Sage of Kanchi

Experience of a Vaishnava Devotee

Thanks to Smt Saraswathi Thyagarajan mami for the wonderful write-up
cropped-pudhuperiyava_adishtanam.jpg

1994 ஆம்வருஷம் ஜனவரி எட்டாந்தேதியை யாராலும் மறக்க முடியுமா?

அன்று பெரியவா சித்தியானது மீடியாக்களின் மூலம் அறிவிக்கப்பட்ட அந்த நிமிஷமே எனக்கு அவரை தரிசனம் செய்யும் ஆவல் கட்டுகடங்காமல் என் பெற்றோரிடம் காஞ்சிபுரம் போகும் ஆவலைச் சொல்லி
அழுதேன். பிறப்பால் நான் வைஷ்ணவ குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் பெரியவாளை ஒரே ஒரு
முறைதூரத்தில் நின்று சேவித்திருக்கிறேன். அவருடைய தீக்ஷண்யமான கண்கள் என்னை
அன்றே ஆட்கொண்டுவிட்டதோ?

என் பெற்றோருக்கு பெரியவாளிடம் அதீத பக்தி ஒன்றும் கிடையாதாகையால் என் சொல்லை அவர்கள் லக்ஷியம் செய்யவில்லை. அன்று இரவு முழுதும் ”பெரியவா உங்களை கடைசியாக ஒரு முறை தரிசனம் செய்ய ஆவலாயிருந்தும், என்னைச் சுற்றியுள்ளவர்கள் ஒத்துழைக்காததால் தரிசனம் கிட்டவில்லை;
என்ன செய்வேன்” என்று புலம்பியபடி உறங்கி விட்டேன்.

விடியற்காலையில் எனக்கு பெரியவா தரிசனம்! எப்படி? சித்தியானது முதல் அங்கு நடந்த சடங்குகள் யாவும் ஒரு திரைபடம் போல் என் முன்னால் வருகிறது ஒன்றன் பின் ஒன்றாக!

பெரியவாளுக்கு அபிஷேகம் செய்வது முதல் அவர் மேல் ஒரு லிங்கப்ரதிஷ்டை செய்து அதன் மேல் தாரா பாத்திரம் வழியாக அபிஷேகம் செய்வது அனைத்தும் கண் முன் காட்சி! நான் அப்போது சிறிய வயதுப்
பெண்ணானதாலும், வைஷ்ண்வ குடும்பத்தைச் சேர்ந்தவளானாலும் எனக்கு இந்த சம்ப்ரதாயம்
எதுவுமே தெரியாது. சன்யாசிகளுக்கு இறுதி மரியாதையெல்லாம் எப்படி நடக்கும் என்பதைப்
பற்றி ஒரு விஷயமும் தெரியாது. ஆனால் குழி பறித்து பெரியவா உடலைக் கீழே இறக்கும்
முதலாக அனைத்துக் காட்சிகளும் சினிமா மாதிரி என் கண்முன் தோன்றிய விந்தையை
என் சொல்வேன்! வேத கோஷங்கள், புதுபெரியவா உடன் நின்று சகலமும் செய்வது அனைத்தும் கண்டேன்!

எல்லாச் சடங்குகளும் முடிந்தபின் அதிஷ்டானம் மேல் (அப்போது அதிஷ்டான கட்டிடம் கட்டப்
படவில்லை.) ஆனால் பெரியவா இருக்கும் கூரை மேலிருந்து வெளிச்சம் வருவதைக்கூட காண
முடிந்தது! நான் அப்போது நினைக்கிறேன் ”ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டிருந்தால் எப்படி வெளிச்சம் வரும்?” என்பதாக.

இதையெல்லாம் யாரிடம் கேட்பது? யார் தக்க விடை சொல்வார்கள்? என்று நினைத்தபடியே விழித்துக் கொண்டேன்.

பிறகு எனக்குத் திருமணம் ஆகி சென்னை வந்ததிலிருந்து பெரியவா அதிஷ்டானம் போய் தரிசனம் செய்ய மனம் விழைந்தாலும், சூழ் நிலை இடம் கொடுக்கவில்லை. 2013ஆம் வருஷம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
ஓரிக்கை போக முயற்சி செய்து போன போது அங்கு யாரோ ஒருவர் அதிஷ்டான தரிசனம் செய்யுங்கள் என்று அசரீரீ போன்று கூறவே, அதிஷ்டானத்தை முதல் முறையாகப் பார்த்து வியந்து நின்றேன்! நான் 19 வருஷம் முன்பு சொப்பனத்தில் எப்படிப் பார்த்தேனோ அதே போல சகலமும் காட்சியளித்தது!
மேலேயிருந்து வெளிச்சம் வரும் கூரையையும் நான் விடாமல் பார்த்தேன். என் சந்தேகம்
தீர்ந்தது! ஆஸ்பெஸ்டாஸ் கூரையல்லாமல் வெளிச்சம் வருமாறு ஃபைபர் கண்ணாடி
பொருத்தியிருந்தார்கள்.

இன்றளவும் எனக்குப் பெரியவாதான் எல்லாமே! அவர் ஆணயின்படிதான் நான் எல்லா காரியங்களையும் செய்கிறேன். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற தீவிரமான நம்பிக்கை! அவர்தாம் என்
வாழ்க்கையின் ஒளிவிளக்கு! அவரை நினைத்தாலே என் கண்களில் நீர் பெருகும்! இதைவிட சிறந்த பாக்யம் உண்டா?

இதனை என்னுடன் பகிர்ந்தவர் என் நெருங்கிய சினேகிதி; இளம் வயதினள். பெரியவா பற்றிப் பேசும் போதெல்லாம் கண்களில் நீர்!

நான் அவளிடம் சொன்னேன்’இந்த அனுபவம் முற்பிறவியின் தொடர்ச்சியல்லாது வேறில்லை” என்று.

ஜய ஜய சங்கரா……

Exit mobile version