Sage of Kanchi

பெரியவாளும் பிரதோஷம் மாமாவும்

Thanks Karthi for a wonder article about mama.

Pradosham Mama

பெரியவாளிடம் பக்தியோ பக்தி என்று பரம பித்தாக இருந்தவர் பிரதோஷம் மாமா. அவருடைய கோபமும் அஸாத்தியமானது! தனக்கென்று ஏதும் நடக்கவில்லை என்று கோபம் வராது. பெரியவா கைங்கர்யத்தில் ஏதாவது சின்னதா தப்பு வந்துவிட்டால் போச்சு! சம்பந்தப்பட்ட பாரிஷதரை, பக்தரை வறுத்து வாயில் போட்டுக் கொண்டு விடுவார். இது எல்லாருக்கும் தெரியும். முக்யமாக பெரியவாளுக்கு ரொம்ப நன்றாகவே தெரியும். பெரியவாளும் சளைத்தவரா என்ன? மாமாவின்… கோபத்தை சாந்தப்படுத்த பலவித யுக்திகளை கையாண்டு ஜெயித்தும் விடுவார்! இது பக்தருக்கும் பகவானுக்கும் ரொம்ப சஹஜமாக அடிக்கடி நடக்கும் வாடிக்கையான விஷயம்.

பிரதோஷம் மாமா ரொம்ப நாளாக பெரியவாளை தர்சனம் பண்ண வரவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை. ஒருநாள் அவர் வீட்டுக்கு பெரியவாளின் பக்தரான கடம் வித்வான் விநாயக்ராம் வந்தார். மாமா அவரிடம் தன் மனக்குறையை சொன்னார்……….

“இப்பல்லாம் எனக்கு எல்லார்கிட்டயும் ரொம்ப கோவம் வருது. ரொம்ப கோவிச்சுக்கறேன். முன்னெல்லாம் என் கோவத்துக்கு பயந்துண்டு அவாளும் ஒழுங்கா இருந்தா…..ஆனா, இந்த கோவம் இப்போ ரொம்ப சாதாரணமா போயிடுத்தா……அதுனால யாரும் என் கோவத்தை பொருட்படுத்தறதே இல்லே! இதே இவனுக்கு வழக்கமா போய்டுத்துன்னு நெனைக்க ஆரம்பிச்சுட்டா போலருக்கு. பெரியவாகிட்ட கோவிச்சுண்டா……அவர் யாரையாவது அனுப்பிச்சு என்னை சமாதானப் படுத்திடறா! அவருக்கும் என் கோவம் ரொம்ப பழகிப் போய்டுத்து………. பாரேன்!…….கிட்டத்தட்ட மூணு மாசமா நான் பெரியவாளைப் பாக்கவே இல்லே! இந்த கோவத்தை எப்பிடியாவது கொறைக்கணும்…ன்னு நானும் படாதபாடு பட்டுண்டு இருக்கேன்.” ……….என்று கூறிக்கொண்டிருக்கும் போதே…………

சைக்கிளில் வேகமாக வந்த ஒருத்தர் தன் கையில் இருந்த வில்வமாலையை ‘சட்டென்று’ மாமாவின் கழுத்தில் போட்டுவிட்டு புறப்பட்டார். அவரை நிறுத்திக் கேட்டபோது சொன்னார்…….

“அரைமணி நேரத்துக்கு முன்னால நான் பெரியவாளை தர்சனம் பண்ணப் போனேன்…..அப்போ, பெரியவா தன் கழுத்துல இருந்த இந்த வில்வ மாலையைக் கழட்டி எங்கிட்ட குடுத்து, “இதை இப்போவே கொண்டுபோய் பிரதோஷம் வெங்கட்ராமன் கழுத்துல போட்டுட்டு வா!..”ன்னு சொன்னா. அதான் வந்தேன்”

சற்றுமுன் அங்கலாய்த்துக் கொண்டிருந்த மாமாவின் கவலை போன இடம் தெரியவில்லை!

எல்லார் உள்ளும் பகவான் வசிக்கிறான் என்பது சத்யம். பகவான் தான் உள்ளே வசிப்பதை புரிய வைக்க என்று தனியாக எதுவும் பண்ணுவதில்லை. பக்தர்கள் அவனை உணருகிறார்கள். ஆனால் இது எல்லோருக்குமே சாத்தியமான ஒன்று. சுலபமானது அதே சமயம் மிக கடினமானது. நாம் செய்ய வேண்டிய ஒரே கார்யம்……..அப்யாசம்.

Exit mobile version