sharing certain news with others, they also get motivated and participate in such noble projects. Bottomline is that we need to build the much-needed vinayam to be a true devotee of Periyava.

Mahaperiava – A Legend
Compiled & penned by gowri sukumar (forgot the website name that he manages)
(பல புத்தகங்களின் தொகுப்பு)
அனுமதியோடு-வரகூரான் நாராயணன்

பெரியவாளிடம் அந்தப் பாட்டிக்கு அபார பக்தி! மிகவும் ஏழை. கணவனோ, குழந்தைகளோ யாருமே கிடையாது. பெரியவா சொன்னபடி ‘மடி’ பண்ணிக்கொண்டு, கையில் கிடைத்த ஸொல்ப பணத்தில் சிக்கனமாக வாழ்க்கை நடத்துபவள்.

தினமும் பெரியவாளை தர்ஶனம் பண்ணுவது ஒன்றுதான் பாட்டியின் ஜீவாதாரமே!

ஶ்ரீமடத்தில், வழக்கமாக பெரியவா அமரும் இடத்தை நன்றாக அலம்பிவிட்டு ஶுத்தம் செய்து, அழகாக கோலம் போடுவாள். தீபங்களை ஏற்றி வைப்பாள்.

இதுதான் அவளுடைய உயிர் மூச்சான தினப்படி கைங்கர்யம்.

ரெண்டே ரெண்டு புடவைகள்தான்! பளிச்சென்று தோய்த்துக் கட்டிக் கொண்டு வருவாள். மூன்றாவதாக ஒரு புடவை வாங்கக்கூட ‘பட்ஜெட்’ இடம் கொடுக்கவில்லை. ஆனால், எதையுமே, பெரியவாளிடம் அவள் இதுவரை கேட்டதேயில்லை!

பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு பக்தர் வந்தார்.

“பெரியவாளுக்காக அரிசிக் குருணையும், வெல்லமும் கொண்டு வந்திருக்கேன். பெரியவா தயவு பண்ணி…. ஸ்வீகரிச்சுக்கணும்..”
பெரியவா, சற்று தள்ளி உட்கார்ந்து கொண்டிருந்த பாட்டியை ஜாடையால் அழைத்தார்.

“இந்த குருணை, வெல்லம் ரெண்டையும் எடுத்துக்கோ! இங்க, நம்ம காஞ்சிபுரத்ல, எங்கங்க… எறும்பு புத்து பாக்கறியோ, அங்கல்லாம் இதக் கொஞ்சங்கொஞ்சமா போட்டுடு. அரை ஆழாக்கு வீதம், போட்டுடு….”

பாட்டிக்கோ பரம ஸந்தோஷம்! தெய்வத்தின் உத்தரவை பக்தி ஶ்ரத்தையோடு ஶிரமேற்கொண்டு, அலைந்து திரிந்து, கண்ணில் தென்பட்ட எறும்பு புற்றிலெல்லாம் பெரியவா சொன்னது போல் போட்டுவிட்டு, பெரியவாளிடம் வந்தாள்.

“போட்டுட்டியா?…”

“ஆச்சு… பெரியவா”

பெரியவா சற்று தள்ளி ஒரு தட்டில் பெரிய மலை போல் பஞ்சுத்திரிநூலும், ஒரு டின் நிறைய எண்ணையும் இருந்ததைப் பார்த்தார்.

பாட்டிக்கு அடுத்த கைங்கர்யம்…..

“இந்த திரிநூலை கட் பண்ணி, நம்ம காஞ்சிபுரத்ல…. ஒவ்வொரு கோவிலுக்கா போயி, எவ்ளோவ் வெளக்குல போட முடியுமோ, அவ்ளவுக்கும் போடு! டெய்லி ரெண்டு, மூணு கோவிலுக்கு போயி வெளக்கேத்தினாலும் போறும்… செய்யறியா?…”

சிரித்துக் கொண்டே உத்தரவிட்டார்.

ஸாதாரணமாக மஹான்கள் நம்மை லேஸாக கடாக்ஷம் பண்ணினாலே, எங்கேயோ பறப்போம்.! ரெண்டு வார்த்தை பேசிவிட்டாலோ! லேஸாக கிறுக்காக ஆகிவிடுவோம்.! இந்த மாதிரி, கைங்கர்யத்தையும் தந்து, அதுவும் சிரித்துக் கொண்டே தந்தால்……???

வெளியே பார்க்க எப்படி இருப்போமோ தெரியாது…. உள்ளுக்குள் கட்டாயம் ‘கள் குடித்த குரங்கு’ போலத்தான் தெய்வீக போதையில் இருப்போம்!

தெய்வத்தின் சிரிப்புக்கு அத்தனை மஹத்வம்!

“பெரியவா சொன்னதே என்னோட பாக்யம் …”\

அன்பின் மிகுதியால் கண்ணீர் வந்துவிட்டது பாட்டிக்கு!

சில நாட்களில் இந்த கைங்கர்யத்தையும் அழகாக ஶ்ரத்தையோடு பண்ணிவிட்டு பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தாள்.

பெரியவா தலையை ஆட்டி, அவள் கார்யத்தை அங்கீகரித்தார்.

சில நாட்கள் கழித்து, ஒரு பெரிய பணக்கார பக்தர் ஒருவர் பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார். உள்ளே நுழைந்ததிலிருந்தே, ஒரு ஆடம்பரமான ஆர்பாட்டம் தெரிந்தது.

பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு, ‘வரவழைத்துக் கொண்ட’ குழைவோடு, தன் ப்ரதாபத்தை போலியான பணிவோடு பீற்றிக் கொள்ள ஆரம்பித்தார்….

