Thanks to Sri Sundaram Iyer and Sri P Swaminathan for the source.

பிரதான சாலையில் இருந்து காஞ்சி ஸ்ரீமடத்துக்குள் அடியெடுத்து வைத்தவுடன் குறுகிய வாசலைக் கடந்து நடந்து, வலப் பக்கம் திரும்பி ஸ்ரீசந்திர மௌலீஸ்வரரைத் தரிசித்து விட்டு அப்படியே சந்து போன்ற இடத்தில் கொஞ்சம் நடந்து இடப்பக்கம் திரும்பி நடந்தால் கலியுக தெய்வமான காஞ்சி மகா ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தைத் தரிசிக்கலாம். அந்த மகானின் ஆசி பெறலாம்.
தரிசனம் முடிந்து இந்த அதிஷ்டானத்தை வலம் வரும்போது வலத்தின் முடிவில் ஒரு கண்ணாடி அறைக்குள் பிரதிஷ்டை ஆன மகாபெரியவாளின் ஃபைபர் சிலை ஒன்றை தரிசித்திருப்பீர்கள். சாட்சாத் மகா பெரியவாளே ஒரு கண்ணாடி அறைக்குள் குத்துக் கால் போட்டு அமர்ந்த நிலையில் நம்மை ஆசிர்வதிப்பது போன்ற தத்ரூபமான தோற்றத்தை இந்த சிலை ஏற்படுத்தும். பரவசம் தரும் இந்த திருவடிவத்தை எந்த ஒரு பக்தரும் மிஸ் செய்திருக்க மாட்டார்கள்.
பல பக்தர்கள், இந்த சிலையின் முன்னால் நின்று அந்த ஆச்சார்ய ஸ்வாமிகளுடன் நேருக்கு நேர் பேசுவது போல் தங்களது பிரார்த்தனைகளை மனதில் இருந்து இறக்கி வைக்கிறார்கள். இன்னும் சில பக்தர்கள் மனமுருகி கண்ணீர் மல்கப் பேசிக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கலாம்.
பலரையும் புருவம் உயர்த்த வைக்கும் இந்த அற்புதமான ஃபைபர் சிலையை வடிவமைத்த பாக்கியவான் – மேற்கு வங்காள மாநிலம் புர்லியாவில் வசித்து வரும் துர்பா தாஸ் என்ற கலைஞர். இந்த சிலையை வடிவமைப்பதற்கு முன் மகாபெரியவாளுக்கும் துர்பா தாஸுக்கும் ஸ்நான ப்ராப்தி கூடக் கிடையாது. பெரியவாளின் புகைப்படங்களை மட்டும் பார்த்து மனம் ஒன்றி, அவர் வடித்த வடிவம் இது.
பெரியவா ஸித்தி ஆன பிறகும், அவரை நேரில் பார்த்து தரிசனம் செய்வது போன்ற ஆனந்தத்தை அவரது பக்தர்கள் பெற வேண்டும் என்கிற நோக்கில் இந்தச் சிலையை காஞ்சி ஸ்ரீமடத்துக்கு அளித்துப் புண்ணியம் பெற்றவர் – மகா பெரியவாளின் பக்தரும், காஞ்சி ஸ்ரீமடத்தின் அத்யந்த தொண்டருமான பெங்களூரு வி.எஸ்.ஹரி.
தனது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தான் நம்மை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு ஸ்ரீசந்திரமௌலீஸ்வரரின் திருவடியில் கலந்தார் மகாபெரியவா.
திருவையாறுக்கு அருகில் தன் தாயார் மஹாலட்சுமி அம்மாளின் சொந்த ஊரான ஈச்சங்குடியில் அமைந்துள்ள அவரது பூர்வீக கிரஹத்தை ஒரு பாடசாலையாக மாற்றிப் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மகாபெரியவாளுக்கு இருந்து வந்தது. மகாபெரியவா ஸித்தி ஆன தினத்தன்று காலை இது குறித்துப் பேசுவதற்கும் மகாபெரியவாளைத் தரிஸிப்பதற்கும் வந்திருந்தார் வி.எஸ்.ஹரி.
