Sage of Kanchi

ஒட்டிய பழமும்-ஒட்டாத பழமும்

Thanks Sri Varagooran Mama for the share…

சொன்னவர்-ஸ்ரீமதி லலிதாராமன்
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

periyava-chronological-444

எனக்கு 1958-ல் விவாகம் நடைபெற்றது. என் கணவர் ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்து வந்தார். சில வருடங்கள் கழிந்தும் எனக்கு புத்திர பாக்கியம் ஏற்படாததினால் என்னை என் தாயார் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாசுவாமிகளை தரிசிக்க அழைத்துச் சென்றார்கள்.

அது மாலை வேளை.ஸ்ரீ காஞ்சி மஹாசுவாமிகள் மேனாவில் அமர்ந்தபடி ஜபம் செய்து கொண்டு இருந்தார்கள். சிறிது நேரம் சென்றது. பிறகு பெரியவர் எல்லையில்லாத கருணையுடன் நோக்கினார். எனது தாயார் எனது மனக்குறையை ஸ்ரீ பெரியவரிடம் விக்ஞாபித்தார். ஸ்ரீ பெரியவா தன் அருகில் இருந்த பழத்தட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து தாமரை போன்று மலர்ந்து இருக்கும் தனது இரு நேத்திரங்களையும்
மூடித் தியானித்தபடியே,அந்தப் பழத்தைத் தனது இரு நேத்திரங்கள் மீது உருட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்துக் கண் மலர்ந்தது.அந்தப் பழத்தை என்னிடம் கொடுத்து,’இதை நீ சாப்பிடு’ என்றார்கள்.

நானும் மிக்க மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்று அந்தப் பழத்தைச் சாப்பிட்டேன்.

ஆன்டுகள் பல உருண்டோடிவிட்டன. எல்லை காக்கும் பணியில் என் கணவர் மேஜராகப் பணி புரிந்து வந்தார்.விடுமுறையில் வந்த அவருடன் ஸ்ரீ மஹாசுவாமிகளை தரிசிக்க ஸ்ரீ காஞ்சி மடம் சென்றோம்.

சாயங்கால வேளை.அந்தக் கருணை தெய்வம் தன் இருப்பிடத்தை விட்டு வெளியில் வந்து எங்களை வாத்ஸல்யத்துடன் வரவேற்று என்னை எல்லையற்ற அபிமானத்துடன் நோக்கி.
“வாம்மா,குழந்தே! உள்ளே வா!” என்று கூறி உள்ளே அழைத்துச் சென்று அமரச்செய்தார்கள்.

என் கணவரை நோக்கி, “நீ ராணுவத்தில்தானே இருக்கிறாய்?” என்று வினவ,என் கணவரும், “ஆம்,நான் சிலிகுரியில் இருக்கிறேன்” என்றார்.

பெரியவா “அங்கு ஆரஞ்சுப் பழம் கிடைக்குமா? எனக்கு ஒரு கூடை அனுப்புவாயா?” என்று கேட்க இவரும் “சரி” என்று கூறினார்.

ஸ்ரீ காஞ்சி மஹாப்பெரியவர் என்னை நோக்கி “ஆரஞ்சுப் பழத்தில் இரண்டு விதங்கள் இருக்கின்றன உனக்கு தெரியுமோ?” என்றார்.

நான் “தெரியாது” என்றேன்.

பெரியவர் கூறினார்’ “ஆரஞ்சுப் பழத்தில் இரண்டு விதங்கள் உண்டு.ஒன்று தோலுடன் ஒட்டிக் கொண்டிருக்கும்.மற்றொன்று (தன் கையில்  பழத்தை வைத்திருப்பதுபோல் பாவனையாக தனது காது அருகில் எடுத்துச் சென்று கையை ஆட்டி) இந்த மாதிரி குடுகுடு என்று தோலுடன் ஒட்டாமல் ஆடும். தோலுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பழத்தைவிட இந்தப் பழம்தான் மிக ருசியாகவும் தித்திப்பு உள்ளதாகவும் இருக்கும். இதை
எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள் என்றார்கள்.

முதலில் ஒரு பழத்தை சாப்பிடச்செய்து,பிறகு பல வருடங்கள் கழித்து ‘ஒட்டாத பழம்தான் ருசி’ என்று கூறி ஒரு மகத்தான தத்துவத்தை உணர்த்தி விட்டார். ஒட்டாத பழம்போல் பற்றற்று இருக்கவேண்டும் என்பதைக் கற்பித்து விட்டார்.

“வா அம்மா குழந்தே” என்று கூறி என்னை தன் குழந்தை ஆக்கிவிட்டார். நானே அவர் குழந்தை ஆன பின்பு எனக்கு எதற்கு ஒரு குழந்தை?

 

Exit mobile version