“பெரியவா..! ஸஹஸ்ர போஜனம் பண்ணிவெச்சுட்டு வந்திருக்கேன். கோவில்ல லக்ஷதீபம் போட்ருக்கேன். பெரியவா… ஆஸிர்வாதம் பண்ணணும் ..”

எவ்வளவு கஷ்டப்பட்டு மறைத்தாலும், தற்பெருமை ‘படக்,படக்’ கென்று தலையைத் தூக்கத்தான் செய்தது. பேச்சிலும், ஶரீர குழைவில் மட்டும் வினயமாக நடித்தார்.

நாம….பண்ற தர்ம கார்யங்களை பத்தி, நாமே பேசிக்கறது, புண்யத்தை தராது! நீ… ஸஹஸ்ர போஜனந்தானே பண்ணியிருக்க? இரு…!

இங்க ஒரு பாட்டி இருக்கா! அவ, லக்ஷபோஜனம் பண்ணியிருக்கா தெரியுமோ? பல லக்ஷதீபங்கள் போட்ருக்கா! தெரியுமோ?…”

பணக்காரர் ‘ஷாக்’ அடித்த மாதிரி முழித்தார்!

அவ்வளவு பணக்காரியா? யார் அது?…..

‘Rank position’-ல் தன்னை மிஞ்சிவிட்டாளே!

பக்கத்திலிருந்த பாரிஷதரிடம் உத்தரவிட்டார்…..

“அந்தப் பாட்டிய கூப்டு…!…”

பாட்டி வந்தாள்!

“இவதான்… அவ்ளோவ் பெரிய உத்தமமான கார்யம் பண்ணினவ…!”

பணக்காரர், பாட்டியைப் பார்த்தார்….

பழைய நார்மடி புடவை! கழுத்தில் ஒரேயொரு ஸ்படிக மாலை! நெற்றியில் பட்டையாக விபூதி!

“என்ன இது? இந்தக் கந்தல் புடவையா..? லக்ஷ போஜனமா! லக்ஷோபலக்ஷ தீபமா!…”

பணக்காரர் மனஸில் எண்ணங்கள் ஓடியது.

“ஒண்ணு தெரிஞ்சுக்கணும்…. ஸர்வ ஜீவன்லயும் பகவான் வ்யாபிச்சிருக்கான். ப்ரஹ்மாலேர்ந்து பிபீலிகம் [எறும்பு] வரைக்கும், எல்லாத்துக்குள்ளயும் பகவான் இருக்கான். மனுஷ்யாகிட்டயும் அவன்தான் இருக்கான். நீ… ஆயிரம் மனுஷ்யாளுக்கு அன்னம் போட்ருக்கே! ஆனா, இந்தப் பாட்டியோ, பல லக்ஷம் ஜீவன்களுக்கு, எறும்புகளுக்கு ஆஹாரம் போட்ருக்கா….

……ஏதோ ஒரு கோவில்ல, லக்ஷதீபம் போடறதுக்கு நீ, த்ரவ்ய [திரி, எண்ணெய்] ஸஹாயம் பண்ணியிருக்க! லக்ஷ, தீபத்துக்கு எண்ணெயும் திரியும் போட்டு, ஒன்னால ஏத்தவே முடிஞ்சிருக்காது! ஆனா, இந்தப் பாட்டி, பல கோவில்களுக்குப் போயிருக்கா! பக்தி ஶ்ரத்தையோட அகல் வாங்கி, எண்ணெய் ஊத்தி, திரி திரிச்சு போட்டு, தன் கையாலயே…. அத்தனை தீபத்தையும் ஏத்தியிருக்கா….”

பணக்காரர் தலையைக் குனிந்து கொண்டார். அதுவரை உள்ளே கொதித்துக் கொப்பளித்துக் கொண்டிருந்த அவருடைய டம்பமும், அஹங்காரமும் பெரியவா என்னும் ஞான மழையால் அப்படியே அடங்கி அணைந்தது.

பெரியவாளுக்குத் தெரியாதா, அவருக்கான ட்ரீட்மென்ட் முடிந்து, அவர் ஸொஸ்தமாகிவிட்டார் என்று?

அவரை அழைத்து ப்ரஸாதம் தந்து, வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி, operation பண்ணிய மனஸில் மருந்தையும் தடவினார்.

கோவில்களுக்கோ, வேறு தர்ம கார்யங்களுக்கோ பணம் குடுப்பது நிச்சயம் நல்ல தர்மமான செயலே! அதே ஸமயம், இந்த நல்ல கார்யங்களை முடிந்தவரை, நாமே நம் கையால் செய்வது, நிச்சயம் நமக்கும் மனஶாந்தியை தரும்.

எங்கோ ஊரிலிருக்கும் தங்கள் மகன், லக்ஷலக்ஷமாக பணம் அனுப்பி, “வேண்டியதை வாங்கிக்கோ! க்ஷேத்ராடனம் ஸௌகர்யமா flight-ல போங்கோ” என்று கூறினாலும், பெற்றவர்கள் ஸந்தோஷப்படுவார்கள்தான்.

அதே ஸமயம் “ஒங்க ரெண்டுபேரையும் நானே காஸிக்கு கூட்டிக் கொண்டு போறேன்” என்று மகனே கூட்டிக் கொண்டு போனால்….?

இந்த இரண்டில், எதில் மகனுக்கும், பெற்றவர்களுக்கும் அதிக ஸந்தோஷமும், ஶாந்தியும் கிடைக்கும்?

Exit mobile version