மகாஸ்வாமிகளின் பரிபூரண ஆசியோடும், அனுக்ரஹத்தோடும் ஈச்சங்குடி பாடசாலைத் திருப்பணிகளைத் துவங்குவதற்கு அவரிடம் ஒப்புதல் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார் ஹரி. இது நடந்து பிற்பகல் நெருங்கும் வேளையில் சரியாக ஓரிரு மணி நேரம் கழித்து மகாஸ்வாமிகள் ஸித்தியடைந்து விட்டார்.
இது குறித்து திருவி.எஸ்.ஹரி கூறும்போது ‘அடிக்கடி மஹாபெரியவா கூட ரொம்ப நேரம் இருந்தேன். நான் அங்கிருந்து திரும்பிய சில மணித்துளிகளில், அவர் ஸித்தி ஆன தகவல் கிடைத்தது. கடைசி நேரத்தில் நாம் தரிசித்த அந்தத் திருவுருவத்தை என்றென்றும் பக்தர்கள் தரிசிக்கும்படி செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் ஏற்பட்டது. அதன் விளைவு தான் – பெறற்கரிய பொக்கிஷமான இந்த ஃபைபர் சிலையை மேற்கு வங்காள மாநிலத்தில் தயார் செய்தேன். என் வாழ்க்கையிலேயே இது ஒரு பெரும் பேறு என்று சொல்வேன்.
மஹாபெரியவா ஸித்தி ஆன முதலாம் ஆண்டு தினம் அதே வருட (1994) இறுதியில் வந்தது. அந்த தினத்துக்குள் ஃபைபர் சிலையை பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று தீர்மானித்து அதன்படி நடத்தியும் விட்டேன். மேற்கு வங்க மாநிலம் புர்லியாவில் இருந்து நான் கொண்டு வந்த சிலையை ஸ்ரீஜயேந்திரரிடம் முதலில் காண்பித்தேன். பிரமித்துப் போனார். பார்த்த மாத்திரத்தில் அவருக்குப் பேச்சே எழவில்லை. ‘இவ்ளோ தத்ரூபமா பண்ணி இருக்கானே’ என்று எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டார்.
மஹாபெரியவாளின் தாயார் திருமதி மஹாலெட்சுமி அம்மாளின் சொந்த ஊர் – ஈச்சங்குடி. திருவையாறுக்குக் கிழக்கே சுமார் ஆறு கி.மீ.தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது.
மஹாலட்சுமி அம்மாளின் ஈச்சங்குடி இல்லத்தை ஒரு பாடசாலையாக மாற்றவேண்டும் என்று மகாபெரியவாளுக்கு நீண்ட நாட்களாகவே ஓர் ஆசை இருந்து வந்தது. தான் உடல்நலம் குன்றி இருந்த காலகட்டத்தில் ஸ்ரீஜயேந்திரரிடமும் ஸ்ரீவிஜயேந்திரரிடமும் இந்தப் பாடசாலைப் பணியைத் துரிதப்படுத்துமாறு மகாபெரியவா சொல்லி இருக்கிறார். அதன்படி மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களின் பொருளுதவியுடன் அத்யந்த பக்தர்களின் பொருளுதவியுடன் இந்தப்பாடசாலைப் பணிகள் பூர்த்தியாகி உள்ளன. எத்தனையோ பக்தர்கள் தங்கள் வீடு விற்றதில் இருந்து கிடைத்ததையும், சேமிப்பில் இருந்தும் கொடுத்து இந்த மகாதொண்டுக்கு உதவி இருக்கிறார்கள். மகா பெரியவாளின் ஆசிர்வாதத்தோடு இந்தப் பாடசாலை இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடசாலை அமைவதற்குத் தன்னால் இயன்ற ஒத்துழைப்பை நல்கி இருக்கிறேன்” என்று கூறுகிறார் திரு.வி.எஸ்.ஹரி.
மஹாலட்சுமி அம்மாள் இருந்த வீட்டையே மாற்றி, கீழ்த்தளம், மேல்தளம் என்று பாடசாலை மாணவர்கள் தங்கிக் கல்வி கற்பதற்கு ஏற்ற வகையில் கட்டி இருக்கிறார்கள்.
மகாபெரியவா விருப்பப்பட்ட ஆசை விரைவில் நிறைவேறியிருப்பது அவரது அத்யந்த பக்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி தான்.